சில மாதங்களாக தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் 588-ஆவது சூத்திரத்தில் ஒரு சந்தேகம். மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. மனிதர்களைப் போல் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு யார் இருக்க முடியும் என்பதே சந்தேகம். ஒரு பேராசிரியரிடம் கேட்டேன். தெரியவில்லை. அவர் என் எதிர் முகாமில் இருக்கும் பெண் கவிஞர். எனவே தெரிந்தும் தெரியவில்லை என்று சொல்லியிருக்கலாமோ என இன்னொரு சந்தேகம். அதற்கப்புறம் எக்ஸைலில் விழுந்தேன். இரண்டு தினங்கள் முன்பு எக்ஸைலில் அந்த இடம் வந்ததும் சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்ளாமல் மேலே போக முடியவில்லை. நச்சினார்க்கினியர் உரையை வாங்கிப் படித்தேன். முழு பொருளதிகாரத்தையும். எனக்கு ஒரு இடத்தை மட்டும் படிப்பது பிடிக்காது. இடையில் அவர் கலித்தொகையை பல இடங்களில் மேற்கோள் காட்டியிருந்ததால் கலித்தொகையையும் படித்தேன். இரண்டு நாட்கள் ஓடி விட்டது. சந்தேகமும் ஓடி விட்டது. மக்களின் கிளைப் பிறப்பு தேவரும் தானவரும். வாலி, சுக்ரீவன், அநுமன் முதலிய வானரங்களும் ஆறறிவு உடையன என்பதால் கிளைப் பிறப்புக்கு ஒரு குறையும் இல்லை. சந்தேகம் தீர்ந்தது. மாலை நேரம் இசையில் போய்க் கொண்டிருக்கிறது. Illusion போகலாம் என்று அராத்துவை அழைத்தேன். வெளியூர். டிமிட்ரியை அழைத்தேன். சொந்த ஊருக்குப் பயணம். கருப்பு ரிஷிகேஷில். கணேஷுக்கு உடல்நலம் இல்லை. (இது சரியில்லை; சரியில்லை. இங்கே எல்லாவற்றுக்கும் அனுமதி உண்டு. மெடிகல் லீவ் மட்டும் கிடையாது). ஷிவா என்ற நண்பர் தான் எனக்கு Illusion-ஐக் காண்பித்தவர். அவரும் வெளியூர். எனவே Mylene Farmer -இல் மூழ்கி விட்டேன். அவர் ஃப்ரெஞ்ச் பாடகி என்றாலும் இசைக்கு மொழி தேவையில்லை என்பது என் கட்சி. (முதல் பாடல் quand என்றால் எப்போது என்று பொருள். பாடல் வரிகளும் அதிலேயே உள்ளன.) இவரது குரல் லாரா ஃபாபியானுக்கு (Lara Fabian) இணையாக உள்ளது. லாரா ஃபாபியானை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=4RxDpb_mhgs
https://www.youtube.com/watch?v=eReNkmCexqk
Comments are closed.