பூச்சி 1 & 2: இரண்டு புதிய புத்தகங்கள்

மிக அலுப்புடன்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். இரண்டு புதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன. பூச்சி -1, பூச்சி-2. இரண்டுமே முழுமையான புனைவுக்கும் முழுமையான அ-புனைவுக்கும் இடையிலான புதிய வகை ஆக்கங்களைக் கொண்டவை. இரண்டையும் செப்பனிடுவதற்குப் பல நாட்களை, பல மணி நேரத்தை செலவு செய்திருக்கிறேன். ஆனாலும் நூறு பிரதிகள் விற்றால் பெரிது. இதற்கு முன் வரம் என்ற நூல் வந்தது. எத்தனை பிரதிகள் விற்றது என்று கூட நான் பதிப்பாளரிடம் கேட்கவில்லை. ஐம்பது என்று பதில் வரும். நாவல் என்பதால் அன்பு மூன்றே தினங்களில் ஐநூறு பிரதிகள் விற்றது. ஆனால் அதற்குப் பிறகு கிணற்றில் போட்ட கல்தான். இன்னொரு ஐநூறு போகும். ஆயிரம் பிரதி விற்றால் எனக்கு வரும் ராயல்டி 30000 ரூ. என் வாழ்க்கையையே பணயம் வைத்து எழுதினால் இவ்வளவுதான் வருமானம். அ-புனைவு என்றால் மொத்த ராயல்டியே ரெண்டாயிரமோ மூவாயிரமோ வரும். வரம் புத்தகத்துக்கு எனக்கு ஆயிரம் ரூபாய் ராயல்டி வரும். இந்தப் புதிய புத்தகங்கள் பூச்சி இரண்டு தொகுதிகள் இப்போது வெளிவந்துள்ளன. எல்லாம் கொரோனா காலகட்டத்தில் தினந்தோறும் என் தளத்தில் எழுதியவை. என் இணையதளத்திலேயே எல்லாம் இலவசமாகக் கிடைக்கிறது. படித்துக் கொள்ளலாம். ஆனால் இந்தத் தொகுதிகளில் அவற்றை நன்கு செப்பனிட்டிருக்கிறேன்.

யாரும் வாங்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். ஏனென்றால், என் புத்தகங்கள் அனைத்தும் தம் இல்லத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் நண்பர்கள் ஐம்பது பேர் இருக்கிறார்கள். அவர்கள் நான் இங்கே எழுதினாலும் எழுதாவிட்டாலும் வாங்குவார்கள். அது போதும்.

பிரதிகள் வாங்க:

https://tinyurl.com/poochitwo

https://tinyurl.com/poochione