பூச்சி – 24

“எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களது பார்வையில் எனது சந்தேகம் அபத்தமாகக்கூடத் தோன்றலாம். புரிதலுக்காக மட்டுமே கேட்கிறேன். மனிதன் இயற்கையை அழிக்கிறான் என்னும் உங்களது கருத்துடன் நூற்றுக்கு நூறு உடன்படுகிறேன். அந்த வருத்தமும் ஆற்றாமையும் எனக்கும் உண்டு. அதே சமயம் மாட்டு இறைச்சி உண்பவர்களையும், பூனை, நாய் உள்ளிட்டவற்றை உண்பவர்களையும் கொடூரமானவர்கள் போல சித்தரிப்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இறால், புறா, காடை, இன்னபிற என அனைத்தையுமே கொல்லத்தானே செய்கிறான்? கொல்வதில், கொடூரமாகக் கொல்வது அன்பாகக் கொல்வது என தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா?

சிறு வயதில் ஒரு திருவிழாவிற்கு வருடம்தோறும் செல்வதுண்டு. உறவினர் வீட்டுக்கு. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி எனும் ஊர் அது. இப்போது திருப்பத்தூர் மாவட்டம் என்று நினைக்கிறேன். அங்கே சாமுண்டீஸ்வரி தேவி கோவில் என்று பிரபலமான கோவில் உண்டு. திருவிழாவின்போது வீட்டிற்கு ஒரு கிடா வெட்டுவார்கள். அதிகபட்சம் ஐந்தாறு கிடாக்கள் வரை போகும். கோவிலுக்கு வெளியே கிடாக்களை வெட்டுவதற்கு என்றே பெரிய மைதானம் இருக்கும். அதிகாலையிலேயே ஆரம்பித்து விடுவார்கள். கிடாக்களை வெட்ட வீச்சருவாளும் கையுமாக கெடா மீசை வைத்த பலர் வலம் வருவார்கள். ஒரே வெட்டு. ஆட்டின் தலை வேறு உடல் வேறாக பிரிந்துவிடும். சில மணி நேரங்களில் அந்த இடமே ரத்த ஆறாகக் காட்சி தரும். சிறு வயதில் முதன்முதலில் இதைப் பார்த்த நாளன்று எனக்குக் காய்ச்சலே வந்துவிட்டது.

நம் ஊரில் நமக்குப் பிடித்தமான ஆடு, மாடு, பன்றி, கோழி முதலியவற்றை இறைச்சி கடைகளில் தொங்க விட்டிருக்கிறார்கள். கொலை செய்துதான்! அதுபோலத்தானே அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மாடுகளையும் இன்ன பிற மிருகங்களையும் கொன்று தொங்க விடுகிறார்கள்?

பூனையை ஒரு மனிதன் எப்படி சாப்பிட முடியும் என்று கேட்டிருந்தீர்கள். உங்களது எழுத்தை இத்தனை ஆண்டு காலம் வாசித்து அனுபவித்ததில் எனக்கு ஒரு ஐயம் ஏற்படுகிறது. ஒரு மனிதன் இதை சாப்பிட வேண்டும் இதை சாப்பிடக் கூடாது என்பதை இன்னொரு மனிதன் எப்படி தீர்மானிக்க முடியும்? அது ஃபாசிசம் இல்லையா? பூனையும் நமது பிள்ளையைப் போலத்தானே என்கிறீர்கள். பலரது வீடுகளில் மீன்களை வளர்ப்பார்கள். எக்ஸைலில் உதயாவும், பெருந்தேவியும் மீன் வளர்த்த கதையை – மீன்களுடன் பேசி வாழ்ந்த கதையைப் படித்து உருகியவன் நான். அதேசமயம், பூனைகளுக்கு உணவிட அந்த மீன்களையல்லவா கொடுக்க வேண்டியிருக்கிறது?

மற்ற மிருகங்களாவது பரவாயில்லை… நம்முடன் நிலத்தில் வாழ்கின்றன. ஆனால் மீன்கள் என்ன பாவம் செய்தன? கடலிலும், நதிகளிலும், ஏரிகளிலும் வாழ்கின்றன. தண்ணீர்தான் அவற்றிற்கு சுவாசம். தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து மூச்சுத்திணறி துடிக்கத் துடிக்க இறந்த மீன்களைத்தானே நாமும் உண்கிறோம். நமக்குப் பிடித்த பூனைக்கும் உணவிடுகிறோம்?

உங்களுக்குப் பிடித்த விரால் மீன் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

உங்களை வாசித்த பிறகுதான் விரால் மீனை வீட்டில் சமைக்கவே ஆரம்பித்தோம். விரால் மீனை எப்படி வாங்குவோம்? உயிருடன் இருக்கும். தனியாக ஒரு பெட்டியில் நீந்த விட்டிருப்பார்கள். நாம் போய் வாங்கியதும், நம் கண் எதிரில் அதன் மண்டையில் கட்டையைக்கொண்டு ஓங்கி அடித்துக் கொல்வார்கள். இதுவும் கொடூரம்தானே சாரு?


சீனாக்காரனும், அமெரிக்கனும் நாம் விரால் மீன் உண்ணும் கலாச்சாரத்தை கொடூரம் என்றும், காட்டுமிராண்டித்தனம் என்றும் சொன்னால் அதை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் ?

நமக்குப் பிடித்த பிராணிகளை நாம் சாப்பிடுவது போல, அவர்களுக்குப் பிடித்த பிராணிகளை அவர்கள் சாப்பிடுகிறார்கள். அவர்களது உணவுக் கலாச்சாரம் அது. நம் வீட்டில் வளர்க்கும் பிராணியை அவர்கள் உண்கிறார்கள் என்பதால் மட்டுமே அவர்கள் கொடூரர்கள் ஆகி விடுவார்களா?

உலகில் தேனிக்கள் அழிந்துவிட்டால் மனித இனமும் இன்ன பிற உயிரினங்களும் அழிந்து விடும் என்று ஒரு கோட்பாட்டைச் சொல்வார்கள்.  அசைவம் உண்ணாத தீவிரமான சைவர்கள் கூட தேனை உணவாக எடுத்துக் கொள்வார்கள். தேனீக்களைத் தீயிட்டு அழித்துவிட்டுதானே தேனை எடுக்கிறோம்? அது கொடூரம் இல்லையா?

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பெல்ட், பர்ஸ், ஷு, கைப்பை, லெதர் கோட் என அனைத்துமே மாடு மற்றும் பாம்பின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவதுதானே?

மனிதன் உண்பதற்கு என்னென்ன பிராணிகளைக் கொடூரமாக கொல்கிறான் என்று சொல்லிவிட்டு, அதே பதிவில் பூனைகளுக்கு உணவிட மீனுக்காக பட்ட அலைச்சல்களையும் குறிப்பிட்டு இருப்பதால் இந்த ஐயம் எனக்குள் வருகிறது.

பூனைக்குத் தேவைப்படும் மீன் என்பதையும், இந்த மண்ணில் நமக்குத் தேவையான இன்னபிற பிராணிகளை நாம் உண்ணுவதையும், வேறு ஒரு மண்ணில் வேறொரு உணவு கலாச்சாரத்துடன் இன்னொரு மனிதன் உண்பதைக் கொடூரம் என்று குறிப்பிடுவதையும் எப்படி வேறுபடுத்திப் புரிந்து கொள்வது என்பது மட்டுமே எனது ஐயம். ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இது அபத்தமான ஐயமாக இருந்தால் மன்னித்து அருளவும்.
அதேபோல், மனிதன் இயற்கையை அழிக்கிறான் என்பதை நூற்றுக்கு நூறு ஒத்துக்கொள்கிறேன்.

கணேஷ் அன்பு

என்னை மிக நன்றாக அறிந்த நண்பர்களில் கணேஷும் ஒருவர்.  பொதுவாக விவாதங்களில் நான் தோற்று விடுவேன்.  அதன் காரணமாகவே அதில் நான் ஈடுபடுவதும் இல்லை.  அடிக்கடி நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு. நல்லவேளை, நான் ஸ்டெனோவாகப் போனேன்.  வக்கீலாகப் போயிருந்தால் பிக் பாக்கெட் அடித்த என் கட்சிக்காரன் என் “வாதங்களால்” கொலைகாரன் என நிரூபிக்கப்பட்டு தூக்கில் தொங்குவான்.  என்னுடைய கேஸையே எடுத்துக் கொள்ளுங்களேன்.  என் இமேஜ் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன்.  நீட்ஷே மீசை.  மன்சூர் அலி கான் மாதிரி உருவம்.   அரைக்கால் ட்ராயரும் கரடுமுரடான டி ஷர்ட்டும் அணிந்து தரையில் அமர்ந்திருக்கிறேன்.  பக்கத்தில் இரண்டரை அடி உயரமுள்ள விஸ்கி பாட்டில்.  என்ன ஆவது?  இன்றைக்கும் எனக்குக் குடிகாரன் என்று ஒரு இமேஜ் இருப்பதற்குக் காரணம் அந்தப் புகைப்படம்தான்.  அது நானே பெருமையாக வெளியிட்டுக் கொண்டது.  சரி, வாதத் திறமைக்கு வருவோம்.  யார் எதைச் சொன்னாலும் அது சரி என்றே தோன்றும்.  ஒரு ஆள் நான் தான் சிவபெருமான் என்றான்.  சொல்வதோடு விட்டானா, மழையை வருவிக்கிறான்.  சூரியனைத் தோப்புக்கரணம் போட வைக்கிறான்.  சரி, இவன் சிவன் தான் போலிருக்கிறது என்று நம்பி விட்டேன்.   நான் என்ன செய்யட்டும்?  என் ‘அமைப்பு’ அப்படி.  ஆனால் இப்போதிப்போது கொஞ்சம் திருந்தியிருக்கிறேன்.  இவர் சொல்வது தவறாகவும் இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.  இருந்தாலுமே எத்தனை சீரியஸ் விவாதமாக இருந்தாலும் நாம் சொல்வது சரியாக இருக்க ஐம்பது சதவிகித வாய்ப்புதான் உள்ளது; எதிராளி சொல்வது சரியாக இருக்க ஐம்பது சதவிகிதம் என்று நினைத்துக் கொண்டுதான் பேசவே ஆரம்பிப்பேன்.  வாசகர் வட்ட உள்வட்டத்தில் ஒரு நண்பர்.  அவர் என்ன சொன்னாலும் ரொம்ப சரியாகவே தோன்றும்.  அப்படிப்பட்டவர் சமீபத்தில் “அமீத் ஷாதான் இந்தியாவின் விடிவெள்ளி; அவர் அடுத்த பிரதமராக வந்தால் இந்தியா இன்னும் நன்றாக ஒளிரும்” என்று சொன்னபோது கொஞ்சம் உஷாராகி விட்டேன்.  இனிமேல் இவரிடம் இலக்கியமும் சக்க வரட்டியும் பற்றி மட்டுமே பேசுவோம், அரசியல் வேண்டாம் என்று முடிவும் செய்து விட்டேன்.  தெரிகிறதா, நான் கொஞ்சம் திருந்தி வருகிறேன் என்று. 

இந்தப் பின்னணியில் கணேஷ் சொல்வதைப் பார்க்கலாம்.  அதற்கும் முன்னால் மாடுகளைக் கொல்வது குறித்து மகாத்மா என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு மேலே செல்வோம். 

”ராஜேந்திர பாபு (டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்)  50000 தபால் கார்டுகளும் 30000 கடிதங்களும் பல ஆயிரக்கணக்கான தந்திகளும் வந்து குவிந்தன என்று என்னிடம் சொன்னார்.  எல்லாம் பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் கடிதங்கள்.  ஏன் இத்தனை கடிதங்களும், தந்திகளும்?  இவற்றால் எந்தப் பயனும் இல்லை. 

எனக்கு இன்னொரு தந்தி வந்தது.  ஒரு நண்பர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருக்கிறார்.  பசு வதையைத் தடை செய்து இந்தியாவில் எந்தச் சட்டமும் இயற்றப்படக் கூடாது என்பதற்காக. இந்துக்கள் பசு வதையில் ஈடுபடக் கூடாது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.  பசுவை நேசிப்பவன் நான்.  ஆனால் என்னுடைய மதமே அந்த மதத்தைச் சாராத மற்ற இந்தியர்களுக்குமான மதமாகவும் இருக்க முடியும்?

கூரையின் மீது ஏறி நின்றுகொண்டு மத வேற்றுமை கூடாது என்று கூவுகிறோம்.  நம்முடைய பிரார்த்தனைகளின் போது குர்-ஆனை ஓதுகிறோம்.  ஆனால் இப்படி குர்-ஆனை ஓதச் சொல்லி யாரேனும் என்னைக் கட்டாயப்படுத்தினால் நான் அதை விரும்ப மாட்டேன்.  அப்படியிருக்கும்போது பசு வதை செய்யாதீர்கள் என்று நான் எப்படி ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியும்?  இந்தியாவில் இந்துக்கள் மட்டுமா இருக்கிறார்கள்?  முஸ்லீம்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்.    

இந்தியா இந்துக்களின் தேசமாகி விட்டது என்று இந்துக்கள் நினைத்தால் அது மிகவும் தவறானது.  இந்த நிலத்தில் வாழும் அத்தனை பேருக்கும் இந்தியா உரித்தானது.  இங்கே பசு வதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தால் பாகிஸ்தானில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.  உதாரணமாக, சிலையை வணங்குவது ஷரியத்துக்கு எதிரானது; எனவே இந்துக்கள் யாரும் கோவிலுக்குப் போகக் கூடாது என்று அங்கே ஒரு சட்டம் கொண்டு வந்தால் என்ன செய்வது?   நான் ஒரு கல்லிலே கூட கடவுளைக் காண்கிறேன் என்ற என்னுடைய நம்பிக்கையால் யாரை நான் துன்புறுத்துகிறேன்?  நான் கோவிலுக்குப் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டாலும் நான் கோவிலுக்குப் போகத்தான் செய்வேன். எனவே, இந்தக் கடிதங்கள் தந்திகள் எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள்.  பணத்தை இப்படியெல்லாம் விரயம் செய்யக் கூடாது. 

இது தவிர, சில பணக்கார இந்துக்கள் பசு வதையை ஊக்கப்படுத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.  அதை அவர்கள் தங்கள் கரங்களால் செய்வதில்லை.  ஆனால் யார் பசுக்களை ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்?  அங்கேயெல்லாம்தான் அந்த மாடுகள் கொல்லப்பட்டு அவற்றின் தோலிலிருந்து காலணிகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வருகின்றன.  எனக்கு ஒரு ஆசாரமான வைஷ்ணவ இந்துவைத் தெரியும்.  அவர் தன் குழந்தைகளுக்கு மாட்டு சூப்புதான் கொடுக்கிறார்.  நான் என்ன இது என்று கேட்டபோது மாட்டிறைச்சியை மருந்தாக உட்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றார்.  உண்மையான மதம் என்றால் என்னவென்று நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை.  வெறுமனே பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று கத்திக் கொண்டிருக்கிறோம்.  கிராமங்களில் மாடுகளின் மீது அவைகளால் தாங்கவே முடியாத அளவுக்கு சுமைகளை ஏற்றி அவைகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.  அந்தச் சுமைகள் அவைகளைக் கிட்டத்தட்ட கொன்றே விடுகின்றன.  அதெல்லாம் பசு வதையில்லையா?

அந்த உரையின் கடைசியில் மகாத்மா கூறுகிறார்: என்னுடைய 30 ஆண்டுக் கால போதனை எப்படி இந்த அளவுக்குப் பயனற்றுப் போனது என்று ஆச்சரியப்படுகிறேன்.  அகிம்சை என்பது கோழைகளின் ஆயுதமா என்ன?  நாம் நிஜமாகவே வீரர்களாகவும் முஸ்லீம்களை நேசிப்பவர்களாகவும் இருக்க முடியும் என்றால், முஸ்லீம்கள் நமக்குத் துரோகம் செய்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.  நேசத்துக்கு நேசத்தையே அவர்கள் நமக்கு அளிப்பார்கள்.   இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் நமக்கு என்ன அடிமைகளா?  எவனொருவன் மற்றவனை அடிமைப்படுத்துகிறானோ அவனும் ஒரு அடிமையாகிறான்.  வாளை வாளால் சந்திப்போம், லத்தியை லத்தியால் சந்திப்போம், அடியை அடியால் சந்திப்போம் என்று சொன்னால், பாகிஸ்தானிலும் இதேதான் நடக்கும்.  அப்படி நடந்தால் நாம் வாங்கிய சுதந்திரம் நம் கை விட்டுப் போய் விடும் என்பதில் சந்தேகமே இல்லை.”

மேற்கண்ட உரையை அவர் சுதந்திரத்துக்குப் பிறகு பேசினாரா அல்லது அதற்கு முன்னரா என்று தெரியவில்லை.  ஏனென்றால், இணையத்தில் பேசிய தேதி  25 July 1947 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தத் தேதியில் எனக்கு சந்தேகம் உள்ளது. 

யாராவது காந்தியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா?  காந்தி பேசுவதை, நடப்பதை காணொளியில் காண வேண்டும் என்ற ஆசையை விடுங்கள்.  காதாலாவது கேட்டிருக்கிறோமா?  கேட்டதில்லை.  ஏனென்றால், நாம் நன்றி கெட்டவர்கள்.  நமது மூத்தோரை வணங்கத் தெரியாதவர்கள்.  வணங்க மறுப்பவர்கள்.  நான் கூட சில சமயங்களில் வேடிக்கையாகச் சொல்வதுண்டு, மகாத்மாவா சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார், சுதந்திரம் கிடைத்ததில் ஹிட்லரின் பங்கு 50 சதவிகிதம்; எட்வினா ஸிந்த்தியாவின் பங்கு 50 சதவிகிதம் என்று.  ஹிட்லர் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கியிருக்காவிட்டால் இங்கிலாந்து திவாலாகியிருக்காது.  திவாலாகியிருக்காவிட்டால் இந்தியாவிலேயே இன்னும் கொஞ்ச நாள் தங்கியிருக்கும்.  எட்வினாவுக்கு நேருவின் மீது காதல்.  நேருவுக்கு சுதந்திரத்தின் மேல் காதல்.  நேரு கேட்டதை எட்வினா கொடுத்தார்.  நகைச்சுவை இருக்கட்டும்.  காந்தியின் சாதனை சுதந்திரம் அல்ல; அகிம்சை.  அகிம்சையை போதித்தது அல்ல; அதை வாழ்ந்து காட்டியது.  அவர் மதத்தைத் தொடங்கவில்லை.  தொடங்கியிருந்தால் அவர்தான் அடுத்த இயேசு.

பசு பற்றி நான் பல ஆண்டுகளாக யோசித்து வந்திருக்கிறேன்.  எல்லா மிருகமும் பசுவும் ஒன்றா?  பசு இல்லையேல் இந்தியா இல்லை.  இந்திய வாழ்க்கை இல்லை.  இப்படி நான் நினைப்பது சரியா?  இப்படியெல்லாம் குழம்புவேன்.  நேற்று முழுவதுமே காந்தியின் உரைகளை ஆடியோவில் கேட்டுக் கொண்டிருந்தேன்.  முதல் முதலாக அவர் குரலைக் கேட்கிறேன்.  அவரது ஆங்கில உச்சரிப்புப் படு மட்டமாக இருந்தது.   பீப்பள் என்கிறார்.  ஆனால் சொல்லப்படும் கருத்துக்கள் இருபது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் ஒருவரால் அப்படி சிந்திக்க முடியும்.  இந்திப் பேச்சும் சொல்லும்படி இல்லை.  ஏதோ ஒரு வயதான கிழவர் திக்கித் திணறிப் பேசுவதைப் போல் இருக்கிறது.  குரலும் மகா மட்டம்.  ஆனால் என்ன பேசுகிறார் என்று கவனித்தால், கடவுள் மனித அவதாரம் எடுத்தால் இப்படித்தான் பேசுவார் என்பது போல் இருக்கிறது. 

அவர் பசு பற்றி என்ன சொல்கிறார் என்று தொகுத்துக் கொண்டேன்.  அதை நாம் கவனிக்க வேண்டும்.  இனி வருவது காந்தி:

பசு கருணையின் கவிதை.  கருணையை மட்டுமே அந்த அன்பான பிராணியிடம் நாம் பார்க்க முடியும்.  லட்சக்கணக்கான இந்தியர்களின் தாய் பசு.  பசுவைக் காப்பது என்பது கடவுளின் ஒட்டு மொத்த சிருஷ்டியையே காப்பதற்குச் சமம்.  அந்தப் புராதனமான ஞானி – அவர் யாராகவும் இருக்கட்டும் – அவர் பசுவிலிருந்தே தொடங்கினார்.  அவை வாயில்லா ஜீவன்கள் என்பதாலேயே  ஐந்தறிவுப் பிராணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

மனிதனுக்கு அடுத்தபடியான ஜீவராசிகளில் பசுவே உன்னதமானது.  மனிதனுக்குக் கீழே இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் முதன்மையான பசு அவைகளின் சார்பாக நீதி வேண்டி மனிதனிடம் மன்றாடுகிறது.  “மானுடனே! எங்களைக் கொன்று எங்கள் மாமிசத்தைத் தின்னவோ எங்களை வதை செய்யவோ நீ படைக்கப்படவில்லை; நீ எங்களின் தோழனாகவும் பாதுகாவலானகவுமே படைக்கப்பட்டிருக்கிறாய்” என்று பசு அதன் கண்களின் வழியே நம்மிடம் பேசுகிறது.

நான் பசுவை வணங்குகிறேன்.  அதை வணங்கும் உரிமைக்காக மொத்த உலகையும் எதிர்க்க வேண்டியிருந்தாலும் அதற்குத் தயங்க மாட்டேன். 

நம்மைப் பெற்றெடுத்த தாயை விடவும் கோமாதா பல வகைகளிலும் உயர்வானது.  நம் தாய் நமக்கு ஒருசில ஆண்டுகள் பால் தருகிறாள்.  பிறகு நாம் வளர்ந்ததும் அவளுக்கு சேவை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாள்.  ஆனால் கோமாதா நம்மிடமிருந்து புல்லையும் நீரையும் தவிர வேறு எதையுமே எதிர்பார்ப்பதில்லை.  நம் தாய் அவ்வப்போது நோய்வாய்ப்படுகிறாள்.  அப்போது நாம் அவளுக்குப் பணி புரிய வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.  கோமாதா மிக அரிதாகவே நோய்வாய்ப்படுகிறது.  பசுவின் சேவை ஈடு இணையில்லாதது; ஏனென்றால், அது இறந்த பிறகும்கூட அது நமக்கு உதவி செய்கிறது.  நம் தாய் இறந்தால் அவர்களை அடக்கமோ தகனமோ செய்யும் பொருட்டு நமக்கு செலவுதான் ஆகிறது.  ஆனால் கோமாதா இறந்த பிறகும் அது உயிரோடு இருந்ததைப் போலவே  உபயோகமாகத்தான் இருக்கிறது.  அதன் மாமிசம், அதன் எலும்புகள், அதன் இரைப்பை, குடல், கொம்பு, தோல் எல்லாமே மனிதனுக்குப் பயன்படுகின்றன.  இப்படிச் சொல்வதால் நான் நம் தாயைக் குறைத்துச் சொல்வதாக எடுத்துக் கொண்டு விட வேண்டாம்.  ஏன் நான் பசுவை வணங்குகிறேன் என்பதற்கான காரணங்களையே உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறேன்.

பசுவை நேசித்தல் என்பது மனிதப் பரிணாம வளர்ச்சியில் ஓர் அற்புதமான கட்டம் எனக் கருதுகிறேன்.   அது மனிதனை தன் சக ஜீவிகளைக் காட்டிலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.  பசு, மனிதர்களுக்குக் கீழான ஜீவராசிகளின் உலகைக் குறிக்கிறது.  ஆக, பசுவின் மூலமாகவே மனிதன் தன்னுடைய மேலான அடையாளத்தை உணர்கிறான்.   பசு ஏன் சிருஷ்டியின் உச்சமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருக்கிறது.  இந்தியாவில் பசுதான் மனிதனின் மிகச் சிறந்த தோழமை.  பசுதான் அவனுக்கு ஏராளமானவற்றைக் கொடுக்கிறது.  பால் மட்டுமல்ல; இந்திய விவசாயமே பசுவினால்தான் சாத்தியமாயிற்று.  இந்த உலகுக்கு இந்து தர்மம் கொடுத்த கொடை, பசு.  பசுவைக் காப்பாற்றக் கூடிய இந்துக்கள் இருக்கும் வரை இந்து தர்மமும் இருக்கும்.  இந்துக்களின் அடையாளம் அவர்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் விபூதியோ திலகமோ அல்ல; அவர்கள் உச்சரிக்கும் மந்திரங்கள் அல்ல; அவர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகள் அல்ல; அவர்கள் மிகத் தீவிரமாக அனுசரிக்கும் ஜாதிய நடைமுறைகள் அல்ல; அவர்கள் பசுவை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதே அவர்களின் அடையாளம்.

ஆனால் பசுவைக் காப்பாற்றுவதற்காக நான் ஒரு மனிதனைக் கொல்ல மாட்டேன்.  ஏனென்றால், ஒரு மனிதனைக் காப்பாற்றுவதற்காக ஒரு பசுவையும் கொல்ல மாட்டேன்.  இரண்டு உயிர்களுமே எனக்குச் சமமானதுதான்.  இதற்கு மாற்றுக் கருத்து கொண்டவர்கள் இருக்கலாம்.  அவர்களின் மன மாற்றத்தை என்னுடைய நன்னடத்தையின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதை என் மதம் எனக்குக் கற்பித்திருக்கிறது.   பசு வதையை நீங்கள் ஒருபோதும் சட்டத்தின் மூலம் கொண்டு வர முடியாது.  கல்வி, ஞானம், பசுவின் மீதான பரிவுணர்ச்சி ஆகியவற்றின் மூலம் மட்டுமே அதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர முடியும்.  என்னுடைய ஆசை என்னவென்றால், உலகம் பூராவுமே பசு வதை தடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.  ஆனால் முதலில் அதற்கு என்னுடைய இல்லத்தை நான் சரி பண்ணியாக வேண்டும்.  பசுவைக் காப்பாற்றுவது என்பது என்னைப் பொறுத்தவரை வெறுமனே பசுவைக் காப்பாற்றுவது மட்டும் அல்ல.  பசு இந்த உலகில் ஆதரவற்று இருக்கிறது, பலஹீனமாக இருக்கிறது என்பதைப் பரிவுடன் புரிந்து கொள்வதுதான். 

மக்கள் நினைக்கிறார்கள், சட்டம் கொண்டு வந்து விட்டால் ஒரு வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடலாம் என்று.  இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக மட்டுமே இருக்கும். ஒருசில தீயவர்களால் செய்யப்படும் குற்றங்களை ஒழிப்பதற்கு வேண்டுமானால் சட்டம் தேவைப்படலாம்.  ஆனால் பொதுமக்களில் ஒரு சாராரின் பொது நம்பிக்கையை சட்டத்தினால் மாற்றி விட முடியாது.”

பசு பற்றி காந்தி நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறார்.  பசுவை நேசிக்கிறேன் என்றால் அதற்காக என் உயிரையும் கொடுப்பேனே தவிர என் சகோதரனின் உயிரை எடுக்க மாட்டேன்.

பசு வதையும் மனித வதையும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான். 

உலகில் எந்த இடத்திலும் இந்தியாவில் இருப்பதைப் போன்ற எலும்பும் தோலுமான மாடுகளைப் பார்க்க முடியாது.  இத்தனைக்கும் இந்தியா பசுவை வணங்கும் தேசம்.   

இந்திய வாழ்க்கையில் மாடுகளின் பங்கு பற்றி மகாத்மா கோடி காட்டியுள்ள திசையில் யோசித்தால் பல்வேறு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.  மாடுதான் இங்கே கிராமப் பொருளாதாரத்தின் ஆதாரமாகவே இருந்திருக்கிறது.  உழவிலிருந்து போக்குவரத்து வரை. 

ஆனால் எக்காரணம் கொண்டும் இப்போதைய இந்துத்துவவாதிகளின் பசுப் பாதுகாப்புத் தீவிரவாதத்தோடு மகாத்மாவின் கோட்பாடுகளை சேர்த்துப் பார்க்கக் கூடாது.  மகாத்மா பசுவின் பாதுகாப்புக்காக என் உயிரைக் கொடுப்பேன் என்கிறார்.  இந்துத்துவவாதிகளோ மற்றவர்களின் உயிர்களை எடுக்கிறார்கள்.  இரண்டையும் நீங்கள் ஒருபோதும் இணைத்துப் பார்க்கலாகாது.

இனிமேல்தான் கணேஷின் கடிதத்துக்குள் செல்ல இருக்கிறேன். 

***

பூனை உணவுக்கான ஏற்பாடுகளில் பங்கேற்க விரும்புபவர்கள் பூனை உணவாகவோ பணமாகவோ அனுப்பலாம். Whiskas cat food ocean flavour or tune. Adult or kitten. விபரம் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai