கொச்சபாம்பா, உயூனி

சீலே பயணம் என்ற சென்ற கட்டுரையில் ஒரு சிறிய திருத்தம் சொன்னார் நண்பர்: நண்பரையும் அவர் தோழியையும் தோழியின் சகோதரரையும் திருடர்கள் மறித்த இடம் மருதமலை சாலை இல்லை.  வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலை.  சம்பவம் நடந்த இடத்துக்கு எதிரே சின்மயா பள்ளி இருக்கிறது. 

இன்னொரு பிழையை ராஜேஷ் சுட்டிக் காண்பித்தார்.  தென்னாஃப்ரிக்கா என்பதற்கு பதிலாக தென்னமெரிக்கா என்று எழுதி விட்டேன்.  பிழையின் காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.   தென்னாஃப்ரிக்காவில் சம்பவம் நடந்த ஊர் ஜோஹன்னஸ்பர்க். 

***

சாருஆன்லைனுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்லி எழுதியிருந்த திட்டம் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.  சிலருக்கு பணம் அனுப்ப மனம் இருக்கிறது.  ஆனால் அனுப்புவதற்குத்தான் அலுப்பாக இருக்கிறது.  அலுப்பு மட்டுமே காரணம்.  சிலருக்கு போனில் அதற்கான வசதி இல்லை.  அந்த வசதியை இரண்டு நிமிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளலாம்.  அடப் போய்யா.  வேறு வேலை இல்லை. ஆனாலும் சுமார் பத்து பெண்மணிகள் 200, 250, 500 என்று கட்டணம் அனுப்புகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஹவுஸ்வைஃபாக இருப்பவர்கள் என்பதுதான் நெகிழ வைக்கிறது.  ஆனால் ஆச்சரியம் கொள்ளத்தக்க வகையில் அமெரிக்காவிலிருந்து கட்டணம் அனுப்புபவர்கள் இரண்டே நண்பர்கள்தான்.  நான் Paypal-இல் உறுப்பினர் என்பதால் அமெரிக்காவிலிருந்து அனுப்புவது மிகவும் எளிதுதான் என்றே நினைக்கிறேன்.  ஆனாலும் பணத்துக்கு மிகுந்த நெருக்கடி உள்ள தமிழ்நாட்டிலிருந்துதான் கட்டணம் செலுத்துகிறார்கள்.  ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து பேபால் மூலம் 2000 ரூ. அனுப்பியிருந்தார்.  அது மெயிலில் தெரியவரும்.  பேபால் பாஸ்வேர்டை நான் போட்டால் பணம் என் கணக்கில் வரும்.  பாஸ்வேர்ட் வேலை செய்யவில்லை.  வேறு பாஸ்வேர்ட் மாற்றலாம் என்றால் பேபால் வேலை செய்யவில்லை.  இதிலேயே நாலைந்து நாள் போனது.  ஐந்தாவது நாள் ஸ்ரீராம் வந்தார்.  அவர் வந்து கை வைத்ததும் பாஸ்வேர்ட் வேலை செய்தது.  ஆனால் பணம் அனுப்பிய நண்பர் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.  ஸ்ரீராமுக்கு வெட்டி அலைச்சல். 

கட்டணம் செலுத்துபவர்கள் 25 பேர் என்றால் அதில் 15 பேர் சென்னை.  ஐந்து பேர் தமிழ்நாட்டில் வெளியூர்.  இரண்டு பேர் யு.எஸ்.  மூன்று பேர் துபாய், ஷார்ஜா நண்பர்கள்.  இந்த 25 பேரில் வாசகர் வட்ட நண்பர்கள் எத்தனை பேர் தெரியுமா?  நான்கு பேர்!  இரண்டு பேர் சென்னை.  மற்ற இருவரின் ஊர் பெயரைச் சொன்னால் ஆள் தெரிந்து விடும்.  வேண்டாம்.  இரண்டுமே அந்த மாதிரி ஊர்கள்.  இரண்டு பேருமே அம்மாதிரி பிரபலம். 

ராஸ லீலா புத்தகத்தின் பின்னட்டையில் உங்கள் புகைப்படம் வருவது பற்றி எழுதியிருந்தேன்.  10000 ரூ விலை.  ஐந்து பேர்தான் அதற்கு முன்வந்திருக்கிறார்கள்.  சுமாராக 20 பேர் இருந்தால்தான் நல்லது.  இந்தப் பணத்தையெல்லாம் சீலே பயணத்துக்குத்தான் பயன்படுத்துவேன்.  தென்னமெரிக்காவுக்கும் எனக்கும் 1978-இலிருந்து ஒரு தீராத பந்தம் இருந்து வருகிறது.  இன்றைய தினம் சே குவேராவின் படம் டீ ஷர்ட்டில் இருக்கிறது.  ஆனால் 1978-இல் சே குவேராவின் பெயர் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.  நான் அப்போது தில்லியில் இருந்தேன்.   அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நக்ஸல் ஆதரவாளர்கள் அதிகம்.  அதிலும் எழுத்தாளன் என்றாலே நக்ஸலைட் என்றுதான் பார்ப்பார்கள் உளவுத்துறையினர்.  வீட்டுக்கெல்லாம் உளவுத்துறை போலீஸ் வரும்.  இப்போது விடுதலைச் சிறுத்தை தலைவராக இருக்கும் ரவிக்குமாரை உளவுத்துறையினர் அப்போது சுற்றிச் சுற்றி வந்து மிரட்டிக் கொண்டிருப்பார்கள்.   எண்பதுகள்.  அப்போது அவர் வங்கிப் பணியில் இருந்தார். 

அதற்கு முன்னதாக 1978-இல் நான் தில்லியில் இருந்த போது பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய என் நண்பர் ஒருவர் மூலம் சே குவேரா எழுதிய பொலிவியன் டைரி, கெரில்லா வார்ஃபேர் என்ற இரண்டு புத்தகங்களையும் பாதுகாப்புத் துறையின் நூலகத்திலிருந்து எடுத்துப் படித்து, பெங்களூரிலிருந்து வந்து கொண்டிருந்த படிகள் என்ற பத்திரிகையில் சே குவேரா பற்றி சேதுராமலிங்கம் என்ற பெயரில் 25 பக்க கட்டுரை ஒன்றை எழுதினேன்.  எண்பதுகளின் முற்பகுதி அது.  அந்தக் கட்டுரை எழுதுவதற்காக மூன்று ஆண்டுகள் தென்னமெரிக்க வரலாற்றைப் படித்தேன். 

சேவின் குழு கெரில்லாவாக இயங்கிய கொச்சபாம்பா (Cochabamba) என்ற பகுதியின் பெயர் – உங்களுக்குத் திருநெல்வேலி, மதுரை என்ற பெயர்களெல்லாம் எப்படியோ அப்படி எனக்கு.  அதையெல்லாம் இப்போது இந்தப் பயணத்தில் என்னால் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.  கொச்சபாம்பா இப்போது உலகின் மிக முக்கியமான டூரிஸ்ட் அட்ராக்‌ஷனாக உள்ளது.  சே குவேராவின் கெரில்லா பாதை என்று அதற்குப் பெயர் வைத்து கூட்டம் கூட்டமாகப் போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்.  ஆனால் ”பொலிவியாவில் உங்களுக்கு என்ன பார்க்க வேண்டும்?” என்று SOTC ட்ராவல்ஸில் என்னைக் கேட்டபோது வெறுமனே உயூனி என்று மட்டுமே சொன்னேன்.  Uyuni salt lake ஒரு உலக அதிசயம்.  நாலாயிரம் சதுரமைல் அளவில் பரந்து விரிந்து கிடக்கும் உறைந்த ஏரி. கொச்சபாம்பாவை ஏன் அவர்களிடம் சொல்லவில்லை என்றால், அதற்கு ஒரு தனிப்பயணம்தான் செல்ல வேண்டும்.  இந்த முறை என் கவனம் சீலேதான்.   

***

ஜூன் 16 அன்று கோவையில் கண்ணதாசன் கழகத்தின் பரிசளிப்பு விழா.  அதன் பொருட்டு ஜூன் 15, 16, 17 தேதிகளில் கோவையில் தங்கியிருப்பேன்.  கோவை என் சொந்த ஊர் மாதிரி.  கோவையில்தான் எனக்கு வாசகர்கள் அதிகம்.  பல நண்பர்கள் நேரில் வந்து சந்திக்க விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கின்றனர்.  எல்லா நண்பர்களையும் எனக்கு சந்திக்க விருப்பம் உண்டு.  ஒரே ஒரு நிபந்தனைதான்.  சந்திக்க விரும்பும் நண்பர்கள் சாருஆன்லைனுக்குக் கட்டணம் கட்டியிருக்க வேண்டும்.  கோவையிலிருந்து இரண்டு நண்பர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.  இப்போதைக்கு அவர்கள் இருவரை மட்டுமே என்னால் சந்திக்க இயலும்.  மாதம் ஒரு ஐநூறு ரூபாய் கூட அனுப்ப முடியாது; ஆனால் கட்டுரைகளையும் படித்துக் கொண்டு நேரிலும் சந்திப்பேன் என்றால் அது நியாயம் இல்லை. 

நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  கட்டணம் கட்டாமலேயே படிக்கலாம்.   ஒரு எழுத்தாளருக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தரக் கூடியது அவருடைய எழுத்து வாசிக்கப்படுவதுதான்.  அதுதான் முக்கியம்.  அதுதான் ஒரு எழுத்தாளரின் உயிர்நாடி.  அந்த வகையில் என் எழுத்து உடனுக்குடன் வாசிக்கப் படுகிறது என்பதே நான் பேருவகை கொள்ளும் விஷயம்.  என் நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும்போதெல்லாம் நான் கேட்கும் ஒரே கேள்வி, நேற்று எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா என்பதுதான்.  அந்தக் கேள்விக்கு ராம்ஜியையும் ஸ்ரீராமையும் தவிர மற்ற எல்லோருமே இன்னும் படிக்கவில்லை என்றோ, அப்டியா, நேத்து போட்டிங்களா என்றோதான் பதில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  நான் சொல்ல வந்தது என்னவென்றால், கட்டணம் அனுப்புவது ஒன்றும் முக்கியம் அல்ல.  அனுப்பினால் என் பயணங்களுக்கு நல்லது.  ஆனால் நேரிலும் என்னைச் சந்திக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நான் இந்த நிபந்தனையை விதிப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.  என்னை நேரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் நிச்சயம் சாருஆன்லைனுக்குக் கட்டணம் கட்டியிருக்க வேண்டும்.  கட்டாதவர்களை நான் சந்திக்க இயலாது.   2500 ரூ. கொடுத்து ஒருநாள் கிரிக்கெட் டிக்கட் வாங்கும் நண்பர்களால் ஒரு எழுத்தாளனின் எழுத்தைப் படிக்க ஒரு குறைந்த பட்ச கட்டணம் அனுப்ப முடியாது; அவரை நேரிலும் சந்தித்து அளவளாவ வேண்டும் என்றால் அதில் கொஞ்சமும் நியாயம் இல்லை.    

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai