காஷ்மீர்

என் எழுத்தை அக்கறையோடு வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் இதற்குள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவர்கள் என் கருத்துக்களோடு முரண்படலாம்.  ஆனாலும் இந்த விஷயத்தை அவர்கள் கவனித்திருக்கலாம்.  அதாவது, எந்தப் பிரச்சினை குறித்தும் அந்தப் பிரச்சினையின் அடிப்படையை வைத்துத்தான் அணுகுவேன்.  உதாரணமாக, நான் மோடி எதிர்ப்பாளன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அதனால் அவர் செய்யும் அத்தனை காரியங்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்க மாட்டேன்.  இதுதான் பிரச்சினையின் அடிப்படையில் ஒரு பிரச்சினையை அணுகுவது.  இதை நான் பெரியாரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.  இப்படிப்பட்டவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு விழும்.  இவர் என்ன மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்று சொல்வார்கள்.  அப்படித்தான் இருக்கும்.  அப்படித்தான் தோன்றும்.  எந்தச் சூழ்நிலையில் எந்தப் பின்னணியில் எந்தப் பிரச்சினையை அணுகுகிறோம் என்பதுதான் முக்கியம். 

நான் மோடியை எதிர்க்கும் காரணம், இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் மாற்ற முடியாத அளவுக்கு வளரக் கூடிய வெறுப்பு அரசியலை அவர் இந்திய மக்கள் மனதில் விதைத்து விட்டார்.  இது இந்த சமூகத்துக்கு அவர் செய்த மிகப் பெரிய தீங்கு.  எத்தனை நல்ல காரியங்களை அவர் செய்தாலும் அவர் செய்த வெறுப்பு அரசியலால் ஏற்பட்ட தீய விளைவுகளை அவரால் மாற்ற இயலாது.  அவரை நான் எதிர்க்கும் இரண்டாவது காரணம், அவரிடம் ஃபாஸிஸக் கூறுகள் உள்ளன.  ஒரு ஜனநாயக நாட்டுக்கு அது நல்லதல்ல.  இந்தக் காரணங்களால் மோடி செய்யும் அத்தனை காரியங்களையும் எதிர்ப்பது முட்டாள்தனம்.  இந்தப் பின்னணியில் பின்வரும் கருத்துக்களை வாசிக்கவும்.

நான் ஜம்மு காஷ்மீரிலும் லே (லடாக்) பகுதியிலும் அதிகம் சுற்றியிருக்கிறேன்.  லேயைப் பார்த்த போது இந்தப் பகுதிக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் என்றே தோன்றியது.  மதம், இனம், மொழி, கலாச்சாரம் ஆகிய நான்கு விஷயங்களாலும் ஜம்மு காஷ்மீரத்திலிருந்து அந்நியப்பட்ட லே பகுதி மக்கள் இரண்டாம்தர குடிமக்களாகவே கருதப்பட்டனர்.  ஜம்மு காஷ்மீரே 100 ஆண்டுகள் பின்னால் இருந்தது என்றால் லே அதை விடவும் பின் தங்கிக் கிடந்தது.  எனவே லேயை ஜம்மு காஷ்மீரிலிருந்து பிரித்தது மிகவும் சரி.  அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த விசேஷ அந்தஸ்தை ரத்து செய்ததும் அந்த மாநிலத்துக்கு மிகவும் நன்மை செய்யக் கூடிய ஒன்று.  இதை நான் வெகுகாலமாக எழுதிக் கொண்டும் சொல்லிக் கொண்டும் இருந்தேன்.  இதைச் செய்யும் தைரியம் மோடிக்கு இருக்காது என்றே நினைத்தேன்.  என் கணிப்பை அவர் பொய்யாக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே. 

தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்கள் நமக்குக் கிடைக்கும் வசதிகளைக் கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்தார்கள்.  அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த விசேஷ அந்தஸ்தே அவர்கள் கழுத்தில் பாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.  வேறு மாநிலத்துக்காரர்கள் அந்த மாநிலத்தில் சொத்து வாங்க முடியாது என்பதால் அங்கே நிலமும் சொத்தும் வைத்திருந்தவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.  நூறு கிலோ தங்கத்தை வைத்துக் கொண்டு பட்டினி கிடந்த கதைதான்.  பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் எதுவுமே இன்றைய நவீன காலத்துக்குரியனவாக இல்லை.  சுருக்கமாகச் சொன்னால், நூறு ஆண்டுகள் பின்னே இருந்தது ஜம்மு காஷ்மீர். 

ஏழ்மை தலைவிரித்து ஆடியது.  25 ஆண்டுகளுக்கு முன்னே சுஜாதா எழுதினார், பத்ரிநாத் கேதார்நாத் போகும் யாத்ரீகர்கள் கடவுளை தரிசித்து புண்ணியம் கட்டிக் கொள்ளும் போது கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு கம்பளிப் போர்வை எடுத்துச் செல்லுங்கள், அங்கே உள்ளவர்கள் மைனஸ் பத்து டிகிரி குளிரில் ஸ்வெட்டர் கூட இல்லாமல், போர்வை கூட இல்லாமல் நடுங்கிச் சாகிறார்கள் என்று.  அதே நிலைமைதான் இன்னமும் நிலவுகிறது.  ஜம்முவில் வைஷ்ணோ தேவியைப் பார்க்க கீழேயிருந்து ஏழு மணி நேரம் மலை மீது நடக்க வேண்டும். படிக்கட்டுகள் உண்டு என்றாலும் பல இடங்களில் செங்குத்தாக இருக்கும்.  அதற்கு உங்களை மட்டக் குதிரையில் அமர்த்தி அந்தக் குதிரையைச் செலுத்துபவர்கள் நடந்துதான் செல்வார்கள்.  அவர்களைப் போன்ற ஏழைகளை உலகில் காண்பதரிது.  கிழிந்து போன ஸ்வெட்டர்களை அணிந்திருக்கும் அவர்கள் முஸ்லீம்கள்.  எலும்பும் தோலுமாக இருப்பார்கள்.  அத்தனை உயரத்தையும் இரண்டு முறை ஏறி இறங்குவார்கள்.  வருஷத்தில் நாலைந்து மாதம்தான் வேலை.  மற்ற மாதங்களில் பட்டினி. 

சொர்க்கமே பூமியில் இறங்கியிருக்கிறது என்பது போல் தோற்றம் தரும் காஷ்மீர் மக்கள் வெறும் சுற்றுலாவை நம்பி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக வாழ்ந்திருக்க முடியும்.  ஆனால் தீவிரவாதிகளால் அங்கே சுற்றுலாத் துறையே செயலில் இல்லை.  எங்கே திரும்பினாலும் கொடும் வறுமையையே நீங்கள் காண முடியும்.

ப. சிதம்பரம் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வின் இந்த முடிவை எதிர்த்துப் பேசியதை முழுவதும் கேட்டேன்.  வைகோ போல் அவர் பேச்சு நாராசமாக இல்லை.  வைகோ ஆங்கிலத்தை தமிழ் மேடைப் பேச்சு போல் பேசுகிறார்.  ஆங்கிலத்தை அப்படிப் பேசவே கூடாது.  வைகோவாவது இந்த அளவுக்குப் பேசுகிறார்.  மற்றவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  25 ஆண்டுகளாக பாராளுமன்றத்திலேயே வாழும் திருச்சி சிவாவெல்லாம் இந்நேரம் இந்தியிலேயே வெளுத்து வாங்க வேண்டாமா?  ஆனால் திமுககாரர், இந்தி பேச மாட்டார்.  ஆங்கிலமும் சரியாக வர மாட்டேன் என்கிறது.  ஆங்கிலம் சரளமாகப் பேசும் திமுகவினர் சிலரிடம் content இல்லை.  சரி, சிதம்பரம் பேச்சுக்கு வருவோம்.  அவர் பேச்சு வசியம் செய்வது போல் இருந்தது.  ஆனால் அவருக்கு ஜம்மு காஷ்மீரின் எதார்த்தம் தெரியவில்லை.  வரலாறு உங்கள் முடிவு தவறானது என்று நிரூபிக்கும் என்று அமீத் ஷாவைப் பார்த்து சிவாஜி பாணியில் சொன்ன போது நான் உண்மையிலேயே பயந்து விட்டேன், எங்கே அமீத் ஷா தன் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விடுவாரோ என்று.  ஆனால் சிதம்பரத்தின் பேச்சைக் கேட்டு அமீத் ஷாவின் முகத்தில் கொஞ்சம் பயம் தெரிந்தது உண்மை. 

இல்லை மிஸ்டர் சிதம்பரம்.  வரலாறு நிரூபித்தது என்னவென்றால்,  காங்கிரஸின் காஷ்மீர் கொள்கை எத்தனை தவறானது என்பதைத்தான்.  அதை நீங்கள் ஒரே ஒரு சுற்றுப் பயணத்தின் மூலம் – ஒவ்வொரு காஷ்மீரியும் எப்படி வாழ்கிறான் என்பதை கவனிப்பதன் மூலம் – தெரிந்து கொள்ளலாம்.  அந்த நிலத்திலேயே நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த பண்டிட்டுகளை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அங்கிருந்து விரட்டினார்களே மிஸ்டர் சிதம்பரம், அப்போது உங்கள் வரலாறு எங்கே ஒளிந்து கொண்டிருந்தது? 

இந்திய நாட்டின் குடிமகன் யாரும் காஷ்மீரில் குடியேற முடியாது; சொத்து வாங்க முடியாது.  ஆனால் பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட ரோஹின்யா அங்கே போய் குடியேறலாம்.  சொத்து வாங்கலாம்.  காரணம், அவன் முஸ்லீம்.  இந்தியா எப்போது மத அடிப்படையிலான நாடாக மாறியது மிஸ்டர் சிதம்பரம்? 

காஷ்மீர்ப் பெண்களை ஒரு இந்தியன் மணம் செய்து கொண்டால் அவனுக்கு அங்கே வாக்குரிமை கிடையாது.  ஆனால் ஒரு பாகிஸ்தானி முஸ்லீம் அவளை மணந்து கொண்டால் அவனுக்கு வாக்குரிமை உண்டு.  இதையெல்லாம் உங்கள் வரலாறு – நீங்கள் குறிப்பிடும் quote unquote வரலாறு – கண்ணை மூடிக் கொண்டுதானே பார்த்துக் கொண்டு இருந்தது?   

காங்கிரஸின் காஷ்மீர் கொள்கை இதுவரை காஷ்மீரை சுடுகாட்டைப் போல் ஆக்கி விட்டது.  அமீத் ஷாவுக்குக் கொஞ்சம் வழி விடுங்கள்.  ஒரு ஜனநாயக நாட்டில் எல்லா மாநிலமும் ஒன்றுதான்.  எல்லா மதத்தினரும் ஒன்றுதான்.  யாருக்கும் எந்த விசேஷ சலுகையும் கொடுக்கப்படலாகாது.  இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளை இதில் சேர்க்கக் கூடாது.  அது சமூக நீதியின் பாற்பட்டது.  அதிலும் கூட சில rational சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.  பிஎம்டபிள்யூ காரில் வந்து இறங்கி எனக்கு இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கும் அபத்தங்களும் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன. 

வைகோவின் பாராளுமன்றப் பேச்சு ஒரு ஜோக்.  மோடியை அல் குவைதா பெயரைச் சொல்லி, ட்ரம்பின் பெயரைச் சொல்லி, சீனாவின், பாகிஸ்தானின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்.  அவர்களெல்லாம் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்களாம்.  அப்படியானால் இந்தியாவின் ஒரு உள்நாட்டு விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டுமானால் மோடி ட்ரம்ப் சாருக்கு ஒரு போன் போட்டு அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க வேண்டும்?  அல் குவைதாகாரருக்கு ரகசியத் தூது அனுப்பி அவர்கள் கருத்தையும் கேட்க வேண்டும்?  அப்படியே சீனாவுக்கும் பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹீமுக்கும் போன் போட்டு அபிப்பிராயம் கேட்டு அதன் பிறகே முடிவு எடுக்க வேண்டும்?  இல்லையா தோழர் வைகோ அவர்களே?

***