தேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு

சென்ற தேர்தலில் முக்கியப் பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டது ஊழலும் விலைவாசி உயர்வும்.  பின்னதை விட  முன்னதுதான் மிகப் பெரிய விவாதப் பொருளாக இருந்தது.  ஐயாயிரம் கோடி ஊழல் பத்தாயிரம் கோடி ஊழல் என்று ஆரம்பித்து ஐநூறு லட்சம் கோடி ஊழல் என்றெல்லாம் வந்தபோது மக்களுக்குக் கண் சுற்றி விட்டது.  எத்தனை பூஜ்யம் வரும் என்றே தெரியவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள்.  ”அஞ்சு ரூபாய்க்கு டிக்கட் எடுக்கவில்லை என்றால் செக்கிங் ஸ்குவாடு போட்டு ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பது போல் பஸ்ஸின் இரண்டு கேட்டுகளிலும் நின்று  விரட்டி விரட்டிப் பிடிக்கிறீர்கள்.  ஆனால் 500 கோடி ஊழல் செய்தால் மரியாதை அல்லவா கொடுக்கிறீர்கள்?”  இதுதான் அப்போது ஒட்டு மொத்த இந்தியனின் கேள்வியாக இருந்தது.  நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேசமே திரண்டது.  சுதந்திரப் போராட்டத்தையே நடத்திக் காட்டிய காங்கிரஸ் வெறும் 44 தொகுதிகளையே வெல்ல முடிந்தது.  இது பழைய கதை.

ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் பிரதம மந்திரி நினைத்து விட்டால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது.  அதற்கென்று பல துறைகள் இருக்கின்றன.  அதில் ஒன்று, ஆளும் கட்சி எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் நீதித் துறை. இருந்தாலும் அரசியல்வாதிகள் மட்டும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவது இல்லையே, ஏன் என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்து கொண்டிருந்தது.  அந்த நிலையில் ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிரான நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு இந்திய நீதித்துறையின் மீது மக்களுக்கு அழுத்தமான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.  குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதி மன்றமும் உறுதிப்படுத்தியது நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை.  ஆனாலும் கடந்த தேர்தலில் பெரும் விவாதமாக இருந்த 2 ஜி ஊழலை மத்திய புலனாய்வுத் துறையால் (சி.பி.ஐ.) நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போனது ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்குக் கிடைத்த பின்னடைவுதான்.  2 ஜீ ஊழலை விசாரித்த நீதிபதி செய்னியின் 1553 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் ஒரு வாக்கியத்தை மட்டும் என்னால் மறக்கவே முடியவில்லை.  “கடந்த ஏழு ஆண்டுகளாக எல்லா வேலை நாட்களிலும் – கோடை விடுமுறை உட்பட எங்கள் நீதிமன்றத்தில் நான் காலை பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை வழிமேல் விழி வைத்து உட்கார்ந்திருந்தேன்; யாராவது சட்டபூர்வமான சாட்சியை எடுத்துக் கொண்டு வருவார்கள் வருவார்கள் என்று.  ஆனால் யாருமே வரவில்லை.”

கடந்த தேர்தலில் ஊழலை ஒழித்து விடுவதாக ஒவ்வொரு கூட்டத்திலும் சூளுரைத்தார் மோடி. ஆனால் அவர் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்கான முதல் அடியைக் கூட அவரால் எடுத்து வைக்க முடியவில்லை.  கேட்டால் அதற்கெல்லாம் பத்து இருபது ஆண்டுகள் ஆகும் என்று பதில் வருகிறது.  இதுதான் பிரச்னை.  தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் வாக்குறுதியை அள்ளி வீசுவார்கள்.  ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு கேட்டால் இருபது ஆண்டுகள் வேண்டும் என்பார்கள்.

மக்களுக்கு இப்போதைய நிலையில் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, சர்வாதிகாரத்தை நோக்கிய பாதை.  இரண்டு, ஊழல் அரசியல்.  இதற்கு மாற்றாக உள்ள தேசியக் கட்சிகளும் அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை.  யாதவ்களின் சமாஜ்வாதி கட்சியின் அடையாளம் ஊழல், ஜாதி, நிலப்பிரபுத்துவம். மாயாவதியின் பகுஜன் சமாஜில் வேறு மாதிரியான பிரச்னை.  அவர் ஆட்சிக்கு வந்தால் இந்தியா முழுவதும் யானை சிலைகள் வைக்கப்படும் என்று உறுதியாக நம்பலாம்.  ஏனென்றால், மாயாவதி உ.பி. முதல்வராக இருந்த போது மாநிலம் முழுவதும் ஆயிரக் கணக்கான கோடிகள் செலவழித்து யானை சிலை வைத்தார்.  (யானை அவர் கட்சியின் சின்னம்).  கிட்டத்தட்ட துக்ளக் ஆட்சிதான்.  மேற்கு வங்கத்தின் மம்தா மற்றொரு ஜெயலலிதா.  மற்றொரு மோடி.  முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.

இதை விட்டுவிட்டுத் தமிழகத்துக்கு வந்தால் இங்குள்ள தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என் நண்பர் ஒருவர் – ஸ்டாலின் எதிர்ப்பாளர் – ஒரு காணொளியை அனுப்பி வைத்தார்.  அதில் ஸ்டாலின் தன்னுடைய பேச்சில் ஒரு ஆங்கிலப் பழமொழியை மேற்கோள் காட்டுகிறார்.  (தேவையா?) A vacuum is filled when it is created.  வெற்றிடம் என்பது உருவாக்கப்படும் போதே (காற்றினால்) நிரப்பப்பட்டு விடுகிறது. இதை அவர் ”எ வேக்கும் இஸ் ஃபைல்ட் (filed) வென் இட் இஸ் க்ரைட் (cried)” என்று வாசிக்கிறார்.  நான் உடனே அந்த நண்பருக்கு மோடியின் ஆங்கிலப் பேச்சு ஒன்றை அனுப்பினேன்.  ஒரு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் அவர் மனைவி மிஸஸ் சிரிசேனா இருவரையும் வரவேற்கிறார் மோடி.  இதில் மிஸஸ் என்பதை அவர் எம்.ஆர்.எஸ். என்று படிக்கிறார்.  ஒரு கட்சியின் தலைவருக்கு ஆங்கிலம் தெரியாதது தப்பில்லை.  ஆனால் ஒரு மிகப் பெரிய தேசத்தின் பிரதம மந்திரிக்கு மிஸஸ் என்ற வார்த்தை கூடவா தெரியவில்லை?  இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு தேசத்தை ஆள முடியும்? எப்படி ஒரு தேசத்தின் பிரச்னைகளையோ, அதிகாரிகள் முன்வைக்கும் செயல் திட்டங்களையோ புரிந்து கொள்ள முடியும்?

நண்பர் சொன்னார், மோடி ஒரு முறைக்கு இரண்டு முறையாக மாநிலத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று குஜராத்தைத் தனது ஆட்சியில் ஒரு முதன்மை மாநிலமாக மாற்றிக் காண்பித்திருக்கிறார். ஆங்கிலம் தெரியாததில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் ஸ்டாலின் ஒன்றும்  கிராமத்து விவசாயியின் மகன் அல்லவே?  மந்திரியின் மகனாக வளர்ந்தவர்தானே?  அவர் என்ன பள்ளிக்கூடமே போனதில்லையா?

இதை நான் ஸ்டாலின் பற்றிய பிரச்னையாக மட்டும் பார்க்கவில்லை.  சென்சிபிலிட்டி சார்ந்த விஷயம் இது.  பள்ளிப்படிப்பினால் வரக் கூடியது அல்ல.  சென்னையிலேயே மிகப் பெரிய நூலகத்தைத் தன் வீட்டில் வைத்திருக்கும் கமல்ஹாசன்- ஸ்டாலினை விட சென்சிபிலிட்டி குறைந்தவராக இருக்கிறார். ஒரு பத்திரிகையாளர் கமலிடம் “ஒரு எழுத்தாளராக இருக்கும் நீங்கள்…” என்று கேள்வியை ஆரம்பிக்கிறார்.  படித்ததும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.  எழுத்தாளர் என்ற அப்பாவி ஜீவிக்கு இருக்கும் ஒரே அந்தஸ்து அந்த எழுத்தாளர் என்ற பெயர்தான்.  கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் சினிமா நடிகரான நீங்கள் அந்தப் பெயரையும் பிடுங்கிக் கொண்டால் எப்படி?  போலீஸ் ஸ்டேஷனில் கூடத்தான் ரைட்டர் என்று ஒருவர் இருக்கிறார்.  அவரையும் கமல் எழுத்தாளர் என்று சொல்லுவாரா?  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூடப் பார்த்தேன்.  இயக்குனர் ஷங்கரை பார்வையாளர்களுக்கு எழுத்தாளர் ஷங்கர் என்றே அறிமுகப்படுத்தி வைக்கிறார் கமல்.   ஒருமுறை அல்ல; இரண்டு முறை எழுத்தாளர் எழுத்தாளர் என்கிறார்.  உலக இலக்கியம் படித்தவரே இப்படி இருந்தால் ஸ்டாலின் வெற்றிடத்தை ஃபைலாக மாற்றி அழ வைத்ததில் என்ன தவறு இருக்கிறது?

***

மேற்கண்ட கட்டுரை நேற்றைய தினமலரில் வெளிவந்தது.  தினமலருக்கு நன்றி.  பின்குறிப்பாக மேலும் சில விஷயங்களை சொல்லத் தோன்றுகிறது.  தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும்.  ஏனென்றால், சென்ற பாராளுமன்றத் தேர்தலில் 37 எம்பிக்கள் அதிமுகவிலிருந்து வெற்றி பெற்றுச் சென்றும் தமிழ்நாட்டுக்கு அவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.  37 எம்பிக்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.  ஆனால் அதிமுக எம்பிக்கள் எதுவுமே செய்யவில்லை.  கமல்ஹாசன் கட்சிக்கு அதிக பட்சம் தொகுதிக்கு ரெண்டாயிரம் ஓட்டு கிடைக்கலாம்.  500 ஓட்டு கிடைக்கும் தொகுதி ஒன்றாவது இருக்கும் பாருங்கள்.  சினிமா நடிகர்களுக்கெல்லாம் ஓட்டுப் போடும் மனநிலையில் மக்கள் இல்லை.  விஜயகாந்த், ஜெயலலிதா, எம்ஜியார் விஷயமெல்லாம் வேறு.  அதை கமலோடு ஒப்பிட முடியாது.  சரியோ தவறோ, விஜயகாந்த் மக்களோடு உரையாடினார்.  கமல் ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

வடக்கில் காங்கிரஸ் மற்ற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.  மம்தா, மாயாவதி, அகிலேஷ் கட்சிகளுடன் சேர்ந்து.  மாயாவதியோ மம்தாவோ கூட பிரதமராக வரும் வாய்ப்பு உள்ளது.  அப்படி வந்தால் அது மோடி ஆட்சியை விட மேலானதாக இருக்காது.  ராகுல் வந்தால் ஓரளவு தப்பிக்கலாம்.  ஆனால் அது நடக்கும் என்று தோன்றவில்லை.  இந்தியாவின் எதிர்காலம் நம்பிக்கையூட்டக் கூடியதாக இல்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai