குற்றமும் தண்டனையும்

பெற்று வளர்த்த தாயின் தலையில் அம்மிக் குழவியைப் போட்டுக் கொல்லும் புதல்வர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம்.  சமீபத்தில் ஒரு பெண் தன் காதலனோடு சேர்ந்து கொண்டு தனக்குக் கணவனாக வரப் போகும் இளைஞனைக் கொன்றாள்.  மூன்று வயதுக் குழந்தையை வன்கலவி செய்து கொல்கிறார்கள்.  சமீபத்தில் கூட இரண்டு சிறுவர்களின் குதத்தில் வன்கலவி செய்து அந்தச் சிறுவர்களை ஆற்றில் அமுக்கிக் கொன்றார்கள் சிலர்.  இவர்களையெல்லாம் சவூதி அரேபியாவில் செய்வது போல் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று பலரும் சொல்வதை என் காதால் கேட்கிறேன்.  எனக்குமே அப்படித்தான் தோன்றுகிறது.  ஆனால்… இது போன்ற குற்றவாளிகள் தனியாக யாரும் இல்லை.  இவர்கள் எல்லோரும் நம் பக்கத்திலேயே இருக்கிறார்கள்.  நம் அலுவலகத்தில், ஏன், நம் குடும்பத்திலேயே இருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட இருவர் எனக்கு அடிக்கடி – ஏன், தினமுமே – பின்வரும் கடிதங்கங்களைப் போல் தொடர்ந்து மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  என்னை செருப்பால் அடிப்பதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  இதைப் பொருட்படுத்தாதீர்கள் என்கிறார்கள் என் நண்பர்கள்.  என் முகத்துக்கு நேராக உனக்கு மூளை இருக்கிறதா என்று கேட்டவனை என்னால் மன்னிக்க முடிந்தது.  ஆனால் இப்படி தினமும் என் எழுத்தைப் பற்றிக் கேவலப்படுத்தி எழுதும் இவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை.  என் எழுத்து எனக்கு என் உயிரை விடப் பெரிது.  கடந்த நான்கு நாட்களாக நான் உறங்கக் கூட இல்லை.  தினமும் 20 மணி நேரம் Glauber Rocha பற்றிய ஒரு சிறிய கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன்.  அவந்திகாவே கூட, “ஏன் பதற்றமாக இருக்கிறாய்?” என்று கேட்டாள்.  ஏனென்றால் நான் பதற்றமாக இருந்து அவள் பார்த்ததே இல்லை.  20 மணி நேரம் வேலை செய்ததால் ஏற்பட்ட களைப்பு.  காலக் கெடுவுக்குள் கட்டுரையை எழுதி முடிக்க முடியுமா என்ற பதற்றம்.  உங்களுக்கு இந்த வாக்கியம் புரிய வேண்டுமானால் க்ளாபர் ரோச்சா எடுத்த The Age of the Earth என்ற படத்தை ஒரே ஒரு முறை பாருங்கள்.  சவாலாகவே சொல்கிறேன்.  ஒரே ஒரு முறை கூட உங்களால் பார்க்க முடியுமா என்று பாருங்கள்.  ”ரோச்சாவின் படங்கள் hallucinatory-ஆக உள்ளன” என்று எழுதுவதற்காக அறுபது மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது.  ஒரு முறை பார்த்தாலே மயக்கம் வந்து விடும்.  நான் அந்தப் படத்தை மூன்று முறை பார்த்தேன்.  1200 வார்த்தைகள் கொண்ட சிறிய கட்டுரை.  அதை எழுதுவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது.  அந்த நேரத்தில் – நேற்று காலையில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தால் கீழே காணும் இரண்டு கடிதங்கள்.  இவர்கள் தினந்தோறும் இவ்வாறு எனக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  என் எழுத்து பிடிக்காவிட்டால் படிக்காதே என்று நூறு முறை சொல்லி விட்டேன்.  இருந்தும் திரும்பத் திரும்பப் படித்து முற்றிய மனநோயாளி ஆகிறார்கள்.  எனக்குப் போலீஸில் புகார் செய்து அங்கே அலைந்து கொண்டிருக்க நேரம் இல்லை.  ஆனால் ஒரு விஷயம்.  இவர்கள் இருவருக்கும் விரைவில் மிகப் பெரிய கேடு ஒன்று வரப் போகிறது.  இது சாபம் அல்ல.  நிச்சயமாக அல்ல.  ஒரு ஊரில் மேற்குத் திசையில் புதைமணல் குழிகள் உள்ளன.  சிக்கினால் யாராலும் காப்பாற்ற முடியாது.  மரணம்தான்.  அந்தப் பக்கமாக ஒருத்தன் போகும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?  அந்தப் பக்கம் போகாதே, புதைமணல் இருக்கிறது என்பீர்கள்.  அவன் உங்கள் பேச்சைக் கேட்காமல் போகிறான் என்றால், டேய் செத்துத் தொலைவாய் என்பீர்கள் அல்லவா?  அது சாபமா?  அல்ல.  Prediction.  பின்னால் நடக்கப் போவதைச் சொல்கிறீர்கள்.

பின்வரும் அன்பர்கள் இருவருக்கும் கேடு வரப் போகிறது என்று ஏன் சொல்கிறேன் என்றால் அது வெறும் இயற்கை நியதிதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. உதாரணமாக, ஒருத்தன் இன்னொருத்தன் தலையில் ஒரு சிறிய கல்லால் அடிக்கிறான்.  வேகமாக வந்து விழுந்தால் சிறிய கல் கூட மண்டையை உடைத்து விடும்.  வெறும் பட்சி ஒரு விமானத்தையே சாய்த்து விடுவதில்லையா?  சரி, அடுத்து என்ன நடக்கும்?  அந்தச் சிறிய கல் பதின்மடங்காகப் பெருகி அடித்தவனின் தலையில் விழும்.  இதுதான் இயற்கை நியதி.  இதற்கு தேசத் தலைவர்களே விதி விலக்கு அல்ல.  வரலாற்றைப் பார்த்தால் தெரியும்.  கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்.  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

இயற்கையிடம் ஒரு நியதி உள்ளது.  அதனால்தான் சூரியனும் பூமியும் இடித்துக் கொள்ளாமல் இருக்கின்றன.  கணக்கிலடங்காத விண்மீன்கள் எந்தப் பிரபஞ்ச விபத்தும் இல்லாமல் வெளியில் இருந்து வருகின்றன.  இந்த நியதிதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற காரியத்தையும் நடத்தி வைக்கிறதுஎன் வாழ்வை, என் உயிரை, என் குருதியைத் தந்து இந்த சமூகத்துக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இலவசமாக.  எந்தப் பிரதிபலனும் இல்லாமல்.  என் உணவை என் நண்பர்கள் தருகிறார்கள்.  இந்த நிலையில் என்னை அவமானப்படுத்தினால் உனக்குக் கேடு வந்து சேரும் என்பது இயற்கை நியதி.  இவர்கள் இருவரும் பொதுவெளியில் நாகரீகமான மனிதர்களாகவே இருப்பார்கள்.  யாரையும் பார்த்து டேய் முட்டாப்புண்டே என்று திட்டமாட்டார்கள்.  ஆனால் இணையவெளி கொடுக்கும் சுதந்திரம் இவர்களை கிரிமினல்களாக ஆக்கியிருக்கிறது.  விரைவில் இயற்கை இவர்களைத் தண்டிக்கும்.  கடிதங்கள் கீழே:

ஹாய் சாரு,

இப்போது நீங்கள் ஜிகர்தண்டா படம் (அது டர்டி கார்நிவலின் உல்டா என்ற போதிலும்)ஏகத்துக்கு தூக்கி சுமப்பது வேறொரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.அது நீங்கள் மிஸ்கினின் நந்தலாலா படம்(அது கிகுஜிரோவின் உல்டா என்ற போதிலும்) தூக்கி சுமந்தது நினைவுக்கு வருகிறது.நந்தலாலாவையும் மிஷ்கினையும் நீங்கள் தூக்கி சுமந்ததற்கு காரணம் எங்களுக்கு பிறகே புரிந்தது.அது பின்னர் வந்த மற்றொரு மிஷ்கின் படமான யுத்தம் செய் படத்தில் ஒரு மைக்ரோ வினாடி விரல் வித்தையில் Klaus Kinski யையே விஞ்சும் நடிப்பை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பை மிஷ்கின் வழங்கியதாலேயே என்ற காரணம்தான்.பிறகு தேகம் சரோஜா தேவி புத்தகம் என்று உண்மையை உடைத்து பேசிய ஒரே காரணத்திற்காக அவருக்கு முப்பத்தாறு வசை கடிதங்கள் எழுதினீர்கள்(நான் எங்கே எழுதினேன்?ஆதாரம் இருக்கா?என்று நீங்கள் கேட்கலாம்.இப்படி கேட்பதற்காகவே இரண்டு வருடத்துக்கு ஒருமுறை உங்கள் தளம் clean slate ஆக்கப்பட்டு விடும்).இப்போது அடுத்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் உங்களுக்கு ஏதேனும் விரல் வித்தை வாய்ப்பு வழங்க உறுதி அளித்துள்ளாரா?

 

நன்றி.

N. Vivek

nvivek51@gmail.com

டியர் சாரு,

அந்தி மழை இதழில் எழுதுகிறீர்கள். வாழ்த்துககள். சரி எப்போது அந்தி மழையில் இருந்து பணம் வரவில்லை என்று புலம்ப போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..( எப்பிடீ ?) 🙂 🙂

பிரதீபன் சென்னை

gbarthipan@gmail.com

 

 

 

Comments are closed.