நல்ல சினிமா உருவாக என்ன செய்யலாம்?

Film appreciation ஐப் பொறுத்தவரை என்னுடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. மேற்குத் தொடர்ச்சி மலை நல்ல சினிமா இல்லை; ஆனால் எட்டுத் தோட்டாக்கள் ஒரு நல்ல பொழுது போக்கு சினிமா. எப்படி?

அதேபோல் உலக சினிமாவை எடுத்துக் கொண்டால் வெறுமனே ஈரான் சினிமா, குரஸவா என்று மட்டுமே கதைத்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. இல்லாவிட்டால் இண்டலெக்சுவல்களைப் போல் பெர்க்மன் பெர்க்மன் பெர்க்மன் என்றே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சினிமாவில் பலவிதமான genreகள் உள்ளன. ஹொடரோவ்ஸ்கியின் சினிமாவும் சினிமா தான். இதனால் எல்லாம் நான் யாருக்குமே புரியாத elitist சினிமா பற்றிப் பேசுகிறேன் என்று புரிந்து கொள்ளக் கூடாது. சினிமாத் துறையில் இருப்பவர்களுக்கு தான் பணியாற்றக் கூடிய கலைத்துறை பற்றிய சகல விபரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழில் ஏன் தேவ் டி போன்ற ஒரு படம் எடுக்கப்படவில்லை? சரி, அதை விடுங்கள். ஏன் இங்கே ஒழிவுதிசத்தக் களி போன்ற ஒரு படம் வருவதற்கான சாத்தியமே இல்லாமல் இருக்கிறது? தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும் என்று ஒரு மலையாளப் படம் சென்ற ஆண்டு வந்தது. எவ்வளவு சுவாரசியமான, அருமையான படம்! அதைப் போன்ற ஒரு படத்தை எடுக்க நமக்கு முறையான சினிமா ரசனை கிடைக்க வேண்டும். இங்கே நல்ல சினிமா எடுக்க முனைபவர்களின் முயற்சிதான் படு மோசமான தோல்வியை அடைகிறது. அதனால் ஒவ்வொரு ஞாயிறும் அருணின் ப்யூர் சினிமா அரங்கில் சினிமா ரசனை குறித்த ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகிறேன். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை. மற்ற விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த முயற்சிக்காக கடந்த இரண்டு தினங்களாக இதே வேலையாகக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், சினிமா என்பது கடல். அதை ஐந்தே வாரத்தில் கொடுக்க வேண்டும் என்பதால் எதைச் சேர்ப்பது, எதை விடுவது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது…

சாரு நிவேதிதாவின்

கதை – சினிமா – ரசனை – பயிற்சிப்பட்டறை

30-09-2018, ஞாயிறு, காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை.

நுழைவுக்கட்டணம்: 500 ரூபாய்

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடி. கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாகக் கண்டடையலாம்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405.

நணபர்களே, பியூர் சினிமாவும், சாப்ளின் பிலிம் அகாடெமியும் இணைந்து நடத்தும் தொடர் பயிற்சிப் பட்டறைகள் பியூர் சினிமா அரங்கில் ஒவ்வொரு வாரமும் நடந்து வருகிறது. படத்தொகுப்பாளர் லெனின் பயிற்சிப் பட்டறைக்கு அடுத்து, சாரு நிவேதிதா அடுத்த ஐந்து வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிறும் சினிமா ரசனை சார்ந்த பயிற்சி ஒன்றினை நடத்த இருக்கிறார். இதுவரை இல்லாத அளவில் மிகச் சிறப்பாக கதையிலிருந்து சினிமா, சினிமாவிலிருந்து ரசனை என்று மிக மேம்படுத்தப்பட்ட, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு வகுப்பாக இது நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் எந்தத் திரைப்படக் கல்லூரியிலும் இது போன்ற ஒரு பயிற்சியோ வகுப்போ நடைபெறுவதில்லை. லட்சக்கணக்கில் பணம் கட்டிப் படித்தாலும், இப்படியான சினிமா ரசனை பயிற்சி கொடுக்கப்படுவதில்லை. நல்ல சினிமா எடுக்க விரும்பும் படைப்பாளிக்கு முதலில் தேவை சினிமா ரசனை சார்ந்த புரிதல். அதனைத் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சாருவின் இந்தப் பயிற்சிப் பட்டறையும் நடக்க இருக்கிறது.

பியூர் சினிமா அரங்கில் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறைக்குக் குறைந்தபட்ச கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். தொடர்ந்து ஐந்து வாரங்கள் நடக்க இருப்பதால், ஐந்து வாரங்களும் தொடர்ச்சியாகப் பங்கேற்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்திற்கும் நுழைவுக்கட்டணம் 500 ருபாய். பியூர் சினிமா ஒரு வணிக நோக்கமற்ற சமூக தளம். ஆனால் சமூகத்தில் எல்லாவற்றிற்கும் பணம் தேவை, பியூர் சினிமா தொடர்ந்து இயங்க அதற்குப் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. அதனை இப்படியான பயிற்சிப் பட்டறைகள் நடத்தி சரி செய்ய இயலுமா என்கிற தேடலே தொடர் பயிற்சிப் பட்டறைகள் நடத்த காரணம். ஆனாலும் எல்லா வகையான நண்பர்களும் பங்கேற்க வேண்டும் என்கிற நோக்கிலேயே மிகக் குறைந்த அளவில் நுழைவுக்கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இதில் பங்கேற்கும் சாருவுக்கும் பியூர் சினிமா, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் மீதான பிரியமும், அதன் தேவையும் மட்டுமே பிரதானம். யாருக்கும் பெரும் சிரமம் இல்லாமல், பெரும் வணிக நோக்கமில்லாமல் நடைபெறும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகளை நண்பர்கள் ஆதரிக்க வேண்டும். அதிகபட்சம் 50 நண்பர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே முதலில் பணம் செலுத்தி முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கே முன்னுரிமை. உடனே பணம் செலுத்தி உங்கள் இருக்கையை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405.

***
மேற்கண்ட குறிப்பு அருண் அனுப்பியது. 23 ஞாயிறு அன்று நடந்த அறிமுக வகுப்புக்கு பத்து இருபது பேர்தான் வருவார்கள் என்று நினைத்தேன். 200 பேர் வந்திருந்தனர். ஆனால் அறையில் 50 பேர்தான் அமர முடியும் என்பதால் தாமதமாக வந்த அனைவரும் திரும்ப நேர்ந்தது. அதையும் மீறி பத்து இருபது பேர் அறையில் நின்றபடியே உரையைக் கேட்டனர். அதைப் போலவே இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு 500 ரூ. செலுத்தி முன்கூட்டியே உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். 30-ஆம் தேதி சந்திப்போம்…