விழா பதிவுகள் – 14

நண்பர் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் எழுதியது.

ஒவ்வொரு ஆண்டும் நான் மறக்காமல் செல்லும் ஓர் இலக்கிய விழா சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீடு. சாரு நிவேதிதாவுடைய நூல்களின் வழியே வாழ்க்கை சார்ந்த அறிதலை படிப்பினையாக கொண்டாலும் அதையும் தாண்டி அவரை மையமாக வைத்து எனக்கு கிடைத்த நட்புகள் பல. இன்றளவும் அந்த நட்புகள் என்னுடன் ஆழமாக பிணைந்து இருக்கின்றன. இவையெல்லாமே சங்கமமாகும் இடமாகவே சாருவின் நூல் வெளியீட்டை ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன்.

ஏதோ ஒரு நெருடல் ஒவ்வொருமுறையும் என்னை சூழ்ந்து கொண்டிருந்தது. என்னால் வார்த்தைப்படுத்த முடியாத நெருடல். இம்முறை அது முழுமுற்றாக நீங்கி சாருவின் எழுத்திற்கே உரிய பாணியிலான கொண்டாட்டம் மட்டுமே விழாவாக இருந்தது. சாருவை வாசிக்க ஆரம்பித்த காலத்தில் திசை அறியும் பறவைகள், எனக்கு குழந்தைகளை பிடிக்காது, மூடுபனிச் சாலை போன்ற நூல்களில் கண்ட சாருவிற்கும் நேரில் காணும் சாருவிற்கும் இடையே நிறைய மாற்றங்களை என்னால் காண முடிந்தது. நேரில் கண்ட சாருவை எனக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை என் பழக்கம் அல்லது அவருடனான பேச்சுகள் குறைவாக இருப்பதனால் இருக்கலாம் என அனுமானம் கொண்டேன். அவருடைய பேச்சுகளும் எனக்கு பிடிக்காது என்னும் நிலையிலேயே உழன்று இருந்தேன். அவருடைய எழுத்தே எனக்கான சாரு நிவேதிதா எனும் நிலைமை.

இதைக் கூறுவதன் காரணம் நேற்றே முதன் முறையாக சாரு நிவேதிதாவை ரசித்தேன். அது ஒரு alchemy. விவரிக்கத் தெரியவில்லை. இப்போதளவும் உணர்கிறேன். A Blissful pleasure. . .

பி.கு : தனிப்பட்ட முறையில் என்னால் மறக்க முடியாத விஷயம் நிர்மல் மெரின்ஸோவிடமிருந்து கிடைத்த அரவணைப்பு. ஒரு நொடிப்போதில் எல்லா நினைவுகளும் ஓடிச் சென்றன. ஏரலின் மணமும் அங்கு கண்ட அனுமஞ்சாமியின் நினைவும், சாருவின் எழுத்திறகாக இரவின் துயிலை உரித்து பேசிய வார்த்தைகளும் நிழலாடிச் சென்றன. Miss u Nirmal….

 IMG_3964