ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “பொது இடங்களில் மூக்கு நோண்டக்கூடாது” என்று தன்னுடைய முதல் நாவலை எழுத முற்பட்டவன் நான். பிறகு வந்தது ஸீரோ டிகிரி. இந்த இரண்டு நாவல்களுக்கும் தமிழில் முன்னோடி என்று எதுவும் இல்லை. நான் மரபார்ந்த இலக்கியத்தைக் கற்றிருக்கிறேன் என்றாலும் அந்தக் கல்வியை என் மொழியை செதுக்கிக் கொள்ளவே பயன்படுத்திக்கொண்டேன்.
இப்போது கவிதையிலும் அப்படித்தான். சங்க இலக்கியத்திலிருந்து இன்று வரையிலான கவிதை இலக்கியத்தைக் கற்ற போதிலும் அந்த மரபின் மொழியை மட்டுமே நான் என் கவிதைக்குப் பயன்படுத்திக்கொள்கிறேன். உள்ளடக்கத்திற்கான தாக்கங்கள் வேறு.
ஒரு இருபத்தைந்து பேரைச் சொல்லலாம். மெக்ஸிகோவில் எல்லோருக்கும் ஒக்தாவியோ பாஸைத் தெரியும். ஆனால் ஒக்தாவியோ பாஸ் பிறந்த அதே ஆண்டு பிறந்து மெக்ஸிகோவில் ஒக்தாவியோ பாஸ் அளவுக்குப் பிரபலமாக இருந்த எஃப்ரெய்ன் உவெர்த்தாவை (Efrain Huerta) உலகம் அறியாது. காரணம், அவர் நோபல் விருது பெறவில்லை. என் கவிதையில் தாக்கம் செலுத்தும் இருபத்தைந்து மேற்கத்திய கவிஞர்களில் உவெர்த்தாவும் ஒருவர். உவர்த்தாவின் குறுங்கவிதைகள் பல பன்னிரண்டிலிருந்து பதினைந்து வார்த்தைகளையே கொண்டிருக்கும். உதாரணம்:
Everything’s
Fucked
Up
Except
For
Love
***
First
of all:
I am very pleased
excited
to be
a good
second-class
poet
from
the Third
World
***
இதேபோல் மூன்று ஃப்ரெஞ்ச் கவிஞர்கள். Yves Bonnefoy, Jacques Roubaud, Anne Portugal. இதில் கடைசி இருவரும் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஜாக் ரூபோவுக்கு 93 வயுது ஆகிறது. இவர்களின் கவிதைகளைத் தேடிப் படித்துப் பாருங்கள்.
சமகாலத் தமிழ்க் கவிதையில் தர்மு சிவராமு, ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன் தொடங்கி இப்போதைய முகுந்த் நாகராஜன் வரை எனக்கு அநேகமாக எல்லோரையுமே பிடிக்கும். ஆனால் நான் அவர்களின் வரிசையில் வருபவன் அல்ல. இது குறித்து எனக்கு வந்த ஒரு கடிதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நண்பரும் கவிஞருமான பாரிசாகரன் எழுதிய கடிதம்.
வணக்கம் சாரு,
தங்கள் கவிதைகளை வாசித்தேன்.
எனக்கு முதலில் தோன்றிய விஷயம்,,இதற்குமுன் இப்படி யாரும்,தமிழில் கவிதைகள் எழுதியதில்லை என்பதுதான். இது ஒரு புது பாணி. புது நோக்கு. புது உள்ளடக்கம். புது வடிவம்.
இப்படி நிகழ்வதன் மூலம்,ஒரு மொழி,ஒரு தனித்துவமான ஆளுமையைக் கண்டடைந்துவிடுகிறது. நீங்கள்,கவிதையின் ஆன்மாவை உணர்ந்திருக்கிறீர்கள் என்பது புலனாகிறது .இவற்றைத் தொகுப்பாக்குங்கள். தமிழ்க்கவிதை வரலாற்றில் என்றென்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும்.கவிதைகளில்,தங்களது ஐம்பது அறுபது ஆண்டுகால தத்துவப் பரிச்சயமும்,இலக்கியப் பரிச்சயமும்,கலைப் பரிச்சயமும் மலர்ந்து பரிமளிக்கிறது.
கூடவே தாங்கள் கண்டடைந்த அனுபவங்களின் சாரமும்,அவற்றின்மூலம் உணர்ந்த ஞானமும் துலங்குகிறது. உணர்வுகளின் உக்கிர நடனமும்,மோனத்தின் மெல்லிய தென்றலும் என வான்கோவும்,புத்தனும் அருகருகே வருவதுபோல வாசித்த என் மனதில் விநோதமான தாக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்த கவிதைகளை, வாசித்து அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது.வாசித்தபின் பல காலங்கள் இவற்றின் தாக்கம்,வாசிப்பவரது ஆழுள்ளத்தில் நீடிக்கும்.தங்களுக்குள் இருக்கும் கவிஞனையும்,எழுத்துக் கலைஞனையும் என்றென்றும் என் ஆர்வம் பின்தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.
பாரிசாகரன்