கேள்வி பதில்

அன்புள்ள சாருவுக்கு,

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்று நீங்கள் ஒரு தொடர் எழுதியதால் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். சமிபத்தில், உங்களுடன் மிக பண்பாக உரையாடிய காந்தியவாதி தமிழருவி மணியனுக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய முதல் சிறுகதைக்கு கிடைத்த விருது. முதல் என்ற வார்த்தையை கவனிக்கவும். இதை முத்திரை சிறுகதையாக தேர்ந்தெடுத்தவர் அண்ணாச்சி வண்ணதாசன். அந்த கதையை நான் படித்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிட்ட ”மாற்றம்” சிறுகதையைவிட அற்புதமான கதை.

அந்த நிகழ்ச்சியில் காந்தியவாதி பேசிய பேச்சுதான் மிக முக்கியம். இன்றையை இளைஞர்கள் நா.பாவை தவிர வேறு யாரையும் படிக்காதீர்கள் என்று கட்டளையிட்டார். அண்ணாச்சி அந்த கதையைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்காக அவரை டால்ஸ்டாய் அளவுக்கு புகழ்ந்தார். அவர் ஒரு முறை டிரையினில் போகும் போது ”வண்ணதாசனின் கடிதங்கள்” என்ற புத்தகத்தில் ஒரு வரியை படித்துவிட்டு அரைமணி நேரம் அழுதாராம்.  ஏன் உதவி செய்ய வேண்டும்  என்று வாசகர் கேட்டக் கேளவிக்கு வண்ணதாசன் எழுதிய பதில்தான் அந்த வரி. அந்த வரி என்ன தெரியுமா?. ” நாம் எவ்வளவுதான் முயன்றாலும் நம் முலைக் காம்பை நாமே சப்ப முடியாது”. இந்த வரியை கேட்டுவிட்டு நான் அரை மணி நேரம் அழுதுக் கொண்டுயிருந்தேன்.

என் கேள்வி என்னவென்றால்; எனக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? உங்களைப் போன்ற எழுதாளர்களை படிக்கும் நான் ” நம் முலைக் காம்பை நாமே சப்ப முடியாது” போன்ற ஷேக்ஸ்பியரீயன்  வரிகளை எழுதமுடியவில்லையே ஏன்?.

இப்படிக்கு,
சத்தியமூர்த்தி
திருச்சி.

அன்புள்ள சத்தியமூர்த்தி,

மிக அவசரமாக ஒரு மொழிபெயர்ப்பு வேலையில் இருந்த போது உங்களுடைய இந்த சுவாரசியமான கடிதத்தைப் படித்தேன்.  பதில் எழுதாமல் இருக்க முடியவில்லை.  முன்பு மாத்ருபூதம் என்ற டாக்டர் பொதுமக்களின் செக்ஸ் சம்பந்தமான கேள்விகளுக்கு ஒரு தொலைக்காட்சியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா?  மக்களின் கேள்விகளைப் படிப்பவர் ஒரு அழமான பெண் டாக்டர், இல்லையா?  அதற்காகவே ஒரு மாபெரும் கூட்டம் அதைப் பார்த்தது.  அதில் மக்களுக்கு ஒரு கிக் இருந்தது.  உதாரணமாக, ”டாக்டர், நான் தினந்தோறும் ஒரு நடிகையை நினைத்து சுயமைதுனம் செய்கிறேன்.  அதனால் உடல்நலம் பாதிக்குமா?” இந்தக் கேள்வியை மன்னார்குடியிலிருந்து மயில்சாமி என்ற நேயர் கேட்டிருக்கிறார் என்று அந்தப் பெண் டாக்டர் வாயால் சொல்வதைக் கேட்டு மக்கள் இன்புற்றனர்.  மாத்ருபூதமும் செமயான பிராமண பாஷையில் வெளுத்துக் கட்டுவார்.  அப்போது எவனோ ஒரு தறுதலை, டாக்டர் நானே என் குறியை சுவைக்க வேண்டும் போல் இருக்கிறது.  என்ன செய்யலாம்? என்று கேட்டிருந்தான்.  அந்தக் கேள்வியையும் அந்தப் பெண் டாக்டர் படித்தார்.  அதற்கு மாத்ருபூதம் “அந்த மாதிரி ஆசனம் ஒன்னும் நான் கேள்விப்பட்டதில்லையே… நீங்க எதாவது ஏடாகூடமா பண்ணி முதுகெலும்பை ஒடைச்சிண்ட்ராதீங்கோ… “ என்று ஆரம்பித்து தன் கச்சேரியை ஆரம்பித்தார்.  அந்த வகையில் டாக்டர் மாத்ருபூதத்துக்கு இலக்கியச் சிந்தனை அவார்டு கொடுத்திருக்கலாம்.  நீங்கள் இ.சி. அவார்டு வாங்க என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.  எப்பவாவது என் நண்பர் நாஞ்சில் நாடனை சந்தித்தால் கேட்டுச் சொல்கிறேன்.

சாரு