தேர்தல் களம் – 1

திமுக தலைவர் ஸ்டாலின் மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு.  காரணம், ஐந்து முறை முதல் மந்திரியாக இருந்த ஒரு தலைவரின் புதல்வரால் 66 வயது ஆகியும் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லையே என்பதால் ஏற்பட்ட உணர்வு.  அது மட்டும் அல்ல; ஓ. பன்னீர்செல்வம் 2001-இல் முதல்வரான போது அவர் பெயரே யாருக்கும் தெரியாது.  பின்னர், 2014-இல் முதல்வரான போது கூட அதுதான் நிலை.   தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட முதல்வராவதற்கு முன் அத்தனை பிரபலம் இல்லை.  ஜெயலலிதாவின் நூற்றுக்கணக்கான பெயரற்ற விசுவாசிகளில் ஒருவராகவே இருந்தார் அவர்.  திமுகவைப் போல் அதிமுகவில் தனித் தனி ஆளுமைகள் என்றெல்லாம் கிடையாது. குறைந்த பட்சம் ஜெயலலிதா இருந்தவரை.  ஆக, அவ்வளவு பிரபலம் இல்லாத பன்னீர்செல்வம், பழனிச்சாமி போன்றவர்களெல்லாம் முதல்வராகும் போது தனிப் பாரம்பரியம் கொண்ட ஒரு மாபெரும் கட்சியின் தலைவரின் புதல்வரால் ஏன் முதல்வர் ஆக முடியவில்லை?  அதிலும் 50 ஆண்டு கால அரசியல் அனுபவர் உடையவர் ஸ்டாலின்.

இங்கே எனக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் ஞாபகம் வருகிறது.  க்யூபா, ஹெய்த்தி, டொமினிகன் ரிபப்ளிக் ஆகிய மூன்றையும் கரீபியன் நாடுகள் என்று சொல்வார்கள்.  இதில் டொமினிகன் ரிபப்ளிக்கின் அதிபராக இருந்தவர் ரஃபேல் த்ருஹியோ (Rafael Trujillo).  31 ஆண்டுகள் கொடும் சர்வாதிகாரியாக இருந்த அவரைக் கொன்று விட்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் போட்டார் ராணுவத் தளபதி.  அவருக்குத் துணையாக சில உயர்மட்ட ராணுவ அதிகாரிகளும் செயல்பட்டனர். திட்டப்படி த்ருஹியோ கொல்லப்பட்டார். ஆனால் தளபதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.  காரணம், அதிபரைக் கொன்ற உடனேயே அதிபரின் ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்து விட்டு ஆட்சியில் அமரும் திறமையும் வேகமும் தளபதிக்கு இல்லை. ராணுவப் புரட்சி செய்தவர்களைக் கொன்று விட்டு த்ருஹியோவின் நாற்காலியில் அவர் புதல்வரை உட்கார வைத்து விட்டார்கள் அவர் ஆதரவாளர்கள்.  காலியாகி விட்ட நாற்காலியில் அமரும் திறமையில்லாத அந்தக் கரீபிய நாட்டுத் தளபதியைப் போலவேதான் இருக்கிறார் நம்முடைய திமுக தளபதியும்.

தளபதியை நோக்கி அதிக பிரபலம் இல்லாத ஒரு அதிமுக மந்திரி கேட்கிறார்: ”எங்களைப் பார்த்து பாஜகவின் அடிமை என்கிறீர்களே?  சென்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை அடைந்து பெரும்பான்மையான சீட்டுகளை வைத்திருக்கும் பாஜகவுக்கு நாங்கள் கொடுத்தது ஐந்து சீட்டுகள்.  ஆனால் சென்ற தேர்தலில் படு தோல்வி அடைந்து வெறும் 44 சீட்டுகளையே பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் 10 சீட்டுகளைத் தந்திருக்கிறீர்களே, நீங்கள் அடிமையா? நாங்கள் அடிமையா?”

ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான குணங்கள் இரண்டு: 1. தேர்தல் வியூகத்தை அமைக்கும் கூர்மை 2. மனோதிடம்.  இந்த இரண்டும் ஸ்டாலினிடம் இருந்தால் அவர் முதல்வர் நாற்காலியில் அமரலாம்.  சென்ற சட்டசபைத் தேர்தலில் கூட திமுக தன் வியூகத்தைச் சரியாக அமைத்திருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்கலாம். ஆனால் அப்போதும் டொமினிகன் ரிபப்ளிக் ராணுவத் தளபதி செய்த தவறையே திமுக தளபதி செய்தார்.  அப்போது தேசம் பூராவும் மோடி அலை வீசிக் கொண்டிருந்தது.  காங்கிரஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.  அந்த நேரத்தில் மக்களின் நாடித் துடிப்பை உணராமல் காங்கிரஸுக்கு 41 சீட்டுகளை வாரி வழங்கினார் ஸ்டாலின்.  அதற்கு முன்னால் 2011 தேர்தலிலும் இதே தவறுதான் நடந்தது.  அப்போது காங்கிரஸுக்குத் திமுக கொடுத்தது 63 சீட்டுகள்.  2011இல் திமுக படு தோல்வி.  அதில் கிடைத்த பாடத்தை ஸ்டாலின் 2016 தேர்தலில் மறந்து விட்டார்.  கணக்கை தப்பாகப் போட்டார்.  சரியாகப் போட்டிருந்தால் இந்நேரம் ஸ்டாலின் தான் முதல்வர் நாற்காலியில் இருந்திருப்பார்.

இவ்வளவுக்குப் பிறகும் ஸ்டாலின் பாடம் கற்றாரா இல்லையா என்பதை அடுத்து பார்ப்போம்.

நன்றி: தினமலர்

***

இனி சாருஆன்லைன் இணையதளத்தில் தொடர்ந்து எழுதுவேன்.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai