வன்முறைத் தாக்குதல் குறித்து… (2)

நான் திரும்பத் திரும்ப வாசகர் வட்ட நண்பர்களைக் கூட்டத்துக்கு வருந்தி அழைத்துக் கொண்டிருந்தேன்.  எந்த அப்பனாவது மகனிடம் தயவு செய்து வந்து விடு, நீ வருவது எனக்கு ரொம்பப் பெரிய மாரல் சப்போர்ட்டாக இருக்கும் என்று கெஞ்சுவானா?  நான் கெஞ்சினேன். ஆனாலும் வந்தது ரெண்டு பேர்.  சுமார் (சுமார் தான். சரியாக எவ்வளவு என்று எனக்குத் தெரியாது) பத்து நிமிட நேரம் நாலைந்து ரௌடிகள் என் சங்கை அறுக்கப் போவதாக துள்ளிக் கொண்டிருந்த ரகளையை, கலாட்டாவை விடியோ எடுத்தீர்களா என்று கருப்பசாமியிடம் கேட்டேன்.  அவர் என் முகத்தைப் பார்த்தார்.  இதற்காகத்தான் உங்களை வரச் சொன்னேன்.  விடியோ பதிவு கூட நம்மிடம் இல்லை.  இப்போது அந்த ஆட்கள் எதுவுமே செய்யவில்லை என்று மறுக்கிறார்கள்.  நகர்ந்தால் நின்றால் அமர்ந்தால் புகைப்படம் எடுக்கும் நண்பர்களும் நேற்று சொந்த வேலையில் சென்று விட்டார்கள்.  அடிக்க வந்ததன் புகைப்பட ஆதாரம் கூட இல்லை.  இவ்வளவுக்கு எல்லார் கையிலும் ஸ்மார்ட் ஃபோன் உள்ளது.  இந்தப் பதிவுகளுக்காகத்தான் உங்களை வரச் சொன்னேன்.  இதுதான் மாரல் சப்போர்ட்.  என்னோடு சேர்ந்து அடி வாங்க உங்களை அழைக்கவில்லை.  புரிந்து கொள்ளுங்கள்.  புகைப்படம், விடியோ என்று ஒரு பதிவும் ஆதாரமும்  நம்மிடம் இல்லை.