புறாவின் எச்சத்தில் ஆலம் விதை…

இன்று பூர்ணசந்திரன் பேசினார்.  ஒரு மாதமாக தொடர்பு இல்லை என்றதும் குழப்பமாக இருந்தது.  ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்த நாளே என் மீது கொலை வெறியோடு திரிவதால் வந்தக் குழப்பம்.  சொன்னேன்.  சிரித்தார் பூர்ணா.  எவ்வளவு துரோகங்கள் நடந்தாலும் உள்வட்டம் உள்வட்டம்தான்.  உள் வட்டத்தில் இதுவரை குழப்பம் நடக்கவில்லை.  இனிமேலும் நடக்காது.  என் பொருட்டு எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை சகித்தவர் பூர்ணா.  தொடர்பு இல்லை என்றதும் தவறாக நினைத்தது என் தவறுதான்.  இனி இப்படி நடக்காது.  என்னால் என் நண்பர்களுக்கு என்ன பிரயோஜனம் என்ன பலன் என்று நான் அடிக்கடி யோசித்துப் பார்ப்பதுண்டு.   25 ஆண்டுகளுக்குப் பிறகு – அதாவது, என் மரணத்துக்குப் பிறகு – அது என்ன என்று உங்களுக்குத் தெரிய வரலாம்.  இது ஒரு சூட்சுமமான விஷயம்.  கிங் லியர் படித்த பிறகுதான் எனக்குப் பொருள், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆசை விட்டுப் போயிற்று.  புத்தனைப் படித்து அல்ல.  ஞானம் என்பதை நான் இலக்கியத்திலிருந்து மட்டுமே பெற்றுக் கொள்கிறேன்.  2500 ஆண்டுகளுக்கு முந்திய ஸோஃபாக்ளிஸிலிருந்து ஷேக்ஸ்பியர், தாஸ்தாவஸ்கி, கஸான்ஸாகிஸ், மரியோ பர்கஸ் யோசா வரை எல்லா கலைஞர்களையும் படித்து சாரமாக்கி அதை உங்களுக்கு வழங்குகிறேன்.  தண்ணீருக்குள் இருக்கும் மின்சாரத்தைப் பிரித்துக் கொடுப்பது போல், எங்கெங்கோ இருக்கும் ஞானத்தையெல்லாம் உங்களுக்குக் கொண்டு வந்து தருகிறேன்.  இதை எடுத்து வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். 

புறாவின் எச்சத்தில் ஆலம் விதை.

இதோ ஒரு ஆலம் விதை:

http://anbueveryone.blogspot.in/2013/11/7.html

 

Comments are closed.