சி.சு. செல்லப்பா

முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் மொத்தமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் தொகுப்பாக வந்துள்ளது. இதை ஒவ்வொரு தமிழரும் வாங்க வேண்டியது இந்தத் தொன்மையான மொழியைப் பேச வாய்த்திருக்கும் நம் அனைவருடைய கடமை. சி.சு. செல்லப்பா உயிரோடு இருந்தவரை அவரை சரியாகப் படிக்காமல், அவரோடு வெட்டிச் சண்டை போட்டிருக்கிறேன். அவர் இறந்த பிறகுதான் அவரைப் படித்து அவன் என் அப்பன் என்பதைப் புரிந்து கொண்டேன். பழகுவதற்கு இனிமையற்ற ஆள். க.நா.சு.தான் பழக இனிமையான ஆள். ஆனால் சி.சு. செல்லப்பாதான் நவீன இலக்கியத்தின் பிதாமகர். அவருடைய எழுத்து பத்திரிகை இல்லாவிட்டால் (தம்பிங்களா, பத்திரிக்கை என்று எழுதாதீர்கள்) இன்று நவீன இலக்கியமே இல்லை. பாரதி ஆரம்பித்ததை நீர் ஊற்றி ஏர் போட்டுப் பயிர் பண்ணினவர் செல்லப்பா. ஏதோ ப்ரமோஷனுக்காக இதை நான் எழுதவில்லை. நீங்கள் படிக்கிறீர்களோ இல்லையோ செல்லப்பாவின் சிறுகதைத் தொகுதி உங்கள் இல்லத்தில் இருந்தால் அங்கே தமிழ் வீற்றிருக்கிறது என்று பொருள். ஏன் படிக்கிறீர்களோ இல்லையோ என்று சொன்னேன் என்றால், உங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு சமயத்திலாவது அவருடைய ஒரு கதை உங்கள் உள்ளே செல்லும்.

செல்லப்பாவின் சரசாவின் பொம்மை என்ற கதை உலகின் அதியற்புதமான கதை. மௌனி கதைகள் மொத்தத்தையும் அந்த ஒரு கதை வீழ்த்தி விடும். முதலில் ஏதோ அது ஒரு குழந்தைக் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அல்ல. அது ஒரு Freudian கதை. படித்துப் பாருங்கள். மேலும், தமிழின் முதல் தலித் கதையை எழுதியவர் பாரதி. அதற்கு அடுத்த தலித் கதையை எழுதியவர் செல்லப்பா. அதுவும் இந்தத் தொகுப்பில் உள்ளது.

புத்தகம் வாங்குவதற்கு இணைப்பு:

https://tinyurl.com/si-su-chellapa