147. தமிழகமும் கேரளமும்…

எழுத்தாளனும் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் ரசிகனும் ஒன்று அல்ல; எழுத்தாளன் உணர்ச்சிவசப்படுகின்றவன்தான் என்றாலும் அவன் ஒரு புத்திஜீவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் கனத்த இதயத்துடன்… கட்டுரைகளின் சாரம்.  அதை எழுத்தாளர்களே புரிந்து கொள்ளாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை.  அவர்களுக்குப் புரியவில்லையே என்பதற்காக நான் அதையெல்லாம் எழுதாமலும் இருக்க முடியாது.  இந்த துக்கமெல்லாம் அடங்கினதும் எழுதலாமே என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனென்றால், யேசு அப்படிச் செய்யவில்லை.  வேதாகமத்தின் மத்தேயுவில் 16: 21-28 வசனங்களைப் பாருங்கள். யேசு தன் சீடர்களிடம் தான் ஜெருசலேமுக்குப் போய் அங்கே மூப்பராலும் பிரதான ஆச்சாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்.  யேசுவினிடத்தில் மிகுந்த பிரியங்கொண்ட பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டு போய், ஆண்டவரே, இப்படி உமக்கு நேரிடக் கூடாதே, நீர் ஜெருசலேம் போக வேண்டாம் என்று கடிந்து கொள்கிறான். யாராவது அறிந்தே இந்த அபாயத்தைத் தருவித்துக் கொள்வார்களா என்பது அவன் எண்ணம்.  அதற்கு யேசு அவனிடம் “சைத்தானே! நீ தூரப் போ… நீ எனக்கு இடைஞ்சலாக இருக்கிறாய்.  தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கின்றாய்” என்று பதில் சொல்கிறார்.  மேலும் அப்போது அவர் தன் சீடர்களிடம் சொல்லும் விளக்கம் யேசுவின் வசனங்களில் அதியற்புதமான ஒன்று.   ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால் அவன் தன்னைத்தானே மறுதலித்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு எனக்குப் பின்னால் வருவான்.  தன் ஜீவனை ரட்சித்துக் கொள்ள விரும்புபவன் அதை இழந்து போவான்; என் நிமித்தமாகத் தன் ஜீவனை இழக்கச் சித்தமாயிருக்கிறவன் அதைக் கண்டடைகிறான்.  மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்திக் கொண்டால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

சத்தியத்தின் வழி நடந்தால் காசு பணம் கிடைக்காமல் போகலாம்.  ஆனால் வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.  என் வாழ்வில் என்றைக்குமே சமரசங்கள் கிடையாது.  இதையெல்லாம் இன்னும் ஒரு மாதம் கழித்து எழுதியிருக்கலாம்தான்.  ஆனால் நான் பெரிதும் நம்பியிருந்த என் சக எழுத்தாளர்களே சினிமாவின் பின்னே போகும்போது நான் எப்படி வாயைப் பொத்திக் கொண்டிருக்க முடியும்? 

எல்லா தேசங்களிலும்தான் வணிக சினிமா இருக்கிறது.  நாமும்தான் ரசிக்கிறோம்.  அன்பே வா என்ற படத்தை நான் ஒரு ஐம்பது முறையாவது பார்த்திருக்கிறேன்.  இப்போது கூட இன்னொரு முறை பார்த்தாலும் சலிக்காதுதான்.  ஆனால் என்னால் ஒருபோதும் எம்ஜியாரை புரட்சித் தலைவர் என்று அழைக்க முடியாது.  இந்தத் தெளிவு ஒரு காமன்மேனுக்கு இருக்க வேண்டாம்.  இருந்தால் அவன் காமன்மேன் இல்லை.  ஆனால் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டாமா?  கடந்த நூறு ஆண்டுத் தமிழ் வரலாற்றில் எம்ஜியார் அளவுக்கு மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட ஒரு மனிதர் இருக்க முடியாது.  எம்ஜியார் பற்றி எழுதினால் என்னாலேயே கூட ஒரு ஆயிரம் பக்கம் எழுத முடியும்.  ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இருக்கின்றன.  எதுவுமே நம்புவதற்குக் கடினமானவை.  புருடா கதைகள் அல்ல. நேரடி சாட்சியங்கள்.  இயக்குனர் மகேந்திரன் பார்த்த சம்பவங்களை அவர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.  அதில் ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.  ரவீந்தர் என்று ஒருவர். வசனகர்த்தா என்று நினைக்கிறேன்.  முஸ்லீம்.  அவர் தன் திருமண அழைப்பிதழைக் கொண்டு போய் எம்ஜியார் வீட்டில் கொடுக்கிறார்.  கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி விட்டு உள்ளே போனவர் தன் தமையன் சக்ரபாணியிடம் ஒரு பெரிய பண முடிப்பைக் கொடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார்.  அந்தப் பணம் இப்போதைய மதிப்பில் ஒரு பத்து லட்சம் இருக்கும்.  தொகை மறந்து விட்டது.  சக்ரபாணி அவரைக் கிளம்பச் சொல்கிறார்.  ஆனாலும் ரவீந்தர் கிளம்பாமல் அந்தப் பணத்துடன் அங்கேயே எம்ஜியாருக்காகக் காத்திருக்கிறார்.  பல மணி நேரம் ஆகி எம்ஜியார் வெளியே வரும்போது ரவீந்தரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, உங்களைக் கிளம்பச் சொன்னேனே என்று சொல்ல, ரவீந்தர், உங்கள் பணத்தை விட உங்கள் ஆசீர்வாதம்தான் எனக்கு முக்கியம் இல்லையா என்கிறார்.  அதற்கு எம்ஜியார், நான் பிள்ளை இல்லாதவன், அதனால்தான் அண்ணனிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னேன் என்கிறார்.  எம்ஜியார் வீட்டில் (ராமாவரம் தோட்டம்) அவர் உயிரோடு இருந்தவரை தினமும் மூன்று வேளை நூறு பேராவது பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு பக்கம் சைவம், இன்னொரு பக்கம் மட்டன் பிரியாணி.  இதற்கு நேர் எதிராக இன்னொரு உச்ச நடிகர் (எம்ஜியார் காலத்தவர்).  அவரைப் பார்க்க இன்னொரு சோட்டா நடிகர் போயிருக்கிறார்.  உச்சம் தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை மேஜைக்குக் கீழே ஒளித்து வைத்துக் கொண்டதாம்.  கடைசி வரை சோட்டாவுக்குப் பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை.  அதேதான் இன்று வரை ஆண்டவரின் அலுவலகத்திலும் நடந்து கொண்டிருக்கிறது என்று சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள்.  எப்படி காமன்மேன் ஓட்டுப் போடுவான்? 

எம்ஜியார் ஒரு ஊருக்குப் போகிறார்.  அங்கே தன் தொண்டன் கஷ்டப்படுவதைப் பார்த்து ஒரு கத்தை பணத்தைக் கொடுத்து நன்றாகப் பிழைத்துக் கொள் என்கிறார்.  பிறகு அடுத்த ஆண்டு அங்கே சென்ற போது அவன் அதேபோல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து என்னய்யா விஷயம் என்று கேட்டால், உங்கள் கை பட்ட பணத்தை எடுத்து எப்படிச் செலவு செய்வது என்று அப்படியே பூஜை அறையில் வைத்திருக்கிறேன் என்றானாம்.  இப்படி ஒரு ஆயிரம் கதைகள்.  எல்லாவற்றையும் விட என் மனதைத் தொட்ட கதை ரெயின் கோட்டுக் கதை.  அப்போது எம்ஜியார் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியிருந்த காலம்.  முதல் படம் வந்திருந்தது.  காரில் போய்க் கொண்டிருந்தபோது, கடும் மழையில் ரிக்‌ஷாக்காரர்கள் மழையிலேயே நனைந்து கொண்டு செல்வதைப் பார்த்து அப்போதே 5000 ரெயின் கோட்டு வாங்கி மறுநாள் எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார்.  எப்போதோ ஒரு காலத்தில் தான் அரசியலில் சேர்ந்து முதல்மந்திரி ஆவோம் என்று நினைத்தா இதைச் செய்தார்?  வள்ளல்தன்மை அவர் குணம். 

இதெல்லாம் சரி.  அவரை அரசியல்ரீதியாக ஒரு எழுத்தாளன், புத்திஜீவி எப்படி அணுக வேண்டும்?  அவரால் தமிழ் சமூகம் என்ன பயன் அடைந்தது?  வயதானவர்களுக்கு உதவித் தொகை, பள்ளிச் சிறார்களுக்கு சில உதவித் திட்டங்கள் போன்றவை தவிர்த்து இந்தத் தமிழ் சமூகம் மேம்பாடு அடைவதற்கு அவர் செய்தவை என்ன? கல்வித் தரம் முன்னர் இருந்ததை விடத் தாழ்ந்ததுதான் மிச்சம். அவருடைய அடியாட்களுக்கு பொறியியல் கல்லூரிகள் வைக்க அனுமதி கொடுத்து அவர்களெல்லாம் கல்வித் தந்தையாக மாறினார்கள்.   இதுவா சமூக முன்னேற்றம்?  இலங்கையின் ஒரு குறிப்பிட்ட போராளிக் குழுவுக்கு மிகப் பெரிய ஆதரவையும் உதவியையும் செய்து தமிழினத்தின் அழிவுக்கு அவரும் அவரை அறியாமலேயே காரணமாக இருந்தார். அந்தக் குழு மற்ற போராளிக் குழு மொத்தத்தையும் சுட்டுக் கொன்றது.  இப்படி ஏராளமாக அடுக்கிக் கொண்டே போகலாம்.  இப்படி இன்று அல்ல, அந்தப் போராளிக் குழு உச்சத்தில் இருந்த போதே எழுதினேன்.  உயிருக்குத் துணிந்துதான் எழுதினேன்.  போட்டுத் தள்ளினால் போட்டுத் தள்ளட்டும் என்றே எழுதினேன்.  ஜெருசலேம் போனால் சிலுவைதான் கிடைக்கும் என்று தெரிந்தேதானே யேசு ஜெருசலேம் போனார்?  அதெல்லாம் நாம் என்ன சாமி கும்பிடுவதற்கா?  பின்பற்றுவதற்காக இல்லையா?  அடுத்து, ஜெயலலிதா போன்ற ஒருவரை உருவாக்கி விட்டது.  (இங்கே வந்து என்னிடம் கருணாநிதியின் வாரிசு அரசியல் என்று சொன்னால் எனக்குக் கெட்ட கோபம் வந்து விடும்.  நேற்று ஸ்டாலினின் நெல் கொள்முதல் கேட்டு நான் மிகுந்த மன உளைச்சலில் கிடக்கிறேன்.  என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதீர்கள்.) 

ஆக, தனிப்பட்ட வாழ்வில் மிக அற்புதமானவராக விளங்கினாலும் ஒரு ஒட்டு மொத்த சூழலில் அன்னாரின் பங்கு எத்தகையது என்று பார்ப்பதுதான் ஒரு எழுத்தாளனின், புத்திஜீவியின் கடமை.  இன்று தமிழ் சினிமா எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறது?  தமிழர்கள் அனைவருக்கும் சினிமாதான் உயிர் மூச்சு.  சினிமாதான் மதம்.  உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது சினிமாவின் பெயரால் இத்தனை அக்கிரமங்கள் நடக்கிறதா?  ஒரு பள்ளிக்கூட விழாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  சினிமா நடிகர்தான் அங்கே வருகிறார்.  அங்கே நடக்கும் கலை விழாவில் என்ன நடக்கிறது? சினிமா பாட்டு.  சினிமா பாட்டுக்கு சினிமா நடனம்.  வெளிநாட்டுத் தமிழ்ச் சங்கங்களில் என்ன நடக்கிறது?  சினிமா நடிகர், சினிமா பாடகர் நிகழ்ச்சி.  தீபாவளி பொங்கல் என்றால் தொலைக்காட்சியில் என்ன நடக்கிறது?  ஏழெட்டு சினிமாக்கள்.  சினிமா நடிகர் பேட்டிகள்.  ஒரு அரசியல் போராட்டம் என்றால் என்ன நடக்கிறது?  சினிமா நடிகர், இயக்குனர்தான் அதை முன்னெடுத்துச் செல்கிறார்.  சென்னையில் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் இங்கே சிறை சென்றது இயக்குனர் அமீர்.  இப்போதும் தினந்தோறும் விவாதங்களில், பத்திரிகைகளில் இடம் பெறுவது நடிகர் சூர்யா.  போராளி என்றால் சூர்யா.  அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரலாமா வேண்டாமா?  நீதிபதிகள் விவாதம்.  தலைப்புச் செய்தி.  கூடாது, அவர் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி தருகிறார். இப்படி ஏழெட்டு நீதிபதிகள் உயர்நீதி மன்றத்துக்கு வேண்டுகோள்.  இதெல்லாம்தான் விவாதங்கள்.  இதுவே ஒரு எழுத்தாளனுக்கு நடந்திருந்தால் போட்டுத் தாக்கு என்று எழுத்தாளர்களே போராடி இருப்பார்கள்.  ஜெயமோகன் விஷயத்தில் எழுத்தாளர்களே ஜெயமோகனுக்கு எதிராகப் பொங்கி எழுந்தார்களே?  அதை விடுங்கள்.  தமிழ்ச் சமூகத்தில் காற்று மாதிரி வியாபித்திருப்பது சினிமா.   சுகம், துக்கம், கேளிக்கை, பண்டிகை, கொண்டாட்டம், கோவில் திருவிழா, பள்ளிக்கூட விழா, எழவு, அரசியல் எல்லாமே சினிமா.  இதுவரை வந்துள்ள எல்லா முதல்வர்களும் சினிமாவிலிருந்து வந்தவர்கள்.  சினிமாவைப் பயன்படுத்தி வந்தவர்கள்.  இனி வரப் போகின்றவர்களும் கியூவில் நிற்கிறார்கள்.  எல்லோரும் சினிமாவிலிருந்துதான்.  எப்படிப்பட்ட சினிமா?  அங்கேதான் பிரச்சினையே.  சத்யஜித் ரே சினிமாவா?  அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமாவா? அம்பது ரூபா லஞ்சம் ட்ராஃபிக் போலீஸின் கையைக் காலை வெட்டினால் நாடு முன்னேறி விடும் என்று சொல்கின்ற ஷங்கர் படம்தான் நம்முடைய அரசியல் சினிமா.  எப்பேர்ப்பட்ட உயர்ந்த ரசனை!  கலை அம்சம் எப்படி என்றால், நேத்து ராத்திரி யம்மா.  சரி, நல்ல பாடலே இல்லையா என்றால் இருக்கிறது.  பொதுவாக, ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தேறுவது என்ன?  சினிமா பாடகர்களுக்காக இத்தனை உருகு உருகுகிறீர்களே, இந்த சினிமா பாடல்களின் நடனக் காட்சிகள் நீலப் படங்களை ஒத்ததாக இருக்கின்றனவே, அதைப் பற்றி உங்களுக்கு எந்தப் புகாரும் இல்லையா?  உங்களுக்கு என்றால் காமன்மேன் அல்ல; எழுத்தாளர்கள். 

இந்த இடத்தில் நீங்கள் அராத்து மற்றும் அபிலாஷின் கட்டுரைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அராத்துவின் கட்டுரையில் ஒரு தமிழ் சினிமாப் பாடல் வருகிறது:

”காம பானம் பாய்வதால்

காயமாகுமே கலசம்

இன்று கவசமாகும்

காமன் அம்பு முறிந்து போகும்

மலர்ந்த தேகம் சிவந்து போகும்.

சிவந்த தேகம் சிநேகம் தேடும்

சிநேகம் அங்கே சரசம் ஆடும்

சரசம் முடிவில் சரிந்து போகும்

எங்கே என் ஜீவனே

உன் மேனியில் கண்டேனே

என்று முடித்து விட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு போகலாமே!  இந்த எங்கே என் ஜீவனே பாடல் போலத்தான் மொத்த தமிழ் வாழ்க்கையும் இருக்கிறது. இந்த பாடல் வரிகள் சுத்தத் தமிழ் செவ்வியல் தமிழ் போல எழுதப்பட்டு இருக்கும். இப்போதும் நிறைய தமிழர்கள் இதை சங்க காலக் கவிதை என்றே நம்புவார்கள். இதில் கமல் கோட், டீ ஷர்ட் போட்டு ஆடிக்கொண்டு இருப்பார். அம்பிகா புடவையையே விசித்திரமாகக் கட்டிக்கொண்டு கால் மரத்துப் போனது போல ஏதோ செய்து கொண்டிருப்பார். லிப் கிஸ் அடிக்கும் போது முந்தானையால் மறைத்துக்கொள்ளுதல், செட் போட்ட மாளிகை , ஜிகினா டிரஸ் , ஒளிரும் டிஸ்கோ விளக்குகள் , 8 அம்பிகா , 8 கமல்ஹாஸன் , டிஸ்கோ ஸ்டெப்புகள் , உன் மேனியில் கண்டேனே என்னும் வரி வருகையில் புட்டத்தைப் பிடித்து ஆர்கஸம் அடைதல் என ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையை (சமீபகாலமாக ) இந்த ஒரு பாட்டே குறியீடாகக் காட்டியிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதைப்போன்ற பாடல்கள் வரும் சினிமாப் படங்களின் பாடல் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் அக்காக்களை நான் அறிவேன்.”  மேனி என்ற வார்த்தை மட்டும் சென்ஸார் போர்டினுடையது.  அராத்து வேறு ஒரு வார்த்தை போட்டிருந்தார்.  அதை சென்ஸார் மேனி என்று மாற்றி விட்டது எனக் கொள்க. 

கேரளமும் தமிழ்நாடும்: அராத்து

அடுத்து அபிலாஷின் கருத்துக்களுக்குச் செல்லும் முன், வெகுஜனக் கும்பலின் குரலை சிறிது பார்ப்போம்.  எழுத்தாளன் செத்தால் ஏன் வெகுஜனம் அழுவதில்லை?  ஏனென்றால், பெரும்பாலான நவீன எழுத்தாளர்களுக்கும் தமிழர்களின் பண்பாட்டு நீரோட்டங்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை.   ஆஹா, எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு!  பண்பாட்டு நீரோட்டம் என்றால் என்ன தெரியுமா?  கல்கி, ரமணி சந்திரன், விஜய், அஜித், ஸ்டாலின், சசிகலா, தமிழே எழுதத் தெரியாமல் தமிழர் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக மெரீனா கடற்கரையில் கூடும் இளைஞர் கூட்டம், நேர்மைத் திலகம் அப்துல் கலாம், கவிப் பேரரசு வைரமுத்து, ஞானபீடம் வாங்கிய அகிலன்… இதெல்லாம்தான் பண்பாட்டு நீரோட்டத்தின் குறியீடுகள்.  லண்டனுக்கு ஒரு தேம்ஸ்.  பாரிஸுக்கு ஒரு ஸென் (Seine).  நமக்கு?  பெயரைச் சொல்ல மாட்டேன்.  எல்லோரும் என் மீது கேஸ் போடுவார்கள்.  திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம் எல்லாமே ஒரு சிறிய ‘கும்ப’லிடமிருந்து பிறந்தவைதான்.  இவர்களால்தான் ஐந்தாயிரம் ஆண்டுகளாக தமிழும் தமிழர் பண்பாடும் மற்ற சில பண்பாடுகளைப் போல் அழிந்து விடாமல் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாகக் கிடந்த அந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியை உயிர்ப்பித்தது இரண்டே இரண்டு உயர்சாதிக்காரர்கள்தான்.  ஒருத்தர் உ.வே. சாமிநாதய்யர்.  இரண்டாமவர் பாரதி.  உ.வே.சா. மட்டும் இல்லையானால் இங்கே நடந்த திராவிட எழுச்சியே நடந்திராது.  இதையெல்லாம் எழுத அலுப்பூட்டுகிறது.  உறங்குபவர்களை எழுப்பலாம்.  உறங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது? 

பக்கத்து மாநிலங்களான கர்னாடகாவிலும் கேரளத்திலும் ஏழெட்டு இலக்கிய ஜாம்பவான்கள் ஞானபீடம் வாங்கியிருக்கிறார்கள் என்றால், தமிழில் அகிலனும் ஜெயகாந்தனும் வாங்கியிருக்கிறார்கள்.  ஒருத்தர், மலக்கிடங்கு.  இன்னொருத்தர், சராசரி.  அதுவும் எழுதுவதையே நிறுத்தி பல தசாப்தங்கள் கடந்த பிறகு தியாகி பட்டம் மாதிரி கொடுத்தார்கள்.  இதுதான் தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சிறப்பு.  இங்கே ஏன் கிடைக்கவில்லை என்றால், இங்கேயிருந்து நூறு பிரபலஸ்தர்கள் ஞானபீட விருதுக்குத் தகுதியானவர்கள் யார் என்று பரிந்துரைக்க வேண்டும்.  அந்த நூறு பிரபலம் யார் என்று ஞானபீடக் கமிட்டி முடிவு செய்து நடிகர் விஜய், அஜித், மிமிக்ரி தாமு, கமல், மணி ரத்னம், விவேக், வைரமுத்து, சூர்யா, சிவகுமார், ஜோதிகா, கார்த்திக், நிகில் முருகன் (கமலின் பி.ஆர்.ஓ.), ரஜினிகாந்த், ஐஸ்வர்யா (ரஜினி மகள்), லதா (ரஜினி மனைவி), சௌந்தர்யா (d/o ரஜினி), பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், டி.எம். கிருஷ்ணா, சுதா ரகுநாதன், நீயா நானா கோபிநாத், ஆண்டனி, பத்திரிகை ஆசிரியர்கள் போன்றவர்களிடம்  ஒரு படிவத்தை அனுப்புவார்கள்.  அந்தப் படிவம் இருபது பக்கம் இருக்கும்.  அதில் அவர்கள் பரிந்துரை செய்யும் எழுத்தாளர் பற்றிய அத்தனை விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும்.  இதுதான் நடைமுறை.  பலரும் அந்த விண்ணப்பத்தை வாங்கித் தூக்கியெறிந்து விடுவார்கள்.  ஏனென்றால், எழுத்தாளர் எப்போது இருந்து எழுத ஆரம்பித்தார், அவரது படைப்புகள் என்னென்ன, அவற்றின் சிறப்பு என்ன என்றெல்லாம் பெரிய பெரிய வியாசங்களை எழுத வேண்டும்.  வேறு பலர் தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை நிரப்பி அனுப்பி விடுவார்கள்.  வைரமுத்து அவர் பெயரையே அனுப்பி விடுவார் என்று நினைக்கிறேன்.  விஜய், அஜித், ரஜினி மற்றும் அவர் குடும்பத்தினர், விவேக், சூர்யா குடும்பத்தினர் அனைவரும் வைரமுத்து பெயரை சிபாரிசு செய்வார்கள்.  கமல் அவர் பெயரே. (என் பெயரை நானாவது சொல்ல வேண்டாமா? – கமல்), நிகில், தாமு – இருவரும் கூட கமல் பெயர்தான்.  பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் – வைரமுத்து.  மணி ரத்னம் – ஜெயமோகன் பெயர்.  டி.எம். கிருஷ்ணா (காலச்சுவடு கண்ணனிடம் கேட்டு) பெருமாள் முருகன் பெயரை அனுப்புவார்.  சுதாவும் பெருமாள்தான்.  கோபிநாத் – யார் பெயரை அனுப்புவார் என்று யூகிக்க முடியவில்லை.  ஆண்டனி நிச்சயம் ஜெயமோகன் பெயர்தான்.  ஆக, இப்படித்தான் இந்த அபத்த வேடிக்கை நாடகம் ஆண்டு தோறும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆனால் கர்னாடகாவிலும் கேரளத்திலும் ஒவ்வொரு ஆண்டும் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு வேலை செய்து இந்தி மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையில் ஞான பீடத்தை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒரு இலக்கியவாதிக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேற்கண்ட அபத்த நாடகத்திலிருந்தே தமிழ்நாட்டின் பண்பாட்டு அவலம் தெரியவில்லையா?  இங்கே அபிலாஷ் கட்டுரையிலிருந்து ஒரு இடம்.  அபிலாஷ் ஒரு பெங்களூரில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியர். 

நான் இரு வருடங்களுக்கு முன்பு என் கல்லூரியில் ஒரு மொழியாக்க டாஸ்கைக் கொடுத்த போது 32 மாணவர்கள் சேர்ந்து எம்.டி.யின் நூல் ஒன்றை மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கி அளித்தார்கள். இந்தி மாணவர்களோ பிரேம் சந்தின் 25க்கும் மேற்பட்ட கதைகளை மொழியாக்கினார்கள். இந்த கதைத் தேர்வை முழுக்க அவர்களே செய்தார்கள். ஆனால் நம் தமிழ் மாணவர்களுக்கு ஒரு தமிழ்க் கதை கூடத் தெரியவில்லை. அவர்கள் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகரைக் கூடப் படித்ததில்லை. நானாக இரண்டு மாணவர்களுக்கு நவீன கதைகளைக் கொடுத்து மொழியாக்க செய்தேன். மற்ற மொழி மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மாணவர்களுக்கோ தமிழ் சினிமாவைத் தவிர ஒன்றுமே தெரியாது.

மேலே உள்ளது அபிலாஷ் எழுதியது.  சம்பந்தப்பட்ட வெகுஜன எழுத்தாளர் என்னை கோபிக்கக் கூடாது.  நான் அவர் பெயரை இனி என் வாழ்நாளில் உச்சரிக்க மாட்டேன்.  உச்சரித்தால் முகநூலில் என் பெயரை எழுதுகிறார்கள்.  போகிற வருகிற ரெண்டு கால் ஜந்துவெல்லாம் அதில் பின்னூட்டம் என்ற பெயரில் என்னைக் கண்டபடி ஏசி வைக்கின்றன.  மேலே அபிலாஷ் எழுதியிருப்பதைப் படித்தீர்களா?  அதுதான் தமிழ்நாட்டின் நிலை.  நானும்தான் நூற்றுக்கணக்கான சம்பவங்களை கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேனே? 

ஒரு அரசாங்கப் பல்கலைக்கழகத்துக்குச் சிறப்புப் பேச்சாளராகப் போயிருந்தேன்.  துணைவேந்தர் என்னிடம் “ஹீஹீ… உங்களை டீவில அடிக்கடி பாத்துருக்கேன்” என்கிறார்.  இத்தனைக்கும் அவர் தமிழில் பிஹெச்டி.  என்ன பிஹெச்டி தெரியுமா?  புரட்சித் தலைவர் எம்ஜியாரின் அரசியலும் தமிழர் வாழ்வும்.  சத்தியமாக நம்புங்கள்.  புருடா இல்லை.  அடப் பாவிகளா, ஆட்டோ டிரைவர் “உங்களை டீவில பாத்துருக்கேன்” என்று சொன்னால் நியாயம். பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்படிச் சொல்லலாமா?  தமிழ்நாட்டில் அஞ்சாயிரம் பேர் எழுத்தாளன் பெயரைச் சொல்வான்.  கேரளத்தில் பதினஞ்சாயிரம் பேர் எழுத்தாளன் பெயரைச் சொல்வான் என்பது அல்ல பிரச்சினை.  நான் சொல்வது ஒரு பண்பாட்டு வீழ்ச்சியை.  கேரளத்தில் நிலைமை எப்படியென்றால், ஒரு எழுத்தாளர்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமர்ந்திருக்கிறார்.  அவர் என்னைப் பார்த்ததும் ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் கதையைப் படித்தீர்களா என்று கேட்கிறார்.  ஜெயமோகனைப் பார்த்தால் ஸீரோ டிகிரி பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்பார். 

அதை விடுங்கள்.  மம்முட்டியும் நானும் எதேச்சையாக ஒரு இலக்கிய விழாவில் சந்தித்துக் கொண்டபோது விழா முடிந்து தனியாக என்னோடு அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் மம்முட்டி.  அப்போது அவருடைய உடல் மொழி எப்படி இருந்தது என்பதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.  ஒரு குருவிடம் ஒரு சீடன் எப்படிப் பேசுவானோ அப்படி இருந்தது.  அவர் நல்ல உயரம் என்பதாலும் நான் அஞ்சடி அஞ்சு அங்குலம் என்பதாலும் எனக்குத்தான் அவருடைய பவ்யம் கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது.  பேச்சு முழுவதும் மாத்யமம் பத்திரிகையில் நான் எழுதிய தப்புத் தாளங்கள் தொடர் பற்றியதாக இருந்தது.  இத்தனைக்கும் அந்தத் தொடர் முடிந்து அப்போது கனகாலம் ஆகியிருந்தது. 

கேரளத்தில் ஒரு நூறு கல்லூரிகளில் பேசியிருப்பேன்.  பல பள்ளிகளில் பேசியிருக்கிறேன்.   ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸீரோ டிகிரி நாவலிலிருந்து கேள்விகள் கேட்டார்.  இந்தக் கலாச்சார சூழலையே நான் சொல்கிறேன்.  1980களில் தில்லியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது என் பிராஞ்சில் வேலை செய்த லத்திகா என்ற பெண்ணுக்கு சுந்தர ராமசாமியைத் தெரிந்திருந்தது.  ஏனென்றால், அவருடைய ஜேஜே சில குறிப்புகள் கலா கௌமுதி என்ற இலக்கிய வாரப் பத்திரிகையில் தொடராக வந்து கொண்டிருந்தது.  ஆனால் அங்கே இருந்த தமிழர்களுக்கு சு.ரா. பெயர் தெரியவில்லை.  அதே கலா கௌமுதியில்தான் பின்னாட்களில் என்னுடைய ராஸ லீலா தொடராக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வந்தது.  வாராவாரம்.  அதெல்லாம் தமிழில் நடக்கும் சாத்தியம் இருக்கிறதா என்ன? 

இங்கே சினிமாதான் எல்லோருக்கும் உயிர்மூச்சு.  அப்படியே இருக்கட்டும்.  எழுத்தாளர்களாகிய நீங்களும் ஏன் ஐயா அதில் கிடந்து நாறுகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.  நான் என்ன பாடும் நிலாவைக் கேட்கக் கூடாது என்றா சொன்னேன்?  ஏன் இந்த ஹிஸ்டீரியா என்றுதான் கேட்கிறேன்.  ஆப்ரஹாம் பண்டிதர் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  அவருடைய கருணாமிருத சாகரம் என்ற மிகப் பெரிய நூலில் (ஆறு தொகுதிகள், உண்மையிலேயே அது சாகரம்தான்) அவர் தமிழ் இசையிலிருந்துதான் இந்திய இசையே பிறந்தது என்பதை மிக வலுவான ஆதாரங்களோடு 2000 பக்கங்களில் விளக்கியிருக்கிறார்.  இதற்கு அவர் காலத்து சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள் அத்தனை பேரும் ஒப்புதல் அளித்து முன்னுரை அளித்திருக்கிறார்கள்.  மகா வைத்தியநாத சிவன் மட்டுமே முரண்படுகிறார்.  இந்தப் புத்தகத்தை நாம் வெறுமனே படிக்க முடியாது.  கற்க வேண்டும்.  உதாரணமாக, ஸ்வரம், சுருதி என்று வந்தால் ஸ்வரம் என்றால் என்ன, சுருதி என்றால் என்ன என்று தெரிந்து கொண்டுதான் அடுத்த வாக்கியத்துக்குப் போக வேண்டும்.  இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட ஒரே மொழி உலகிலேயே தமிழ் ஒன்றுதான் என்கிறார் பண்டிதர்.  ஆதியிலே வார்த்தை இருந்தது என்று வேதாகமம் சொல்கிறது அல்லவா?  அந்த வார்த்தை நாதப் பிரம்மம்தான்.  ஆதியிலே நாதம் இருந்தது.  அதை இந்த உலகிலேயே முறைப்படுத்தியவன் தமிழன் மட்டுமே என்று 2000 பக்கங்களில் நிறுவியிருக்கிறார் பண்டிதர்.  அது உண்மைதான் என்று இன்னொரு சங்கீத மேதை – வீணை எஸ். ராமநாதன் தனது சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம் என்ற நூலில் நிறுவுகிறார்.  ராமநாதனின் நூலுக்கு மூல நூல் பண்டிதரின் சாகரம்தான்.  நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிரம்மராஜனின் மீட்சி இதழில் ராமநாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்கம் நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறேன். 

இப்போது நாம் எல்லாரும் சினிமா பாட்டு ஜிம்குஜிப்பா பாடி டப்பாங்குத்து ஆடிக் கொண்டிருக்கிறோம்.  ஆடுவோம்.  நம்முடைய பாரம்பரியம் யாழும் தமிழ் இசையும் அழிந்தது போல் அழிந்து போகட்டும். 

பின்குறிப்பு: என்றாவது ஒருநாள் அந்த கருணாம்ருத சாகரத்தின் சுருக்கத்தையாவது உங்களுக்கு நான் எடுத்துச் சொல்ல இறையருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.  மிக மிக விஞ்ஞானபூர்வமாக ஒவ்வொரு ஹிந்துஸ்தானி ராகத்தையும் எடுத்து வைத்து அதற்கு இணையான தமிழ் ராகத்தை சிலம்பிலிருந்தும் அதன் உரைகளிலிருந்தும் பழந்தமிழ் நூல்களிலிருந்தும் எடுத்து முன்வைக்கிறார்.  ஏதோ இயற்பியல் நூலைப் படிப்பது போல் இருக்கிறது.  ஆறு ஏழு அகில இந்திய சங்கீத மாநாடுகளைத் தஞ்சாவூரில் நடத்தி, தன்னுடைய ஆய்வுகளை இசை அறிஞர்களின் முன்னே நிரூபித்தார்.   வைத்தியர் என்பதால் இதற்கெல்லாம் அவர் நல்ல வசதியானவராக இருந்ததால் நிறைய செலவும் செய்ய முடிந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவராகவும், கிறிஸ்தவராகவும், தீவிர கடவுள் நம்பிக்கை உள்ளவராகவும், எந்த சமூகத்தின் மீது வெறுப்பு இல்லாத பண்பாளராகவும், அதிசயக்கத்தக்க ஒரு மேதையாகவும் விளங்கியதால் எல்லோரும் அவரோடு மிக இயல்பாக விவாதிக்கவும் செய்தனர். 

***

கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai

p

Marginal Man

Marginal Man in Kindle

Zero Degree

Zero Degree

Morgue Keeper

Morgue Keeper in Kindle

Copyright © 2018 Charu Nivedita – All Rights Reserved