மூன்று தினங்கள்

மூன்று தினங்களெல்லாம் எனக்கே நான் மெடிக்கல் லீவ் கொடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் கொடுக்கும்படி ஆகி விட்டது. மூன்று தினங்களுக்கு முன் தொண்டையில் லேசாக வலி. அடுத்து அது ஜுரமாக மாறும். நான் ஸ்ரீராமிடம் கேட்டு மாத்திரை சாப்பிடுவேன். ஜுரம் போய் விடும். ஆனால் தினமும் இருபது மணி நேரம் தூங்க வேண்டி வரும். அது கூட நிம்மதியான உறக்கம் அல்ல. மயக்கம் கலந்த உறக்கம். கூடவே உடம்பு வலியும் உண்டாகும். இன்னும் நிறைய பக்க விளைவுகள். நீ தான் சித்தா, ஆயுர்வேதம் எல்லாம் அருகிலேயே வைத்திருக்கிறாயே என்று கேட்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்த இருவருமே வெளியூரில் இருப்பதாலும் ஜுரம் அதிகமாகி குளிரில் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டதாலும் வேறு வழியில்லாமல் டோலோவை விழுங்க வேண்டியதாயிற்று. ஆனால் சித்த மருத்துவர் பாஸ்கரன் இதற்கும் ஒரு வழி சொன்னார். ”இனிமேல் ஜுரம் வந்தால் உடனே ஃபோன் செய்யுங்கள். மருந்துகளை சென்னையிலிருந்தே டன்ஸோ மூலம் அனுப்பி வைக்கிறேன். இல்லாவிட்டால் நானே வேலூரிலிருந்து கிளம்பி வருகிறேன். இங்கிருந்து மூன்று மணி நேரம்தானே? நீங்கள் என் குருவுக்கும் தந்தைக்கும் நிகரானவர் ஆயிற்றே? என்னிடம் போய் ஏன் தயங்குகிறீர்கள்?”

இதற்கும் மேல் எழுத்தாளனுக்குத் தமிழ்ச் சமூகத்தில் மதிப்பு இல்லை என்று நான் எழுதவே மாட்டேன்.

திரும்பவும் சொல்கிறேன். நான் அலோபதிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் காலத்திலிருந்து அது இந்த உலகை விட்டு நீங்கும் வரை மாதம் ஒருமுறையாவது ஜுர மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் படு பயங்கரம். உதாரணமாகப் பாருங்கள், நான் பாஸ்கரனிடம் மருந்து பெற்று சாப்பிட்டிருந்தால் இந்த மூன்று தினங்களும் இந்த அளவு அவஸ்தைப்பட்டிருக்க மாட்டேன். மூன்று தினங்களுமே எனக்கு ஆகாயத்தில் பறப்பது போலவும் மிதப்பது போலவுமே இருந்தது. உடம்பெல்லாம் சம்மட்டியால் அடிபட்டது போல் ரணமாய் வலித்தது. மூன்று தினங்களும் எதுவுமே செய்ய முடியவில்லை. ஆனால் நான் ஒருநாளும் குளிக்காமல் இருந்ததில்லை என்பதால் அதை மட்டும் செய்து விட்டேன்.

அலோபதி மருத்துவத்தை நாம் நாடலாம். எப்போது? பெரிய பிரச்சினை என்றால் மட்டும். சும்மா ஜலதோஷம் ஜுரம் என்றெல்லாம் அலோபதி மருந்துகளை விழுங்கக் கூடாது. பாஸ்கரனின் சித்த மருத்துவத்தில் அவரால் மிகவும் முற்றிய சர்க்கரை வியாதியைக் கூட குணப்படுத்தி விட முடிகிறது. கான்ஸரிலும் சில ஆரம்பக்கட்ட நிலைகளை அவரது மருந்தினால் குணப்படுத்த முடிகிறது.

பாஸ்கரன் ஒவ்வொரு ஞாயிறும் சென்னை வருகிறார். வியாழக்கிழமையும் காலை ஒன்பதிலிருந்து பதினோரு மணி வரை சென்னையில் இருக்கிறார். வரும் வியாழன் அவரை பத்தரை அளவில் சந்திக்க இருக்கிறேன்.

அவரை சந்திக்க விரும்புவோருக்கான விவரம்:

https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA

சித்த மருத்துவர் பாஸ்கரனிடம் ஆலோசனை பெற.. (To consult Siddha Dr Baskaran) (google.com)