என் கவிதைகளை முன்வைத்து… (2)

நேற்று எழுதியதன் தொடர்ச்சியாக இதைக் கொள்ள வேண்டும். 

1992ஆம் ஆண்டில் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை இயக்கி நடித்த போது நான் அகஸ்தோ போவால் (Augusto Boal) பெயரைக் கேள்விப்பட்டதில்லை.  ஆனால் நான் இயக்கியது போவாலின் இன்விஸிபிள் தியேட்டர் மற்றும் ஃபோரம் தியேட்டர் ஆகியவற்றின் செயல்வடிவம் என்பது பிற்பாடு தெரிந்தது.  எப்படியென்றால் –

என் நாடகத்தை விமர்சித்தவர்கள் ஏதோ நான் பித்துக்குளித்தனமாக விளையாடிவிட்டு வந்ததாக எழுதினார்கள்.  என்னுடைய கலை இலக்கியச் செயல்பாடுகள் அனைத்துக்கும் கோட்பாட்டு ரீதியான பின்னணியும் விளக்கங்களும் உண்டு. 

ரெண்டாம் ஆட்டம் பற்றி பலவிதமான விமர்சனங்கள் எழுந்த பிறகுதான் அகஸ்தோ போவாலின் நாடகக் கோட்பாடுகள் பற்றிப் படித்து அவருடைய முழுப் புத்தகத்தையே மொழிபெயர்த்தேன்.  அது தொடராக வெளி என்ற நாடகப் பத்திரிகையில் வெளிவந்தது. 

இப்போது நான் எழுதும் காதல் கவிதைகள் பற்றி விமர்சிப்பது துரதிர்ஷ்டவசமாக என் வாசகர் வட்ட நண்பர்கள். 

அவர்கள் பின்நவீனத்துவம் பற்றி ஒருவிதமாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.  அவர்களின் புரிதல் கடவுள் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் தாலிபான்களின் புரிதல் எப்படியோ அப்படியானதுதான் என்பது என் கருத்து. 

ஜாக் ரூபோ (Jacques Roubaud) (1932 – 2024) பற்றி நேற்று குறிப்பிட்டேன்.  1983இல் ரூபோவின் மனைவி முப்பத்தோரு வயதில் இறந்தார்.  அந்த மரணம் ரூபோவை வெகுவாக பாதித்தது.  நத்திங் என்ற ஒரு சிறிய கவிதையை எழுதி விட்டு முப்பது மாதங்கள் எதுவுமே எழுதாமல் இருந்தார் ரூபோ.  அதன் பிறகுதான் மரணத்தைப் பற்றியும் காதல் பற்றியும் பல வசன கவிதைகளை எழுதினார்.  நாம் நேசித்த ஒருவரின் மரணத்தினால் ஏற்படும் துக்கம், தனிமை, சூனிய உணர்வு ஆகியவை பற்றி ரூபோ எழுதிய அளவுக்கு உலகில் எந்த எழுத்தாளரும் எழுதியதில்லை என்று விமர்ச்கர்கள் கணிக்கிறார்கள். 

Jacques Roubaud

ரூபோ ஒரு கணிதவியலாளரும் கூட.  ரூபோ ஒரு மரபு சார்ந்த எழுத்தாளர் அல்ல.  பின்நவீனத்துவ எழுத்தாளராகவே கருதப்படுகிறார்.  இப்போது அவருடைய Some Thing Black என்ற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.