ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் மாபெரும் விலைகுறைப்பு நேற்றோடு முடிவுக்கு வருவதாக இருந்தது. அதனால் ராம்ஜியோடு பேசினேன். அக்டோபர் ஐந்து வரை இந்தப் பெரும் விலைகுறைப்பை நீட்டிக்க முடியுமா என்று கேட்டேன். அவரும் உடனடியாகச் சம்மதித்தார். உடனே என் தளத்தில் அறிவிக்கிறேன் என்றேன். ஆனால் அறிவிக்க மறந்து விட்டேன். காரணம், நான் என்ன எழுதுகிறேனோ அதைக் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கோட்ஸேயாக வாழ முடியாது. ஆனால் காந்தியாக வாழ்ந்தால் அதற்குப் பிறகு கோட்ஸே பற்றிக் கதை எழுதினாலும் கோட்ஸேயாக வாழ முடியாது. (ஸக்கரியாவின் கோட்ஸே பற்றிய கதை ஒன்று அற்புதமானது. படித்துப் பாருங்கள்.) காந்தியாக மாறினால் அவ்வளவுதான். அது ஒருவழிப் பாதை. திரும்ப முடியாத பாதை. இப்போது அசோகா நாவலை எழுதிக் கொண்டிருப்பதால் அதில் வரும் குணாளனாக வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். குணாளன் ஒரு குட்டி புத்தன். டேய் பரதேசி, நீ புத்தனா என்று கேட்கும் கொசு. ஏம்ப்பா, ஆட்டோ சங்கராக வாழ முயற்சித்தால்தான் தப்பு. புத்தனாக வாழ முயற்சிப்பதால் என்னப்பா தப்பு? ஒரு முயற்சிதானே? முயற்சியில் தோல்வியும் அடையலாம் தானே? அந்த முயற்சியில் முந்தாநாள் தோல்வியடைந்து விட்டேன். கொசுவின் மீது கோபம் வந்து விட்டது. அதுதான் தோல்வி. கோபம் வந்ததால் நெஞ்சுவலி. எனக்கு இதயத்தில் பிரச்சினை என்பதால் நெஞ்சு வலி. அப்படி எதுவும் இல்லாதவர்களுக்குக் கூட கோபமோ வெறுப்போ வந்தால் உடலுக்குள் ஏகப்பட்ட எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். அது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமல் கூடப் போகலாம். ஆனால் கோபமும் வெறுப்பும் முதல் வேலையாகத் தன்னை ஏற்றுக் கொண்டவரை அழிக்கும் இயல்பு கொண்டது. இவ்வளவு தெரிந்த நாம் கொசுவின் மீது ஏன் கோபம் கொண்டோம்? சரி, சமநிலைப் படுத்தலாம் என்று நேற்று ஆறு மணி நேரம் – இரண்டு இரண்டு மணி நேரமாக – விபாஸனா என்ற தியானத்தில் அமர்ந்தேன்.
இந்த விபாஸனா தியானம் பற்றிப் பிறகு எழுதுகிறேன். ஒரு விஷயம் மட்டும் இப்போது சொல்லலாம். இது ஆதிகாலத்தில் பிராமணர்களால் செய்யப்பட்டு, பிறகு இதை ததாகதர் திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. ராம்ஜியிடம் விலைகுறைப்புத் திட்டத்தை நீட்டிக்கச் சொல்லி விட்டு விபாஸனாவுக்குள் மூழ்கி விட்டேன். இப்படி நான் தியானம் செய்வது பற்றி இதுவரை ராம்ஜியிடம் ஒரு வார்த்தை சொன்னதில்லை.
உடனே இது விஷயத்தைத் தளத்தில் அறிவிக்கிறேன் என்று சொன்னதால் ராம்ஜி இரண்டு முறை என் தளத்தைப் பார்த்திருக்கிறார். எந்த அறிவிப்பும் இல்லை. காயத்ரி அவர் நாவலில் மூழ்கி விட்டார் போலிருக்கிறது என்று சொல்ல, ராம்ஜி தியானம் கூட செய்து கொண்டிருக்கலாம் என்றாராம். டெலிபதி எப்படியெல்லாம் வேலை செய்கிறது!
இதோ இப்போது அறிவிப்பைக் கொடுத்து விட்டேன். அக்டோபர் ஐந்து மாலை வரை இந்த மாபெரும் விலைக்குறைப்புத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். இணைப்பு: