Digimodernism – First footprint

 

தோள் வலிக்கிறது; கொஞ்சம் அமுக்கி விடு என்று என் வாழ்நாளில் இதுவரை என் மனைவியிடம் கூடக் கேட்டதில்லை. ஆனால் என்னுடைய ஒரு நண்பனிடம் கேட்டிருக்கிறேன். 25 வயதான அவனை என் வளர்ப்பு மகனாகவே கருதுகிறேன். அந்த அளவுக்கு நான் உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய நெருங்கிய நண்பன். போன வருஷம் ஒரு கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றான். அவன் எழுதிய முதல் நாவல். திட்டினாலும் பரவாயில்லை என்றான். அதைச் சொல்லவும் வேண்டுமா? மிகவும் வாஞ்சையோடு படிக்க ஆரம்பித்தேன். என்ன ஒரு அதிர்ச்சி! பத்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. அட, திட்டுவதற்காகவாவது படிக்க முடிய வேண்டும் இல்லையா? பத்து பக்கத்துக்கு மேல் முடியவில்லை. என்ன செய்ய? அதையே சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டேன். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு fanatic. வேண்டியவர் வேண்டாதவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இதைப் புரிந்து கொண்டு மேலே படியுங்கள். அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் நாவலைப் படித்த பிறகு ஒரு முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் புத்தகத் திருவிழாவில் உயிர்மை வெளியீடாக வரும். அந்த முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

***

மனித வரலாற்றில் கவிதை/பாடல் வடிவம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்புதான் உலகின் முதல் நாவல் எழுதப்பட்டது. எழுதியவர் Murasaki Shikibu என்ற ஜப்பானியப் பெண். அந்த நாவலின் பெயர் The Tale of Genji. அதிலிருந்து தான் ’நாவல்’ என்ற ஒரு புதிய genre இலக்கியத்தில் வழக்கத்துக்கு வந்தது. (அதற்குப் பிறகு 600 ஆண்டுகள் கழித்து செர்வாந்தெஸ் எழுதிய தோன் கெஹோத்தே-வும் (Don Quixote) இன்று உலகப் பிரசித்தி பெற்ற நாவலாகத் திகழ்கிறது.)

பெருங்கதையாடல் (grand narratives) என்பது பன்முகத்தன்மையை மறுத்து எல்லா வித்தியாசங்களையும் உள்ளடக்கிய ஒரு முழு முற்றான உண்மையை (Absolute Truth) – எல்லோருக்கும் பொதுவான பிரபஞ்ச உண்மையை – முன்வைக்கிறது. ஆனால் எதார்த்த உலகில் அப்படி எதுவும் இல்லை. உலக வாழ்க்கை குழப்பத்தில் (chaos) இருக்கிறது; ஒழுங்கற்று இருக்கிறது. ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொண்டவனாக இருக்கிறான். அவர்களின் மொழி, கலாச்சாரம், உணவு, கடவுள், காமம் எல்லாமே வேறு வேறாக இருக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமலும், அங்கீகரிக்காமலும் போவதால்தான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள்; கொலை செய்து கொள்கிறார்கள். மனித சிந்தனையின் வரலாற்றில் பின்நவீனத்துவம்தான் இதை மிகச் சரியாக சுட்டிக் காட்டி விளக்கியது. (பார்க்கவும்: Jean-Francois Lyotard எழுதிய The Postmodern Condition: A Report on Knowledge.) இந்த அர்த்தத்தில்தான் பின்நவீனத்துவம் என்பது ஒரு இலக்கிய வகை (genre) அல்ல; மனிதர்களுக்குள் நிலவும் அதிகார அமைப்பை விளக்கும் ஒரு சிந்தனை முறை என்று சொல்லப்படுகிறது. இதை உள்வாங்கிக் கொண்டு புனைகதைகளை எழுதியவர்களே நவீனத்துவ காலகட்டத்தைத் தாண்டியவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால் இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது. எண்பதுகளில் தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது. பின்நவீனத்துவம் குறித்து எதுவுமே தெரியாத பத்தாம்பசலி எழுத்தாளர்களே எள்ளி நகையாடும் அளவுக்கு அந்தப் ‘பின்நவீனத்துவப்’ படிப்பாளிகளின் எழுத்து தோற்றுப் போனது.

என்றாலும் என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்துவத்தை வெறும் கோட்பாடுகளின் வழியாக மட்டும் அல்லாமல், சர்வதேச இலக்கியத்தின் மூலமாகவும் பயின்று கொண்டதால் அந்த விபத்தில் நான் சிக்கவில்லை. அதனால்தான் அதிகார மையத்தைக் கட்டமைக்கும் பிரதிகளை உருவாக்குவதிலிருந்தும் விலகி, பன்முகத் தன்மை கொண்ட பிரதிகளை என்னால் உருவாக்க முடிந்தது. இந்தா பிடி, கதை என்று கொடுப்பதல்ல பின்நவீனத்துவப் பிரதிகள். ”நான் கொடுக்கிறேன்; நீ பெற்றுக் கொள்” என்பதான அதிகார மையம் கொண்ட பிரதிகளுக்கு மாறாக, வாசகரின் சிருஷ்டிகரத்தன்மைக்கு இடம் கொடுத்து, பிரதியின் வாசல்களைத் திறந்து வைத்து எப்போதும் புதுப் புது கதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் ஒரு மாஜிக் வெளியாகத் திகழ்பவை பின்நவீனத்துவப் பிரதிகள். இதைத்தான் லியோதார் petits récits (குட்டிக் கதைகள்) என்று சொல்கிறார்.

இப்போது நாம் பின்நவீனத்துவத்தையும் தாண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். கணினியின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் காலம் இது. மொழியில் சொல்லவொண்ணாத மாற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை புனைகதை என்ற வடிவத்தை எப்படி பாதிக்கும்? இதைக் கோட்பாட்டு ரீதியாக Digimodernism என்று வகைப்படுத்துகிறார் Alan Kirby. Digimodernism என்றால் என்ன? கிர்பியின் வார்த்தைகளில் சொன்னால் புதிய தொழில்நுட்பங்களினால் ஏற்படும் கலாச்சார பாதிப்பு. கலை இலக்கியத்தில் கணினியின் பாதிப்பு. பின்நவீனத்துக்கும் பிறகான cultural paradigm.

இந்த அர்த்தத்தில்தான் அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன். இந்த இடத்தில் இந்தக் கட்டுரையின் Murasaki Shikibu பற்றிய பத்தியை மீண்டும் படித்து விடுங்கள்.

திருக்குறளும், சங்க இலக்கியமும், பாரதியும் முன்னோடிகளே இல்லாத சாதனைகள். அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை. ருமானியாவைச் சேர்ந்த Emil Cioran ஃப்ரெஞ்சில் Aphorisms என்ற வகையில் எழுதினார். ஒன்றிரண்டு வாக்கியங்களில் பழமொழியைப் போல் இருக்கும். அதையும் நாம் petits récits-ஓடு சேர்க்க முடியாது. டொனால்ட் பார்த்தெல்மேவின் (Donald Barthelme) சிறுகதைகளை வேண்டுமானால் அந்த வகையோடு சேர்க்கலாம் என்றாலும், Georges Perec-ஐப் போல் வெறும் கட்டுடைத்தலோடு (deconstruction) மட்டுமே அது நின்று விட்டது.

அராத்துவின் தற்கொலை குறுங்கதைகள் மேற்கண்ட டொனால்ட் பார்த்தெல்மே, ஜார்ஜ் பெரக் இருவரையும் தாண்டி விட்டதற்கான காரணங்களாக எனக்குத் தோன்றுபவை: ஒன்று, கணினியின் பயன்பாடு.இன்னொன்று, அராத்து முன்வைக்கும் செக்‌ஷுவல் பாலிடிக்ஸ்.இதைப் பற்றி எழுதினால் அது மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) கால கட்டத்துக்குப் போகும். அராத்துவின் பல கதைகளில் ஜார்ஜ் பத்தாயைப் (Georges Bataille) பார்க்க முடிகிறது. இதற்காக அராத்துவுக்கு பத்தாய் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் இந்திய வாழ்க்கையே அதற்கான களங்களை அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆயிரம் பத்தாய்கள் வந்தாலும் எழுதித் தீராத அளவுக்கு பாலியல் நிகழ்வுகளையும் பிறழ்வுகளையும் கொண்டதாக இருக்கிறது இந்தியச் சமூகம்.அதில் புகுந்து அதகளம் பண்ணியிருக்கிறார் அராத்து.

 

சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஐதீகம். இந்த நூலை கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஷ்வேதகேது 500 அத்தியாயங்களாக சுருக்கி எழுதினார். இதை மேலும் சுருக்கி எழுதினார் பாப்ரவியர். இந்த நூல்களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நூல்களைப் பற்றி வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) குறிப்புகள் வருகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால் நந்தியின் நூல் தான் தன்னுடைய காம சூத்திரத்தின் மூல நூல் என்றும், அதன் சிறு பகுதியே இது என்றும் எழுதுகிறார் வாத்ஸ்யாயனா.  இதோ ஸ்லோகம்:

”மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச.”

இதற்குப் பிறகு காம சூத்திரம் பற்றி சுமார் முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன. அவை எல்லாமே சம்ஸ்கிருதத்திலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இப்போதும் கிடைக்கின்றன. அவற்றில் சில:

மைசூர் அரசரான இரண்டாம் மாதவர் எழுதிய தத்தக சூத்திரவ்ருத்தி (கி.பி. நான்காம் நூற்றாண்டு).

கொக்கோக முனிவரின் ரதி ரகஸ்யம். (கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு)

மகாகவி ஜெயதேவரின் ரதி மஞ்சரி. (கி.பி. பனிரண்டாம் நூற்றாண்டு)

கல்லரசாவின் ஜன வஸ்யம். (ரதி ரகஸ்யத்தை அடியொற்றி கன்னடத்தில் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது)

கந்தர்ப்ப சூடாமணி, மன்னர் வீரபத்ரா, 1577.

கல்யாணமல்லரின் அனங்கரங்கா. (பதினாறாம் நூற்றாண்டு)

தமிழர்களின் வரலாற்று உணர்வைப் பற்றி எப்போதும் நான் விமர்சித்தே எழுதி வருகிறேன்.  இப்போதும் அது என் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால், தமிழில் அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் இப்போது கிடைக்கவில்லை. (இவர் தான் வெற்றி வேற்கை எழுதியவர்.) கொக்கோகத்தை சில ஆண்டுகளுக்கு முன் எனக்குப் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.  ஒவ்வொரு மனிதனும் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் அது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பார்கள்.  அது தவறு என்பதை அந்த நூலைப் படித்த போது நான் உணர்ந்தேன். அந்த நூலை ஆங்கிலேயர்கள் தடை செய்தார்கள்.  இன்னமும் ஆங்கிலேயர்களின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இப்போதும் அந்தப் பொக்கிஷத்தை மீட்டெடுக்காமல் ஆங்கிலேயர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னால் நமக்கு போதித்த விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளையே பேணிக் காப்பாற்றி வருகிறோம். உதாரணமாக, சமீபத்தில் கூட ஒரு பிரபலப் பத்திரிகையில் ஓரினச் சேர்க்கை ஒருவித மனநோய் என்று எழுதப்பட்டிருந்ததைப் படித்தேன்.  அதேபோல் இந்திய அரசியல் சட்டம் வாய்வழிப் புணர்ச்சியை தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்கிறது. ஆனால், இந்தியப் பாரம்பரியம் அப்படி இல்லை என்பதை நம்முடைய கோவில் சிற்பங்களைப் பார்த்தாலே தெரியும்.  காம சூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயம் சாம்பிரயோகிகம்.  இதில் வாத்ஸ்யாயனா பத்து நிலைகளைச் சொல்கிறார். 1. அறுபத்து நான்கு விதமான கலவி நிலைகள் (postures). 2. ஆலிங்கன விசார – ஆலிங்கனம் செய்யும் விதங்கள். 3. சும்பனம் – முத்தமிடும் முறைகள். 4. நகங்களைப் பயன்பாடு. 5. பற்களின் பயன்பாடு, கடித்தல் மற்றும் வேற்று தேசத்தினருடன் கலவி செய்யும் விதம். 6. 7. கைகளால் அடித்தல் (உதாரணமாக, பிருஷ்டப் புணர்ச்சியின் போது பிருஷ்டத்தில் கையால் அடித்தல்) மற்றும் ஒலி எழுப்புதல். 8. ஆண்களைப் போல் செயல்படும் பெண்கள் 9. ஔபரிஷ்டகம் நவமோ – அதாவது, ஓரல் செக்ஸ்.  இதைத்தான் இயற்கைக்குப் புறம்பானது என்கிறது இந்தியச் சட்டம். 10. கலவியை எப்படித் துவங்குவது, எப்படி முடிப்பது.

காம சூத்திரத்தின் மிக முக்கியமான அத்தியாயம், அதன் கடைசி அத்தியாயமான ஏழாம் அத்தியாயம் ஔபமிஷாதிகம்.  அதாவது, உடல் கவர்ச்சியைக் கூட்டுவதற்கும், ஆண்மையை அதிகரிப்பதற்கும் என்னென்ன மருத்துவ முறைகள் உள்ளன என்பதை விளக்குகிறது இந்த அத்தியாயம்.

மேலே குறிப்பிட்ட ரதி ரகஸ்யத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. வேணு தத்தன் என்ற மன்னனின் காலத்தில் ஒரு பெண் விரக தாபம் தாங்காமல் ஆடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு, தன்னை யாரேனும் திருப்தி செய்யும் வரை நிர்வாணமாகவே இருப்பேன் என்று சபதம் செய்து விடுகிறாள்.  (கிட்டத்தட்ட அராத்துவின் சாந்தி எனக்கு நினைவுக்கு வருகிறாள்.)  இதைக் கேள்விப்பட்ட மன்னன் அவளை அரசவைக்கு அழைத்து வரச் சொன்னான்.  அரசவைக்கும் அவள் நிர்வாணமாகவே வந்தாள்.  இதைச் சற்றும் எதிர்பாராத அரசன், “ஏ பெண்ணே, இவ்வளவு பேர் எதிரில் நிர்வாணமாக வர உனக்கு வெட்கம் நாணம் ஏதும் இல்லையா?” என்று கோபத்துடன் கேட்கிறான்.  அதற்கு அவள், “இந்த சபையில் என்னைத் திருப்தி செய்யக் கூடிய ஆண் மகன் யாராவது இருந்தால் நான் ஆடை அணிந்து கொள்கிறேன்” என்கிறாள்.  அப்போது சபையில் இருந்த கொக்கோக ரிஷி, “நான் இவளைத் திருப்தி செய்கிறேன்” என்று சொல்லி அவளோடு செல்கிறார்.  ரிஷி காம ரகஸ்யம் கற்றவர் என்பதால் மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று களியாட்டம் போட, அந்தப் பெண் Oh ghaad oh ghaad என்று கதறி அழுது இனிமேல் ஆடை அணிந்து கொள்கிறேன் என்று சொல்லி, மிகுந்த நாணத்துடன் அரசவைக்கு வருகிறாள்.

எப்படிச் செய்தீர், என்ன செய்தீர் என்று அரசன் ரிஷியைக் கேட்ட போது, ரிஷி சொன்னதுதான் ரதி ரகஸ்யம் என்ற நூல்.

இதுதான் இந்தியப் பாரம்பரியமே தவிர, வெள்ளைக்காரர்கள் நம் மீது திணித்த விக்டோரிய மதிப்பீடுகள் அல்ல.  இந்தியர்களைப் போல் காமத்தைக் கொண்டாடியவர்கள் இல்லை.  சம்ஸ்கிருதத்தில் பர்த்ருஹரியின் சிருங்கார சதகங்களில் காமம் சொட்டும்.  பெண்ணைக் கண்டால் பிணம் கூட எழுந்து புணரும் என்பார் ஒரு சதகத்தில்.  தமிழ் இலக்கியத்தில் காமம் குறித்த எழுத்துக்களில் திருவள்ளுவரின் காமத்துப் பால் மிக விசேஷமான ஒன்று.  அதற்குப் பிறகும் தொடர்ச்சியாக தமிழில் காமம் எழுதப்பட்டே வந்திருக்கிறது.

***

ஆனால் தமிழர்களின் வெகுஜன மனோபாவமோ அடிமைத்தனம் சார்ந்தது. அதனால் விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளையே தங்களுடைய பாரம்பரியமாக நம்பி

காமத்தைத் தங்கள் கலாச்சாரத்திலிருந்து விரட்டி அடித்தனர்.  கலைஞர்களும் இதற்கு விதிவிலக்காக இல்லாமல் மைய நீரோட்டத்தை ஒட்டியே தங்கள் படைப்புகளை முன்வைத்தனர்.

சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காமத்தை எழுதியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் இலை மறைவு காய் மறைவாகவே எழுதினார்கள். ஆனால் சமூக எதார்த்தம் எப்படி இருக்கிறது என்றால், காமத்தை சரியாக அணுகத் தெரியாமல் போனதால் ஒட்டு மொத்த சமூகமே ஒரு நோய்க் கூறான நிலையை அடைந்திருக்கிறது. இங்கே நடக்கும் எண்ணற்ற குற்றச் செயல்களுக்கு காமமே காரணமாக இருந்து வருவதிலிருந்து நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் சராசரி மனிதனை விட பத்தாம்பசலிகளாக இருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் காமத்தை எழுதுவது தப்பான விஷயமான எண்ணி அதை ஒரு தீண்டத்தகாத பொருளாக ஒதுக்கி வைத்து விட்டனர்.

தடைகளை மீறுபவனே கலைஞன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழில் அப்படி நடக்கவில்லை.  இப்படியே ஒரு நூற்றாண்டு முடிந்த பிறகு தற்காலத்தில் ஒன்றிரண்டு பேர் துணிச்சலாக காமத்தை எழுதத் துவங்கினர். ஆனால் அதிலும் ஒரு துரதிர்ஷ்டம் நடந்தது.  பிறந்ததிலிருந்தே பேசாமல் இருந்த குழந்தை பேசத் துவங்கியதும், “அம்மா நீ எப்போது செத்துப் போவாய்?” என்று கேட்டது போல் ஆயிற்று, அவர்கள் எழுதிய காமத்துப் பால் கதைகள்.  எந்த சிருஷ்டிகரத் தன்மையும் இல்லாத வெறும் தட்டையான எழுத்தையே காம இலக்கியம் என்று அவர்கள் முன் வைத்தனர்.

இந்த நிலையில் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்.  இந்த நாவலில் சொல்லப்பட்டிருப்பது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்.  காமத்தை அவர்கள் இப்படித்தான் எதிர்கொள்கிறார்கள்; வாழ்கிறார்கள் என்பதை இந்தத் தலைமுறையைச் சேராதவனாக இருந்தாலும் நான் நெருக்கமான முறையில் அறிந்திருக்கிறேன். அந்த வகையில் தமிழில் வெளிவரும் முதல் பாலியல் நாவல் (erotic novel) இது.  இப்படிச் சொல்லும் போது நான் எழுதிய காமரூப கதைகள் என் நினைவுக்கு வருகிறது.  ஆனால் அந்த நாவலை நான் ஏன் இந்த genre-இல் எழுதப்பட்ட முதல் நாவல் என்று சொல்லவில்லை என்றால் அதில் காமம் மிகப் பெரும் வாதையாகச் சொல்லப்பட்டது.  காமத்தின் அடிப்படையாகத் திகழ்வது வாதை அல்ல; காமம் இன்பத்துக்குரியது.  காமம் துய்த்தலுக்குரியது.  காமரூப கதைகளில் காமம் என்பது இல்லாததாக இருக்கிறது. அந்த இல்லாமையே அதில் வரும் பாத்திரங்களின் தீராத வலியாகவும் வாதையாகவும் ஆகிறது.  மாறாக,  தற்கொலை குறுங்கதைகளில் காமம் மனித உடல்களில் புகுந்து துள்ளி விளையாடுகிறது.  அதனால்தான் இதை தமிழின் முதல் பாலியல் நாவல் என்கிறேன்.

தற்கொலை குறுங்கதைகளின் இன்னொரு தனித்தன்மை என்னவென்றால் இதன் மொழி.  பாரதிக்குப் பிறகு தமிழ் உரைநடையை பாதித்தவர்களில் சுஜாதாவுக்குப் பெரும் பங்கு உண்டு.  அதற்குப் பிறகு அடியேனைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.  ஏனென்றால், நான் என்ன எழுதினாலும் அதைத் தவறாமல் படித்து விட்டுத் திட்டுகிறார்கள் என்றால், என் எழுத்தைப் படிக்காமல் இருக்க முடியவில்லை என்று தானே பொருள்?  இது எவ்வளவு பெரிய விஷயம்?  என் எழுத்தைப் பிடிக்காவிட்டாலும், அதை வெறுத்தாலும், அதைப் படிக்காமல் இருக்கவே முடியவில்லை என்ற ஒரு நிலையில் எல்லா வாசகர்களும் இருக்கிறார்கள் என்றால் அதை என்னவென்று சொல்வது?  சரி, நமக்குப் பிறகு நம்முடைய அற்புதமான தமிழை யார் நேர்த்தி செய்திருக்கிறார்கள் என்று உன்னிப்பாகவே கவனித்து வந்தேன்.

அராத்து அதைச் செய்திருக்கிறார்.  தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்.  பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது.  எதிர் அழகியலின் கலகக் கலரி ஆட்டம் இது.  இதுவரையிலான தமிழ்ப் புனைகதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம்.  மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் அராத்து இதைச் செய்திருக்கிறார்.  தமிழ்ப் புனைகதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே (grand narrative) சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டிக் கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார்.

லாஸ்ட் ஆர்டர் என்ற கதையைப் பாருங்கள்:

சார் டைம் 10.45 ஆயிடிச்சி, லாஸ்ட் ஆர்டர் ப்ளீஸ்.

பதினஞ்சு லார்ஜ் பகார்டி, ஒம்போது கிங்க் ஃபிஷர் ஸ்ட்ராங்க், நாலு சோடா, ஆறு வாட்டர் பாட்டில், நாலு ஃபுரூட் சால்ட், மூணு வெஜ் சாலட், ஒரு ஸீ ஃபுட் ப்ளேட்டர்… அப்புறம் மூணு தயிர் சாதம்.

III

இந்த நாவலைப் படித்த போது பல சந்தர்ப்பங்களில் எனக்கு ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதை ஞாபகத்துக்கு வந்தது. முழுக்கவும் போர்னோ மொழியில் 1928-இல் எழுதப்பட்ட நாவல் அது.  அந்த அளவுக்குத் தமிழில் போர்னோ மொழியில் எழுதுவதற்கு சுதந்திரம் இல்லை.  ஆனால் சம்பவங்களிலும், அதை விட முக்கியமாக discourse இலும் இந்த நாவல் கண்ணின் கதை நாவலின் தளத்திலும் நின்று விளையாடி விட்டு, அதையும் தாண்டிச் செல்கிறது.

கண்ணின் கதையில் வரும் ஆணுக்கும், அவன் தோழி சிமோனுக்கும் பதினாறு வயது. முதல் பக்கத்திலேயே அவன் அவளுடைய யோனியைப் பார்க்கிறான். 

She had black silk stockings on covering her knees, but I was unable to see as far up as the cunt (this name, which I always used with Simone, is, I think, by far the loveliest of  the names for the vagina).

அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட அறையின் மூலையில் ஒரு சாஸரில் பால் இருக்கிறது, பூனைக்காக.  அவள் உடனே அந்தப் பாலின் மீது அமர்ந்து தன் cunt-ஐ நனைக்கிறாள். 

(இந்த நாவலை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழிபெயர்த்து வைத்திருந்தேன்.  அதைப் படித்துப் பார்த்த ஒரு எழுத்தாளர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அலறிக் கொண்டு ஓடியது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.  அலறிக் கொண்டு என்பதை அதே அர்த்தத்தில் வாசிக்கவும்.  Cunt என்பதைத் தமிழில் எப்படி எழுத வேண்டுமோ அப்படியே எழுதியிருந்தேன்.)

கண், முட்டையின் மஞ்சள் கரு ஆகிய இரண்டும் யோனியின் உருவகங்களாக அந்தக் கதையில் வரும்.  பிறிதொரு அத்தியாயத்தில் ஸிமோன் முட்டையின் மீது அமர்ந்து பெண்குறியால் தேய்ப்பாள்.

தற்கொலை குறுங்கதைகளில் சாந்தி இப்படிச் செய்கிறாள்:

லேசாக விழிப்பு வந்த அவன் அவளைத் தன் மேல் கிடத்தி, கமான், ஐ வாண்ட் டூ கிஸ் யூர் வஜைனா என்றான்.

சாந்தி அன்புடன் ஏறி அவன் முகத்தில் அமர்ந்தாள்.

அவன் ஒரு முத்தமிட்டு மூச்சுத் திணறி இறந்தான்.

சாந்தி தன் காதலர்களையும், கணவர்களையும் விதவிதமாகக் கொலை செய்கிறாள்.  அந்தக் கொலையில் எந்தவிதமான உணர்ச்சியும் இருப்பதில்லை. கண்ணின் கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது:

I remember that one day, when we were in a car tooling along at top speed, we crashed into a cyclist, an apparently very young and very pretty girl. Her head was almost totally ripped off by the wheels. For a long time, we were parked a few yards beyond without getting out, fully absorbed in the sight of the corpse. The horror and despair at so much bloody flesh, nauseating in part, and in part very beautiful, was fairly equivalent to our usual impression upon seeing one another.

”ஏகாந்தமாக கண் மூடி மயங்கியவனின் தொண்டைக் குழிகளில் ஹை ஹீல்ஸின் ஹீல்ஸை வைத்து அழுத்தியபடி நடந்த போது மட்டுமே சாந்தியின் ஒற்றைக்கால் செருப்பு தொலைந்து போனது.”

”திரும்ப வந்து அவனருகே அமர்ந்து சடாரென கிச்சன் தோல்சீவியால் குக்கும்பரை சரசரவென தோல் சீவ ஆரம்பித்தாள்.” (குக்கும்பர் என்பது இங்கே ஆண்குறி)

”அதனால் நீ போய் சாந்தியின் காதலனின் புட்டத்தில் கொத்து, அதனால் அவன் சாவன், அதனால் நீ சாவாய் என்றான் எமன்.”

இப்படி ஒவ்வொரு கதையிலும் ஆண்கள் செத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  நாவல் முழுக்கவும் ஏன் இப்படி மரணம் தொடர்ந்து கொண்டே வருகிறது என்ற கேள்விக்கு விடை சொல்ல வேண்டுமானால் அதற்கு ஒரு தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.  அது இங்கே என் வேலை அல்ல என்பதால், உங்களுக்கு ஒருசில சமிக்ஞைகளை மட்டும் காட்டிச் செல்கிறேன்.  ஜார்ஜ் பத்தாய் “Eroticism: Death and Sensuality” என்ற ஒரு நூல் எழுதியிருக்கிறார்.  அதையும் தற்கொலை குறுங்கதைகளையும் சேர்த்து வாசித்தால் இந்த நாவலின் sexual politics-ஐ இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.  நான் சொல்வது வெறும் கோட்பாடுகள் அல்ல; நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள்.  ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும்.

கடந்த ஆறு மாதங்களாக நான் எக்ஸைல் மற்றும் ஸீரோ டிகிரி மொழிபெயர்ப்பில் மூழ்கிக் கிடக்கிறேன்.  மொழிபெயர்ப்பாளர்களோடு நானும் co-translator ஆக செயல்பட்டு வருகிறேன்.  இந்த நிலையில் எக்ஸைலின் அடுத்த அத்தியாயத்தைச் செப்பனிட்டு ஒரு வாரத்துக்கு முன்னால் மொழிபெயர்ப்பாளருக்கு நான் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் என் உயிர்ப் பிரச்சினையான அந்த மொழிபெயர்ப்பைக் கூட தள்ளி வைத்து விட்டு, ஒரு வாரம் ஓய்வெடுங்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி விட்டு இந்த முன்னுரை வேலையில் ஈடுபட்டேன்.  இது வெறும் எழுத்து வேலை அல்ல.  ராப்பகலாகப் படிக்க வேண்டியிருந்தது.  ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின் எழுத்தைத் திரும்பவும் வாசிக்க வேண்டியிருந்தது.  அந்த அளவுக்கு ஒரு கவன ஈர்ப்பைக் கேட்டு விட்டது தற்கொலைக் குறுங்கதைகள்.  இன்னொரு விஷயம், இந்த முன்னுரையின் மற்ற பகுதிகளிலும் தற்கொலைக் குறுங்கதைகள் என்றே வாசிக்கவும்.  அராத்து, தற்கொலை குறுங்கதைகள் என்றே எழுதியிருந்ததால் நானும் அப்படிக் குறிப்பிட்டு விட்டேன்.  பிறகுதான் பார்த்தேன், அவர் வாழ்க்கையை வாழ்கை என்றே தட்டச்சு செய்வதால் அவருடைய மடிக் கணினியில் க் என்ற எழுத்து வராது போல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  எனவே தற்கொலைக் குறுங்கதைகள் தான் சரி.  இனி முன்னுரையின் கடைசிப் பகுதி.    

IV 

பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.  முதலாவது, self reflexivity.  அதற்குள் போவதற்கு முன்னால் நாம் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பின்நவீனத்துவமோ அதன் தொடர்பான விஷயங்களோ வெறும் இலக்கிய உத்தி அல்ல.  அது ஒரு அரசியல் நிலைப்பாடு.  எப்படி என்று பார்ப்போம். 

Self reflexivity என்பது ஒரு பிரதி தன்னைத் தானே பிரதிபலித்துக் கொள்வதாகும்.  தற்கொலைக் குறுங்கதைகளிலிருந்து சில உதாரணங்கள்:

”சாந்தியின் மனம் தத்தளித்தது. ஒரு சந்தேகத்துக்காக இந்தக் கதை எழுதுபவன் சாந்தியிடம் தத்தளிக்கிறதுதானே என ஜாடைமாடையாகக் கேட்டதற்கு, போடா பத்தினிக்குப் பிறந்த தேவிடியா மகனே எனத் திட்டினாள்.” (எளிமை)

”ஃபக் ஆஃப்” என்ற கதை:

”என் மூளையிடம் கேட்டேன் – உன்னால், என் மூலம், நான் எழுதுவதை இலக்கியத் தரமாக எழுத வைக்க முடியுமா என்று.

மூளை சொன்னது – ஃபக் ஆஃப், நான் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். I am totally fit. எப்போதாவது நீ குடிச்சிட்டு எழுதறதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.”

நவீனத்துவத்தில் பிரதிக்கு மதிப்பு இல்லை. பிரதியை உருவாக்கும் கலைஞனே அங்கு பிரதானமானவன்.  நவீனத்துவம் வெளியிலிருந்து செல்வாக்கு செலுத்தும், பாதிக்கும் விஷயங்களை தவிர்க்கவே விரும்புகிறது.  அது அந்தக் கலைப் படைப்பை சிருஷ்டிக்கும் கலைஞனின் உள் தர்ஸனத்தையே பெரிதும் நம்புகிறது. அந்த வகையில் அது வெளிச் சக்திகளிலிருந்து பாதிக்கப்படாத சுய அதிகாரம் (autonomous) பொருந்தியதாக இருக்கிறது.  இத்தகைய வரலாற்றுத் தருணத்தில் தான் Roland Barthes எழுத்தாளன் செத்து விட்டான் (Author is dead) என்று அறிவித்தார்.

சில வாக்கியங்கள் மானுட வாழ்வை மாற்றி அமைப்பதில் வல்லமை கொண்டவையாக இருக்கின்றன.  அஹம் ப்ரம்மாஸ்மி என்பது அப்படிப்பட்ட வார்த்தைகளில் ஒன்று. I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it என்ற வால்டேரின் வாசகம் இன்னொன்று.

Make love, not war என்பது ஃப்ரான்ஸில் மே 1968 மாணவர் புரட்சியின் போது சொல்லப்பட்ட வாசகம். அதே போன்ற இன்னொரு வாசகம், எழுத்தாளன் செத்து விட்டான் எனபது.  இந்த வாசகம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் அறிமுகமான போது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.  இந்த வாசகம் ஜனநாயகத்தன்மையை நிலைநாட்டும் ஒரு அரசியல் நிலைப்பாடு ஆகும். எப்படி என்றால், தாய்வழிச் சமூகத்தில் தாய் அதிகாரம் செலுத்துகிறாள்; தந்தை வழிச் சமூகத்தில் தந்தை அதிகாரம், கல்விக் கூடங்களில் ஆசிரியர் அதிகாரம், மருத்துவமனைகளில் மருத்துவர் அதிகாரம், சிறைச்சாலைகளில் கண்காணிப்பாளர் அதிகாரம்.  இதேபோல் எழுத்தைப் பொறுத்தவரை எழுத்தாளன் அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறான்.  நான் தருகிறேன், நீ பெற்றுக் கொள் என்று வாசகரை வெறும் நுகர்பவனாக (consumer) மாற்றுகிறான்.  பழைய பிரதிக்கும் பின்நவீனத்துவப் பிரதிக்கும் உள்ள வித்தியாசத்தை நான் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவது வழக்கம். பழைய பிரதி fast food; பின்நவீனத்துவப் பிரதி நாமே மீன் பிடித்து சமைத்துச் சாப்பிடுவதைப் போன்றது.  எழுத்தாளன் செத்து விட்டான் என்றால் எழுத்தாளனின் அதிகாரம் – பிரதியின் ஒற்றைப் பரிமாணத் தன்மை செத்து விட்டது என்று பொருள்.  பின்நவீனத்துவப் பிரதியில் வாசகனும் அந்த வாசிப்பினூடேயே ஒரு எழுத்தாளனாக மாறுகிறான்.  இப்படிப்பட்ட திறந்த வாயில்களைக் கொண்டதாக இருக்கிறது பின்நவீனத்துவப் பிரதி. பழைய பிரதியோ மூடிக் கொண்டிருக்கிறது.   

ஆக, எழுத்தாளன் செத்தால்தான் பிரதி தன்னைத்தானே பிரதிபலித்துக் கொள்ளும் தன்மையைப் பெற முடியும்.  இப்படிப்பட்ட self reflexivity கொண்ட பிரதிக்கு போர்ஹேஸின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். தமிழில்  என்னுடைய நாவல்களான எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், ஸீரோ டிகிரி, கர்னாடக முரசு தொகுப்பில் வந்த சில சிறுகதைகள் மற்றும் ஷோபா சக்தியின் சிறுகதைகள்.  அதற்குப் பிறகு தற்கொலைக் குறுங்கதைகள் தான். அதிலிருந்து மேலும் சில உதாரணங்கள்:

”சாந்தியை பத்து வருடம் கழித்து யதேச்சையாய் பார்த்த போது குண்டாகி இருந்தாள். பழைய அழகு குலைந்திருந்தது. சாந்தி புத்திசாலி.  வழக்கமாக இந்த சிச்சுவேஷனில், அடையாளமே தெரியவில்லை என்ற சொல்லாடல் வரும் என்பதால், அவள் முன் ஜாக்கிரதையாக அவளின் எலக்‌ஷன் போட்டோ ஐடி கார்டை மிகப் பெரியதாக்கி ஃப்ளெக்ஸ் பிரிண்ட் அவுட்டில் தூக்கிப் பிடித்தவாறே நடந்து வந்து கொண்டு இருந்தாள்.

என்ன சாந்தி என்றேன், வாஞ்சையோடு.

வாஞ்சைன்னா என்னாடா என்றாள்.” (நாஸ்டால்ஜியா என்ற கதையில்)

“ஒருநாள்” என்றுதான் இந்தப் பத்தி ஆரம்பிக்க வேண்டும். ஆனால் சுந்தருக்கு இப்படி எதையும் சாதாரணமாகச் செய்தால் பிடிக்காது என்பதால் – நிறைஞ்ச வெள்ளிக்கிழமை என ஆரம்பிக்கப் போகிறது இந்தப் பத்தி. என்னதான் வித்தியாசமாகச் செய்ய நினைத்தாலும் இந்தப் பத்தி ஒருநாள் என்றே ஆரம்பித்து விட்டதைத் தவிர்க்க முடியவில்லை பாருங்கள். அடுத்த பத்திதான் நிறைஞ்ச வெள்ளிக்கிழமை…. ச்சே சரி சரி வாருங்கள் அடுத்த பத்திக்கு… அடுத்த பத்தியில் கதை ராக்கெட் வேகம் எடுக்கப் போகிறது…” (டாக்டர்)

தேவதையின் இளைய தங்கை என்ற கதையில் self reflexivity ஒரு உச்சத்தைத் தொடுகிறது.

”வேலையின் அசதி காரணமாக ஓடுபிணமாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாள் சாந்தி. வீடு நெருங்கி விட்டது. (இது கதைக்குத் தேவையா). காலிங் பெல் அடித்தாள்.

இந்தக் கதை கடைசியில் கணவன், சாந்தியின் ஒப்புதல் இல்லாமலேயே புணர்ந்து விட்டு தூங்கிக் கொண்டிருக்க, பக்கத்தில் சாந்தி கேவிக் கேவி அழுது கொண்டே, இல்லாத மோட்டு வளையை நிர்வாணமாக பார்த்துக் கொண்டிருப்பதாகத்தான் முடியப் போகிறது.

நடுவில் வழக்கமாக நடக்கும் சண்டை, வாக்குவாதம், திட்டு, அடி, உதை, கொடூரம் இதையெல்லாம் படிக்க வாசகர்கள் என்ன கேனையர்களா? சாந்திக்கோ அல்லது கணவனுக்கோ வேண்டுமானால் தன் பாய் ஃபிரெண்டிடம் / கேர்ள் ஃபிரண்டிடம், கதை சொல்ல ரா மெட்டீரியல் கிடைக்கும்.

இருந்தாலும் இதையெல்லாம் ஒரு கதை எனப் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வேண்டாமா?

சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம்  சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ.”

பின்நவீனத்துவத்தின் மற்றொரு கோட்பாடு, intertextuality or text within the text.  ஏற்கனவே எழுதப்பட்ட இன்னொரு பிரதியிலிருந்து சிலவற்றை எடுத்து நம்முடைய பிரதியில் பயன்படுத்திக் கொள்வது அல்லது பகடி செய்வது. புயலிலே ஒரு தோணியில் இளங்கோ அடிகளை அவ்வாறு பகடி செய்திருப்பார் ப. சிங்காரம்.  தற்கொலைக் குறுங்கதைகளில் அஞ்சலி என்ற கதையில் மோகமுள், நினைவுப் பாதை, எக்ஸைல் ஆகிய மூன்று நாவல்கள் பகடி செய்யப்பட்டுள்ளன. முதலில் மோகமுள்.

”நிறைய மெலடி சாங்ஸ் கலெக்ஷன் வச்சிருக்கேன், கேக்கறியா?

அய்யோ, நாவல்ல கடைசியாதான் கேக்க விட்டாரு, இதானே வேண்டும் என்று. எதுக்கு சாங்ஸ், அது இது என சுத்தி வளைச்சி பேசிட்டு, என்னை சுகிக்கணும் அதுதானே , வா… வந்து எடுத்துக்கோ.

யமுனாவை அணைத்தபடி, நீ என் ஆதர்ஸ நாயகிடி செல்லம் என்றான்.

ரூம்ல ஏசி இருக்கா என்றாள்.

பக்கத்தில் படுத்தபடி, அப்பாடா நாவல்ல பெட்ரூம் சீன் வறதுக்குள்ள எனக்குத் தாவு தீந்துடிச்சி; படிக்கிற நீங்கள்ளாம் எப்பிடி பொறுமையா இருந்தீங்க என்றாள்.”

மோகமுள் யமுனாவைத் தொடர்ந்து நினைவுப் பாதை சுசிலாவும், எக்ஸைல் அஞ்சலியும் தற்கொலைக் குறுங்ககதைகளில் என்ன பாடு படுகிறார்கள் என்பதை நீங்களே நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

பின்நவீனத்துவப் பிரதியின் இன்னொரு அம்சம், வாசிப்பின் இன்பம்.  Roland Barthes கூறிய Pleasure of the Text. சமகாலத் தமிழ் இலக்கியம் வாசகர்களிடம் சரியாகப் போய்ச் சேராததற்கான பல காரணங்களில் ஒன்று, அந்த எழுத்தை வாசிப்பது மிகவும் இம்சையாக இருக்கிறது என்பதாகும். வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட திருகல் மொழியில் எழுதினால் அது இலக்கியம்; புரிகிறாற்போல் எழுதினால் இலக்கியம் அல்ல என்பதாக ஒரு கருத்து இலக்கியச் சூழலில் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.  பல இலக்கியவாதிகளின் எழுத்து எந்த அளவுக்கு இம்சையாக இருக்கிறது என்பதை சிறு முதலிரவு என்ற ஒரு கதையிலேயே பகடி செய்திருக்கிறார் அராத்து.  இந்த இம்சையெல்லாம் இல்லாமல், தற்கொலைக் குறுங்கதைகள் அட்டகாசமான ஒரு வாசிப்பு இன்பத்தை நமக்கு நல்குகிறது.  இந்த நாவலை நீங்கள் விரும்பலாம்; அல்லது, வெறுத்து ஒதுக்கலாம்.  ஆனால் அலுப்பூட்டுகிறது என்று மட்டும் சொல்லவே முடியாது.

புனிதங்களைச் சிதைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு கூறு.  தற்கொலைக் குறுங்கதைகளின் ஒவ்வொரு எழுத்துமே நம் கலாச்சாரம் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதத்தைக் காலில் போட்டு மிதிக்கிறது.  பெண்மை, தாய்மை, கற்பு, எழுத்தின் தூய்மை, காதல், கடவுள், மரணம் என்று எல்லாவிதமான புனிதங்களும் இந்த நாவலில் புனிதத்தன்மையை இழந்து நிற்கின்றன.  பிரதானமாக இந்தக் கலகத்தைச் செய்பவள், கதையின் நாயகி சாந்தியாக இருக்கிறாள்.  அது தவிர, பாத்திரங்களின் பெயர்களில் கூட புனிதத்தின் சிதைவைப் பார்க்க முடிகிறது. ஸ்ரீ மண்ணாங்கட்டி, கோண்டி ராமசாமி, பிதுக்கு முழி, ஊசி, மொடக்கத்தான், மறுக்கான், கழனித் தண்ணி, மொளைக்குச்சி, சுடுகாட்டான், மக்கட்டை, ஓம்பொடி, வெள்ளை அப்பளம் போன்ற பெயர்களெல்லாம் இந்த நாவலில் வரும் பாத்திரங்களின் பெயர்கள். (இந்த இடத்தில் நாம் பாரம்பரியமான எழுத்தாளர்கள் தங்கள் பாத்திரங்களுக்கு வைக்கும் பெயர்களையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும்.  அப்படி ஒரு அமெரிக்கையான பெயர் அரவிந்தன்.)

புனிதங்களின் சிதைவுக்கு நாவலிலிருந்து ஒருசில உதாரணங்களைப் பார்ப்போம்:

”தம்பி இன்னொரு கோட்டர் எடுத்தாப்பா. ஆங்… அது என்னமோ தெரியலை என் பொண்டாட்டிக்கு நான் குடிச்சா புடிக்கவே மாட்டேங்குது.

என்னா மச்சி, எல்லா பொண்டாட்டிக்கும்தான் குடிச்சா புடிக்காது.

ஏன் மச்சி பொய்யி புளுவற?” (குடி)

நமது கலாச்சாரப் புனிதங்களிலேயே பெரும் புனிதமான வரலாறு என்ற பெருங்கதையாடல் குஷிகேஷி என்ற கதையில் சிதைவுறும் விதத்தைப் பாருங்கள்:

”அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்.”

பின்நவீனத்துவத்தின் இன்னொரு அம்சம், குப்பையைக் கச்சாப் பொருளாக உபயோகப்படுத்திக் கொள்வது. இப்படி உருவாக்கப்படும் எழுத்தை Literature of Trash என்று சொல்வார்கள்.  இதை டொனால்ட் பார்த்தெல்மேவின் எழுத்தில் மிகச் செறிவாக செய்து காட்டியிருப்பார். இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது.  ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி.  சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார்.  கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான்.   

CREAM OF VEG SOUP 50

SWEET CORN VEG SOUP 50

SWEET & SOUR   SOUP 55

VEG CLEAR SOUP 45

CREAM OF TOMATO SOUP 50

CREAM OF MUSHROOM SOUP 55

HOT & SOUR VEG SOUP 50

இப்படியாக நூறு இருநூறு அய்ட்டங்களின் பட்டியல் நீள்கிறது. 

கதையின் முடிவு இது:

”15 நிமிடம் மெனுவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேடம் என்றபடி ஆர்டர் எடுக்க ரெடியானான் சர்வர்.

ஒரு கர்ட் ரைஸ். சிக்கன் கறி இல்லையா எனக் கேட்டாள் சாந்தி.”

***

இன்றைய கால கட்டம் ஒவ்வொரு மனிதனிடமும் கடுமையான மனநோயை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  இந்த நோய் நம்முடைய சமூக வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் வன்முறையாகவும், அபத்தமாகவும் இன்னும் பலவிதமாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை ஒவ்வொரு தருணத்திலும் நாம் அனுபவித்து வருகிறோம்.  தற்கொலைக் குறுங்கதைகள் முழுவதுமே இந்த madness மிக வலுவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு கதையை உதாரணம் காட்டுகிறேன்.  கதையின் பெயர், லவ் யூ.

ஹலோ…

ஹலோ ஏன் இவ்வளோ நேரம் கூப்பிடல நான் உனக்கு டிக்கட் புக் பண்றதுக்கு… இல்லடி அதுக்குத்தான்… போடா நான் சொல்றத கேக்கவே கேக்காத, நான் லேப்டாப்பை ஓப்பன் செஞ்சப்ப என் ஃபேமிலில இருந்து விருந்தாளி வந்துட்டாங்க… இல்ல செல்லம் டிக்கட்டே வேணாம்னு சொல்லத்தான்… நான் அதைக்கூட கண்டுக்காம உனக்காக டிக்கட் போட ட்ரை பண்ணா கனெக்ஷன் கிடைக்கல, கஸ்டமர் கேர் கால் பண்ணி… ஏய் இருடி… கேட்கலாம்னு பாத்தா ஏதேதோ ஆப்ஷன் வருதே ஒழிய கஸ்டமர் கேர் எக்சிக்யூட்டீவ் கிட்ட போக மாட்டேங்குது… ஏய் நான் சொல்றத கேக்கறயா… அப்புறம் என் ஃபிரண்டுக்கு போன் பண்ணி… ஏய் லூஸு ஒரு நிமிஷம் நான் சொல்றத… டிராவல்ஸ் மூலமா புக் பண்ண முடியுமான்னு கேட்டேன், அப்ப பாத்து என் ஹஸ்பெண்ட் கால் பண்ணி, கால் வெயிட்டிங் போவுது… ஏன்டி பைத்தியம் நான் என்ன லூஸா, ஒரு நிமிஷம் சொல்ரத கேளுடி… ஒடனே கட் பன்ணிட்டு அவர்கிட்ட பேசினா ஒரே திட்டு, சாவலாம்னு தோணிச்சி, இருந்தாலும்… செருப்படி வாங்குவ, இப்ப நிறுத்தப் போறியா இல்லியாடி? உனக்காக பிரவுஸிங்க் செண்டர் போலாம்னு டிரஸ் பண்ணிட்டு இருக்கும் போது… ஷிட்… கரண்ட் கட்… ஃபக் ஆஃப்… பைக் சாவி… ச்சீ ஒரு நிமிஷம்… கிடைக்கல நான் சொல்றத… அப்புறம் நடந்தே… கேளேண்டி லூஸு… பிரவுஸிங் செண்டர் போனேன்… ஓத்தா இப்ப நிறுத்துறியா இல்லையாடி? எனக்கு இது வேணும்… என்னாடி வேணும் எருமை மாடு லிஸன் பண்ண மாட்ட… நல்லா திட்டுங்க, எல்லாரும் திட்டுங்க… ஐயோ ஏன்டி… திட்டு வாங்கத்தான் நான் பொறந்திருக்கேன்… ப்ளீஸ் ஒரு நிமிஷம்… நல்லா திட்டுங்க… இல்லடி எனக்கு டிக்கட்டே வேணாம்… இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல?

டிக்கட் போட்டியா?

இல்லை போட முடியலை, அதைத்தான் சொல்ல வந்தேன், சொல்ல வுட்டாதான நீ… போடா.

ஏய் நீ என்னை பேசவே உடலையேடி, சாரி செல்லம்…

ஐ லவ் யூ.

ஐ லவ் யூ.

***

தமிழ் இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம் அறிமுகம் ஆகி சுமார் முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அறிமுகப்படுத்தியவர்கள் பெரும் பண்டிதர்கள், ஆங்கிலம் பேசும் ஜாம்பவான்கள், மேட்டுக்குடியைச் சேர்ந்த புத்திஜீவிகள்.  ஆனால் இவர்கள் யாருமே புனைகதை வெளியில் பின்நவீனத்துவம் எப்படிச் செயல்பட முடியும் என்பதை செயல்படுத்திக் காட்டியதில்லை.  நடந்ததெல்லாம் வெறும் சிறுபிள்ளைத்தனமான, நகைப்புக்குரிய விஷயங்களாகி விட்டன.  அதாவது, பின்நவீனத்துவத்தை முறையாகப் பயின்ற இவர்களிடம் கலைக்கு வேண்டிய அடிப்படையான சிருஷ்டிகரத்தன்மை இல்லாத காரணத்தால் பின்நவீனத்துவத்தை இழித்தும் பழித்தும் பேசிய பழமைவாதிகளால் எள்ளி நகையாடப்படும் பிரதிகளை இவர்கள் உருவாக்கினார்கள்.  வெறும் கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் பயின்று உருவாக்கப்படுவதல்ல இலக்கியம் என்ற எளிய விஷயத்தை இவர்கள் அறிந்து கொள்ளாததே இந்தத் தோல்விக்குக் காரணம்.

இந்தப் பின்னணியில் பின்நவீனத்துவமும் தெரியாமல், சரியான இலக்கியப் பின்புலமும் இல்லாமல் வெளியிலிருந்து வந்த ஒரு மனிதர் இப்பேர்ப்பட்ட ஒரு பாய்ச்சலை இலக்கியத்திலும் மொழியிலும் நிகழ்த்த முடியும் என்பதே எனக்கு ஒரு நகைமுரணாகத் தெரிகிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும் போது இது ஒன்றும் அத்தனை பெரிய அசாத்தியமான விஷயம் அல்ல என்றும் தோன்றுகிறது.  காரணம், கலைக்குத் தேவையான ஒன்று அராத்துவிடம் உள்ளது.  அது, கலையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்காமல் கலையையும் வாழ்வின் ஒரு கூறாக அனுபவம் கொள்வது.  1980-இல் இலக்கியம் வெளிவட்டம், படிகள் போன்ற பத்திரிகைகளில் கலையும் வாழ்க்கையும் பற்றி பின்நவீனத்துவப் பண்டிதர்களிடம் நான் விவாதம் செய்த கட்டுரைகளை நீங்கள் படித்தால் இது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளலாம். 

ஒரே ஒரு உதாரணம் தருகிறேன்.  பறைக் கொட்டு என்பது மரணத்துக்காக மட்டுமே அடிக்கப்படுவது என்பது நமக்குத் தெரியும்.  அராத்து தனது திருமணத்தின் போது நாதஸ்வரமும் வேறு எந்த சாஸ்த்ரீய வாத்தியக் கச்சேரியும் வைக்கவில்லை.  ஸ்ரீவைஷ்ணவ குலத்தைச் சேர்ந்த அவருடைய திருமணத்தில் பறைக் கொட்டு தான் அடிக்கப்பட்டது.  கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு, பீடி புகைத்தபடி பறையை தணலில் வாட்டிக் கொண்டிருந்த தலித் கலைஞர்களின் பறை முழக்கத்தோடு தான் அராத்துவின் திருமணம் நடந்தது.  அந்த முழக்கத்திலிருந்து பிறந்ததுதான் தற்கொலைக் குறுங்கதைகள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் வெறும் படிப்பு மட்டுமே நுண்ணுணர்வைக் கொடுத்து விடாது என்பதை வலுயுறுத்துவதற்காகத்தான்.      

இறுதியாக, கதையாடல் மற்றும் மொழி (micro and macro) ஆகிய இரண்டு தளங்களிலும் புரட்சிகரமான கட்டுடைப்பு செய்து புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டிருக்கும் தற்கொலைக் குறுங்கதைகள் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் இதுகாறும் நடந்த வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக எதிர்காலத்தில் சொல்லப்படும். மட்டுமல்லாமல், உலக மொழிகள் எதிலுமே பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும் ஒரு பிரதி இதுவரை வெளிவந்தது இல்லை.  அப்படிக் கலைத்துப் போடும் முறைக்கு Digimodernism என்று இப்போதுதான் பெயரே வைத்திருக்கிறார்கள்.  ஆனால் தமிழிலோ அப்படி ஒரு நாவலே வந்து விட்டது.  Non-liner writing என்ற ஒரு புதிய genre ஸீரோ டிகிரி என்ற நாவல் மூலம் உலக இலக்கியத்துக்குத் தமிழின் பரிசாக வழங்கப்பட்டது.  இப்போது Digimodernism என்ற genre-இல் உலகிலேயே முதல் நாவல் வெளிவந்திருக்கிறது.  இதைத் தமிழர்களாகிய நாம் கொண்டாட வேண்டும்.     

Comments are closed.