ஒரு பேய்க் கதை

முகநூலில் செல்வகுமார் எழுதியிருந்த பேய்க் கதை இது.  கதையில் வரும் நண்பனின் பெயர் அராத்து என யூகிக்க முடிகிறது.  கதை சொல்பவரின் பெயரைத்தான் யூகிக்க முடியவில்லை.  ஏனென்றால், பலருடைய வீடுகளில் இப்படி நடந்திருப்பதாகக் கேள்விப் படுகிறேன்.  சரி, உயிர்மையில் சென்ற மாதம் வந்த என்னுடைய பேய்க் கதையைப் படித்தீர்களா?

பேய்க் கதை / செல்வகுமார்

ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் இதையெல்லாம் சொல்லாதீர்கள் என்பாள். இவனும் தலையாட்டிவிட்டு ஆனால் தன் நண்பனிடம் சொல்லிவிடுவான். தான் சொல்லியும் கணவன் நண்பனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறானே என்று கோபம் அவளுக்கு.

அன்று கணவனுக்கு தோசை வார்த்துப் போட்டுக்கொண்டே அவளின் தம்பியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். பின்னர் வழக்கம் போல, “இதையாவது உங்கள் நண்பரிடம் போய் சொல்லாதீர்கள்” என்று சொன்னாள்.

அந்த நேரம் சரியாக நண்பன் போனில் அழைத்தான். இவனும் பேச்சு வாக்கில் தன் மச்சினன் விஷயத்தை சொல்லிவிட்டான். மனைவி வெறியாகி, தோசைக்கரண்டியுடன் கணவன் மீது பாய, கணவன் நகர்ந்து தப்பித்துக் கொண்டான். அப்போது அவன் பேசிகொண்டிருந்த போன் கீழே விழுந்துவிட்டது. மனைவி கடுப்பில் போனை தோசைக்கரண்டியால் நாலு சாத்து சாத்தி உடைத்துவிட்டாள்.

மறுநாள் அவளுடைய கணவன் தன் நண்பனை சந்திக்கப் போனான். அவன் முகத்தில் பலத்த அடிபட்டு, கட்டும் போட்டிருந்தான். என்னடா ஆச்சு என்று விசாரித்தால், “என் வீட்டில் தோசைக்கரண்டி கீழே கிடந்திருக்கிறது. நேற்று உன்னிடம் போனில் பேசிக்கொண்டே கவனிக்காமல் அதில் காலை வைத்தேனா, வழுக்கிவிழுந்து அடிபட்டுக் கொண்டேன்” என்றான்.

அன்றிலிருந்து கணவன் பேய்களை நம்பத் தொடங்கிவிட்டான்.

 

Comments are closed.