பெருமாள் முருகன் விவகாரம் (1)

ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், சுகன்யா, மனோரமா ஆச்சி, சலீம் கௌஸ் நடித்து 1992-இல் வெளிவந்து சக்கைப் போடு போட்ட சின்ன கவுண்டர் திரைப்படம் பிறகு பல ஆண்டுகள் கழித்து மாதொரு பாகன் என்ற பெயரில் ஒரு நாவலாக வெளிவரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.  ஆனால் முடிவை மட்டும் ஆபாசமாக, வக்கிரமாக, பொய்யும் புரட்டும் கலந்து மாற்றி விட்டார் பெருமாள் முருகன்.  பத்தாண்டு காலம் தமிழில் எதுவும் படிக்காமல் இருந்தது நல்லது தானோ என்று இப்போது நினைக்க வேண்டி இருக்கிறது.  தமிழில் படிக்க வேண்டும் என்று பத்து இருபது ஆயிரத்துக்குப் புத்தகங்களை வாங்கி வந்து திறந்ததுமே இந்த நோனாவெட்டி.  சகுனமே சரியில்லை.  திரும்பவும் ஆங்கிலத்தின் போய் விடலாமா என்று யோசிக்க வைக்கிறது இந்தக் கேவலமான புத்தகம்.  சின்ன கவுண்டரிலாவது கவுண்டமணி, செந்தில் இருவரும் பட்டையைக் கிளப்பி இருப்பார்கள்.  மாதொரு பாகனில் குழந்தை இல்லை குழந்தை இல்லை என்று ஒரே அழுவாச்சி தான்.

முடிவைப் படித்ததும் கொதித்துப் போனேன்.  பிற மதத்தினரைப் பற்றியோ பிற சாதிகளைப் பற்றியோ  ஒரு ஆள் இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா?   கருத்துச் சுதந்திரம் என்பது சக மனிதர்களை இழிவு படுத்துவதா?  கேவலம்.  உங்களுக்கு உங்களை இழிவு செய்து கொள்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது.  அதை பெ. முருகன் அறிக்கையின் மூலம் சீர்படச் செய்திருக்கிறீர்கள்.  மற்ற மனிதர்களைப் பற்றி, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்களைப் பற்றி இழிவு செய்ய என்ன உரிமை இருக்கிறது?

இது பற்றி என்னுடைய விரிவான கட்டுரையை  www.andhimazhai.com இல் இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம்.