சாருவிடம் அப்போதிருந்தே வெளிப்படும் கோபம் அவரின் பெரும்பாலான படைப்புகளுக்கு எதிர்வினை வைக்கப் படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை என்பதுதான். இப்போது ராஸலீலா.
எங்கள் நண்பர் குழுவுக்குள் எப்போதும் பேசிக்கொள்வது, சாருவின் உன்னதப் படைப்பு ராஸலீலா என்று. மணிக்கணக்கில் நாங்கள் ராஸலீலாவைப்பற்றிப் பேசியிருக்கிறோம்.
இது வாசகனுக்கு மட்டுமேயான சுதந்திரம், விமர்சிக்கவோ / சிலாகிக்கவோ ஆன தனி/முழு சுதந்திரம்.
நிற்க..
ஓராண்டு காலமாய் எனக்கிருக்கும் மனச்சிக்கல், என் வேலை / வாழ்வு சார்ந்த செயல்பாடுகளை உள்ளுணர்வு அடிப்படையிலேயே தீர்மானிக்கிறேன்.இந்தகைய மனநிலை தொடர்புடைய முடிவுகளால் வேலை சார்ந்த அனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வருகிறேன் என்றாலும், வேலை தவிர்த்த வாழ்வியல் சூழல்களில் கடும் தோல்வி அடைகிறேன். அப்படியே தொடர்ந்து, பெரும் மனஉளைச்சல் தாண்டி மனச்சிதைவு நிலையில், உள்ளுணர்வு பற்றிப் பேசும் தத்துவ நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். இன்னும் ஒரு படி மேலே கொண்டு போனதுதான் மிச்சம். எப்படி என்றால், மறுநாள் வேலையில் என்னால் சிறிதும் ஒட்ட முடியாது. அந்தத் தத்துவம் சார்ந்த படைப்புடன் எனக்குள்ளே விவாதம் புரிய வைக்கின்ற எதார்த்தத்திலிருந்து விலகிய மனநிலையிலேயே மனம் அலைகிறது. இதைத்தான் இன்று நிர்மலும் எழுதியிருந்தார். இந்த மனநிலையோடுதான் நீண்ட நாளாய் நானும் உழன்றிருந்திருக்கிறேன்.
இத்தகைய வேளைகளில் என்னை அத்தகைய மன உளைச்சல்களிலிருந்தும், மனச் சிதைவுகளிலிருந்தும் தனியே மீட்டுக் கொண்டு வர சாருவால் மட்டுமே முடியும். இதிலிருந்து விடுபடுதல் என்பது சாருவை வாசிப்பதுதான், பிரதானங்களில் ஒன்று ராஸலீலா.
நான் சாருவை நேரில் மூன்று முறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். அந்த வேளைகளிலும் சாருவுடைய படைப்பூக்கம் சார்ந்து விவாதித்ததே இல்லை. ஏனென்றால் ‘நான் விரும்பும்போதெல்லாம் சாருவுடன் பேசுகிறேன், அவரின் படைப்பின் வழியே.
என்னைப் பொருத்த வரையில் சாரு, ஆசானாய் எனக்குக் கற்றுத் தந்தது இதைத்தான். ஏகலைவனாய் கற்றதும் இதுதான்.
ஆதலால் சாரு, ராஸலீலாவைப் பற்றி யாரும் இங்கு உரையாடவில்லையே தவிர, அந்த உன்னதப் படைப்போடு நானும் பெயர் தெரியாத பலரும் உரையாடிக் கொண்ட படியேதான் இருக்கிறோம்.
இலக்கியத்தை அதன் அரசியல், அழகியல் மற்றும் இன்ன பிறவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட நண்பர்களாய்ச் சேர்ந்து எப்போதும் உங்கள் படைப்புகளைப் பற்றி உரையாடிக் கொண்டேதான் இருப்போம். குறிப்பாய் நாங்கள் என்பது பன்மை அல்லது Infinity
நான் இனி உங்களைச் சந்தித்தாலும் ராஸலீலாவைப் பற்றி ஒரு வரிகூடப் பேச முடியும் என்று உறுதியில்லை. ஏனெனில், உங்களிடமிருந்து நேரிலும் பெற அத்தனை இருக்கிறது.
Comments are closed.