தலித்தும் வன்னியரும் ஒன்னா?

வாசகி: என்ன சாரு, காத்தாலேர்ந்து உங்க ஃபோன் எங்கேஜ்டாவே இருக்கு?  பொதுவா அப்படி இருக்காதே?

சாரு: ஹிண்டுல ஒரு கட்டுரை வந்திருக்கு.  அதைப் பத்தி நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, அதனாலதான்.

வாசகி: அதுதான் எப்பவுமே எதாவது ஒரு பத்திரிகைலே உங்க ஆர்ட்டிகிள் வர்றதே, அதுலே என்ன விசேஷம்?

சாரு: இல்ல, இது அன்புமணி பத்திங்கறதாலெ கொஞ்சம் பரபரப்பாயிடுச்சு, தேர்தல் நேரமில்ல…

வாசகி: அன்புமணியா, யார் அது?

சாரு: பாமாக்கா தலைவர்.

வாசகி: பாமாக்காவா?  அப்டீன்னா?

சாரு: பாட்டாளி மக்கள் கட்சி.  பா… மா… கா…

வாசகி: ஓ… தலித் கட்சியா?

சாரு: மை காட்…  தலித் கட்சி இல்ல… அது விடுதலைச் சிறுத்தை… இது முன்னாலெ வன்னியர் கட்சியா இருந்து இப்போ பாட்டாளி மக்கள் கட்சியா வளர்ந்திடுச்சி…

வாசகி: ஓ, வன்னியரும் தலித் தானே?

சாரு: ஓ மைகாட்… வன்னியர் வேறே… தலித் வேறே…  ஆனா வாழ்க்கை என்னமோ ஒன்னுதான்… ஏழ்மை தான்… அதுல ஒரு வித்தியாசமும் கிடையாது.

வாசகி: ஓ, வன்னியரும் தலித்தும் ஒன்னு இல்லியா?  சரி, ஹிண்டு பார்க்கிறேன்.  பார்த்துட்டு கூப்பிடறேன்.

***

வாசகி:  சாரு, ஹிண்டுலே பார்த்தேன். இல்லியே?

சாரு:  இருக்கே?  இவ்ளோ பேர் படிச்சிருக்காங்களே?

வாசகி: அப்போன்னா அது வேற பேப்பரா இருக்க வேணா சான்ஸ் இருக்கு. ஹிண்டூல  வர்லே.  அது நிச்சயம்.

சாரு: இங்லீஷ் ஹிண்டூ இல்ல; நான் சொல்றது தமிழ் ஹிண்டு.

வாசகி:  நான் ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லே. தமிழ் ஹிண்டூலதான் பார்த்தேன்.  ஆர்ட்டிகிள் வர்லே.

சாரு: இல்லிங்க, நானே காலைலெ படிச்சேன்.

வாசகி: படிச்சேள் சரி.  அது ஹிண்டுவாங்கறது என்ன நிச்சயம்?  ஏன் சொல்றேன்னா நான் ஹிண்டுல ஒவ்வொரு பக்கமா பார்த்தாச்சு.  வர்லே.

சாரு: சரி, பேப்பர் இப்போ உங்க கைல இருக்கா?

வாசகி:  ஆமா, இருக்கு.

சாரு: பக்கம் எட்டைத் திருப்புங்க.  அங்கே இருக்கு.

வாசகி: இல்லியே?

சாரு: என்னது இல்லியா?

வாசகி: இல்லியே.

சாரு:  உங்க கைல இருக்கிற பேப்பர்ல என்ன தேதி போட்ருக்குன்னு பாருங்க, ப்ளீஸ்.

வாசகி: அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். இன்னிக்கு எட்டாம் தேதி.  கையிலேயும் எட்டாந்தேதி பேப்பர்தான் இருக்கு.

சாரு: அதுல அன்புமணி ஃபோட்டோ இருக்கா,  எட்டாம் பக்கத்துல?

வாசகி: அன்புமணி யாருன்னு என்னால ஐடெண்டிஃபை பண்ண முடியாதே?

சாரு: சரி, எட்டாம் பக்கத்துல ஒருத்தரோட படம் இருக்கா?

வாசகி:  ஆமா, ஒரு ஜெண்டில்மென் லெஃப்ட் ஹாண்டால தலைல கை வச்சிண்டிருக்கார்.

சாரு:  ஆஹா, அதுதான் அன்புமணி.  அதுதான் நான் எழுதிய கட்டுரை.

வாசகி:  என்னது?  அடப்பாவி! ஆமா, சாரு நிவேதிதான்னு எழுதி இருக்கறதே?  மை காட்.  என்ன அக்கிரம் இது, உங்க கட்டுரைல மிஸ்டர் அன்புமணி பிக்சரை போட்டுருக்கான்?

சாரு: அடடா, அன்புமணி பத்தின கட்டுரைல எப்படி என் ஃபோட்டோவைப் போடுவாங்க?

வாசகி:  அதெல்லாம் தெரியாது.  உங்க கட்டுரைல உங்க ஃபோட்டோ இருக்கறதுதான் நியாயம்.  இந்தப் பத்திரிகைகாராளே ரொம்ப மோசம்.