பப்புவின் மறைவு…

நேற்று இரவு முகநூலில் எழுதிய குறிப்பு இது:

12 ஆண்டுகளாக என்னோடும் அவந்திகாவோடும் வாழ்ந்த பப்பு இன்று உயிர் நீத்தது. என்னை அதன் மரணத் துயரத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மூன்று மாதமாக உயிருக்குப் போராடி எங்கள் இருவருக்கும் பயிற்சி அளித்தது. அப்படியில்லாமல் ஸோரோ திடீரென்று ஒருநாள் இறந்து போனதால் மூன்று மாதம் நான் பைத்தியமாக வாழ்ந்தேன். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனேன் என்பது கூட பிரச்சினை இல்லை. மூளை கலங்கிப் போனதுதான் கொடூரமாக இருந்தது. பைத்திய நிலை என்பது மரணத்தை விடக் கொடூரமானது என்பதை உணர்ந்த மூன்று மாதங்கள் அவை. பப்பு அப்படியில்லாமல் மூன்று மாதங்களாக ரண வேதனையை அனுபவித்து எப்போதடா இது இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறும் என்று எங்களையே மரண தேவனை வேண்ட வைத்து, இன்று கடைசியாகப் பிரிந்து போனது. மூன்று மாதப் பயிற்சியால் எனக்கு வலி குறைவு. ஆனால் பப்பு அவந்திகா செல்லம். நான் ஸோரோவின் இழப்பினால் அனுபவித்த துயரத்தை அவந்திகா இப்போது அனுபவிக்கிறாள்.