பிரார்த்தனை/தொழுகை

அன்புக்குரிய சாரு,
முகநூலில் நீங்கள் விடுத்த அன்புக் கட்டளையை ஏற்று ‘தொழுகையின் அரசியல்’ வாசித்தேன். இறுதிப் பகுதியை வாசித்து முடிக்கும் வரை, இந்த படைப்பை ‘புனைகதை’ என்றே நான் நினைத்தேன். மொராக்கோவில் நடந்த உண்மைச் சம்பவம் என்ற தகவலை பின்குறிப்பில்தான் தெரிந்து கொண்டேன். சிறந்த வாசிப்பு அனுபவம் தந்த இந்தப் படைப்பின் சாரம் ‘தொழுகை’. “உங்களின் ‘தொழுகை’ உங்கள் ‘எழுத்து’ தான்” என்ற உணர்வு, இந்த படைப்பைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்டது. உடனடியாக நான் கண்ட தரிசனம் இதுவே.
படைப்பில் உள்ள கீழ்வரும் பத்தியில் ‘தொழுகை’க்கு பதிலாக ‘எழுத்து’ என்று மாற்றினால், அது எழுத்தாளனின் கூற்றாகவே எனக்கு ஒலிக்கிறது.
படைப்பில் வரும் பத்தி:

‘அகண்டகாரத்தை நோக்கி நான் தொழுகிறேன். இந்த வெளியுலகத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளவே தொழுகிறேன். இந்த உலகம் வேண்டாம் என்பதற்காக நான் தொழவில்லை. ஆனால் துவேஷக் கிணற்றின் அருகே நம்மை இழுத்துச் செல்ல முயலும் எண்ணங்களுக்கு எதிராகவே தொழுகிறேன். தொழுகைக்காக வாழவில்லை. தொழுகையில் வாழ்கிறேன். ஆதாயமடைவோம் என்ற நம்பிக்கையில் தொழவில்லை. வாழ்வின் களைப்புக்கெதிராகவே தொழுகிறேன். நம் குரல்வளையைக் கவ்விப்பிடிக்கும் சோர்வுக்கு எதிராகவே தொழுகிறேன். எனவே, எனதருமை நண்பனே, தொழுகை என்பது முழுக்க முழுக்க கைம்மாறு கருதாத ஒன்றாக இருக்க வேண்டும்.’’ இவ்வாறுதான் அந்த மரணக் குழியில் தனது பதினெட்டு ஆண்டுகளைக் கழித்ததாகக் கூறுகிறார் அஸீஸ்.சாருவின் ‘தொழுகை’ அவரது ‘எழுத்து’. அதை சாரு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
அன்புடன்,
கண்ணன்.வ

ஆகஸ்ட் 29. 2019.