கர்மா (2)

மிலரப்பா யோசித்தார்.  பணத்தைப் பெரிதாக நினைக்கும் லௌகீக வாழ்க்கை வேண்டாம் என்றுதானே இந்த ஞானியிடம் வந்து “எனக்கு ஆன்மீக வழியைக் காட்டுங்கள்” என்று தஞ்சம் அடைந்தோம்?  இவர் என்னவென்றால் இப்படி சித்ரவதை செய்தே நம்மைத் துரத்தி அடித்து விட்டாரே?  இது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு வீட்டைக் கட்டச் சொன்னார்.  உதவியாளரை வைத்துக் கொண்டு கட்டினோம்.  பாறாங்கற்களைக் கொண்டு களிமண் சேர்த்துக் கட்ட வேண்டும்.  இரண்டு பேரால் முடிகிற காரியமா அது?  நாள் கணக்கில் இரவு பகல் பார்க்காமல் கட்டின வீடு.  ’உன்னைத் தனியாக அல்லவா கட்டச் சொன்னேன், இடித்து விட்டுத் திரும்பக் கட்டு’ என்று சொன்னதால் திரும்பவும் தனியாகவே கட்டினேன்.  பாறாங்கற்களைச் சுமந்து சுமந்து முதுகே ரணகளமானது மட்டும் அல்லாமல் கூனும் விழுந்து விட்டது.  அதையும் இடிக்கச் சொல்லி விட்டார்.  சரியான திசையில் கட்டவில்லையாம்.  மூன்றாவது முறையாக எந்த வில்லங்கமும் இல்லாமல் கட்டினேன்.  கடைசியில் பார்த்தால், “நான் உன்னை எப்போது வீடு கட்டச் சொன்னேன், உடனே இடித்துத் தள்ளு” என்கிறார்.  இடித்துத் தள்ளி விட்டு குருவை விட்டுக் கிளம்பினார் மிலரப்பா. 

இனியும் இங்கே இருந்து பயன் இல்லை.  குருவை மாற்றி விட வேண்டியதுதான். ஆனால் பொதுவாக குருவை மாற்றாதே என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார் மிலரப்பா.  ஒரு ஞானியிடம் ஒருத்தர் கேட்டார், ”என் குரு மது அருந்துகிறார், குருவானவர் எப்படி மது அருந்தலாம், அதனால் குருவை மாற்றிக் கொள்ளலாமா ஸ்வாமி?”  ஞானி சொன்னார்: ” வீட்டைச் சுத்தம் செய்யும் துடைப்பம் சுத்தமாக இருக்க முடியுமா? அதேபோல் உன் அக விளக்கை ஏற்ற நினைக்கும் குருவின் அகம் அசுத்தமாக இருப்பது பற்றிக் கவலை கொள்ளாதே.  குருவை மாற்றினால் ஆயுள் பூராவும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.  உனக்குத் திருப்தியான குரு கிடைக்கவே மாட்டார்.”   இந்த வாசகம் ஞாபகம் வந்தாலும் கூட மிலரப்பாவினால் அங்கே தங்க முடியும் என்று தோன்றவில்லை.  கிளம்பி விட்டார்.  இவ்வளவு பரந்த உலகில் எனக்கென்று ஒரு குரு கிடைக்காமலா போய் விடுவார்?  ஆனால் மிலரப்பாவினால் அந்த ஊர் எல்லையைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.  ஊரிலிருந்து வெளியே போக முடியாதபடி எல்லா வழிகளும் பனியினால் அடைபட்டுக் கிடந்தன.  அப்போது மிலரப்பாவைத் தேடி குருவின் புதல்வன் வந்தான்.  தந்தை உன்னை அழைத்து வரச் சொன்னார் என்ற செய்தியுடன். 

இப்போது கிம் கி டுக்கின் Spring, Summer, Autumn, Winter… Spring படத்தின் சம்பவத்தை நினைவு கூருங்கள்.  குரு மிலரப்பாவிடம் சொன்னார்.  ”எதைக் கற்க நினைத்தாலும் அதன் அடிப்படை நம்பிக்கை.  சரணாகதி.  நீ அதில் தோற்று விட்டாய்.  ஒரே ஒரு மந்திரத்தைச் சொல்லி  30 பேருக்கு மேல் கொன்றாயே, அந்தப் பாவத்தை யார் தீர்ப்பது?  அதைத் தீர்க்காமல் எப்படி நீ ஞானத்தை அடைய முடியும்?  இருந்தாலும் உன்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியத்தின் காரணமாகவும், மிகுந்த பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் – கடைசியில் நீ அதை இழந்து விட்டாலும் –  மூன்று வீட்டையும் கட்டி உன் சரீரத்தால் பிராயச் சித்தம் செய்து விட்டாய், அதனால் நான் உனக்குக் கற்பித்துத் தருகிறேன்.”

நம் ஊரில் பட்டினத்தார், அருணகிரிநாதர் என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா, அதேபோல் இன்றளவும் மிலரப்பா ஜப்பானில் பிரபலம்.  அவருடைய பாடல்களில் மரணத்துக்குப் பிறகான வாழ்க்கை பற்றிச் சொல்கிறார்.  ஆனாலும் வெள்ளைக்காரன் படிப்பைப் படித்த எனக்குக் கொஞ்சம் சம்சயமாகத்தான் இருந்தது.  எல்லாம் சரி, மிலரப்பா பொய் கூற மாட்டார்.  நம் சித்தர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்.  சமகாலத்திலேயே பார்த்தால் ஷீர்டி பாபாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இருக்கிறது.  ஒரு பக்தரின் ஆறு வயதுக் குழந்தை இறந்து விட்டது.  பக்தர் தீராத வேதனையில் இருந்தார்.  பாபாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.  பக்தர் கேட்கவில்லை.  பிறகு பாபா சொன்னார், ”நீ ஏழை.  உன்னிடம் இருப்பதை விட நல்ல இடத்தில் உன் குழந்தை வளரும்.  அப்படி ஒரு இடத்தில் அது பிறவி எடுத்து விட்டது. கவலைப்படாதே.”  அப்போதும் என் மனம் கேட்டது, ஆதாரம்?  எங்களுக்கு எதையும் வெள்ளைக்காரன் சொன்னால்தான் தெரியும்.  அப்போதுதான் நாங்கள் நம்புவோம்.  ஆரம்பத்தில் வேதங்களைக் கூட நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  பிறகு 19-ஆம் நூற்றாண்டில் மாக்ஸ் ம்யுல்லர் என்ற ஜெர்மன்காரர் வந்து சொன்ன பிறகுதான் அதெல்லாம் எத்தனை பெரிய விஷயம் என்பதையே ஒப்புக் கொண்டோம். 

அதேபோல் இப்போதும் காத்திருந்தேன்.  மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்பதற்கு ஆதாரம் உண்டா?  ஆவிகள் உண்டா?  பேய்கள் உண்டா?  சிறு தெய்வங்கள் உண்டா?  உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு அந்த உயிர் என்ன செய்கிறது?  இறந்து போனவர்கள் மீடியம் மூலம் பேசுவதெல்லாம் சும்மா கப்சாவா?  இது பற்றியெல்லாம் அமெரிக்காக்காரன் என்ன சொல்கிறான்? இதோ, எல்லாவற்றுக்கும் ’சோதனைச் சாலை’ ஆதாரம் கிடைத்து விட்டது.  ரிக்கி ஸ்டெர்ன் என்பவர் எடுத்த Surviving Death என்ற ஆவணப் படத்தில் (வெப் சீரீஸாக வந்துள்ளது) செத்துப் பிழைத்தவர்கள் சிலருடைய அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.  முதல் அனுபவம், அமெரிக்காவில் உள்ள வயோமிங் மாநிலத்தின் ஜாக்சன் என்ற ஊரைச் சேர்ந்த டாக்டர் மேரி நீல் சொன்னது.  ஒருமுறை மேரி கயாகிங் சென்றார்.  Rafting கேள்விப்பட்டிருப்பீர்கள்.  பத்து பேர் சேர்ந்து ஒரு படகில் பாறைகளினூடாக அடித்துக் கொண்டு செல்லும் நதியில் போகும் அபாயகரமான பயணம்.  உயிருக்குத் துணிந்தவர்கள்தான் இதில் ஈடுபட முடியும்.  படகிலிருந்து நதியில் விழுந்து விட்டால் நீச்சலடித்து படகுக்கு வந்து விட வேண்டும்.  உதவியாளர்கள் இரண்டு பேர் இருப்பார்கள்.  நீச்சல் தெரியாதவர்கள் இந்தப் பக்கமே போகக் கூடாது.  கயாகிங் என்பது இன்னும் கடுமையானது.  ஒருவர் அல்லது இருவராக ஒரு சிறிய படகில் இதே மாதிரி அபாயகரமான நதிகளில் செல்வது. உதவியாளரும் கிடையாது.

அமெரிக்கர்கள் பயணம் செல்வதில் அதீத ஆர்வம் உள்ளவர்கள்.  மேரி 1999-இல் சீலே சென்று அங்கே கயாகிங் செல்லலாம் என்று முடிவு செய்தார்.  நதி என்றால் எனக்கெல்லாம் எங்கள் ஊர் வெட்டாறுதான்.  அது காவிரியின் கிளை ஆறு.  இல்லாவிட்டால், ஆண்டவன் கட்டளையில் சிவாஜியும் இரட்டைச் சடை போட்ட தேவிகாவும் படகில் பாடிக் கொண்டே செல்வார்களே – அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் – அந்த நதிதான் தெரியும்.  இரண்டு பக்கமும் தென்னை மரங்கள்.  சிவாஜி அனாயாசமாக துடுப்பு வலித்துக் கொண்டே, ஆனால் கன்னமும் தாடையும் தெறிக்கத் தெறிக்க அந்த அற்புதமான பாடலைப் பாடுவார்.  ஆனால் கயாகிங் நதியெல்லாம் படு பயங்கரம்.  எங்கு பார்த்தாலும் பாறைகள்.  அதில் நுரை கொப்புளிக்கப் பாயும் பேய் நதி.  இடையிடையே வீழ்ச்சிகள் வேறு.  வீழ்ச்சி என்றால் பெரிய வீழ்ச்சி அல்ல.  சடார் சடாரென்று நதி கீழே இறங்கி ஓடும்.  கூடவே நம் படகும் சட்டென்று இறங்கும்.  கவிழ்ந்து விட்டால் ஐயோ அம்மா என்று கத்திப் பயனில்லை.  கண்ணிமைக்கும் நேரத்தில் படகில் ஏறி விட வேண்டும்.  இல்லாவிட்டால் உலக வாழ்க்கைக்கு டாட்டா தான். 

ராஃப்டிங் என்றாலாவது இரண்டு வழித்துணைகளில் ஒருவர் குதித்துக் காப்பாற்ற ஒரு அரிதான வாய்ப்பு உள்ளது.  கயாகிங்கில் அதுவும் இல்லை.  நீங்களேதான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.  பெரிய வீழ்ச்சிகளைத் தவிர்த்து விட்டு சிறு சிறு வீழ்ச்சிகளின் வழியே படகைச் செலுத்த வேண்டும்.  விதிவசத்தால் மேரியின் கயாக் இரண்டு பாறைகளின் இடையே மாட்டிக் கொண்டு மேரி வீழ்ச்சியில் விழுந்து விட்டார்.  பத்து அடி ஆழத்தில் நீரில் கிடக்கிறார்.  அவர் என்ன யோகியா, நீருக்குள் இருந்து கொண்டு மூச்சு விடுவதற்கு?  மூச்சு நின்று விட்டது.  டாக்டர் என்பதால் உயிர் பிரியும் தறுவாயில்கூட தன் உடம்பில் எங்கெங்கே அடிபட்டு என்னென்ன பாகமெல்லாம் உடைந்து விட்டன என்பதை அவரால் உணர முடிந்தது.  எலும்புகள் உடையும் சத்தம் கூட கேட்கிறது.  சிறிது நேரத்தில் உயிர் பிரிந்து விட்டது.  வலி இல்லை, வேதனை இல்லை.  மரணம் பற்றிய பயமும் இல்லை. 

அந்த இடத்தில்தான் மேரி மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். உயிர் போன பிறகும், நாடித் துடிப்பு அடங்கிய பிறகும் அவரால் அவர் உடம்பு நீரில் கிடப்பதைப் பார்க்க முடிகிறது.  ஆவியானது உடலை விட்டுப் பிரிந்து மேலே கிளம்பிச் செல்கிறது.  போன இடத்தில் அவர் தனியாக இல்லை.  அவரைப் போலவே பல ஆவிகள்.  அதை ஆவி என்று சொல்வதா, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.  அவர்களெல்லாம் யார் என்றும் தெரியவில்லை.  முன்பின் பார்த்ததில்லை.  ஆனால் அவர்களெல்லாம் பெரும் உற்சாகத்துடன் மேரியை வரவேற்கிறார்கள்.  அந்த இடம் லட்சக்கணக்கான மலர்களாலும் வண்ணங்களாலும் நிரம்பியிருக்கிறது.  அங்கே காலம் என்பதும் இடம் என்பதும் நாம் உணர்வது போல் இல்லை.  இதற்கு மேல் மேரி பேசுவது எனக்கும் புரியவில்லை, உங்களுக்கும் புரியாது.  இருந்தாலும் சொல்கிறேன்.  ”ஒரே நொடியில் எல்லா காலமும், எல்லா காலமும் ஒரே நொடியாக இருப்பதை உணர்ந்தேன்.  காலம் என்று நாம் எதை நினைக்கிறோமோ அது அங்கே இல்லாமல் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன்.”    

சும்மா கப்சா என்றுதானே நினைக்கிறீர்கள்?  நானும் அப்படித்தான் நினைத்தேன்.  ஆனால் மருத்துவமனையில் அவர் உடல் மருத்துவரீதியாக இறந்து, மரணச் சான்றிதழும் கொடுக்கப்பட்டு விட்டது.  அந்த சான்றிதழ்கள் அனைத்தும் நம் முன்னே வைக்கப்படுகின்றன.  பிறகு மேரிக்கு என்ன ஆனது?  இறந்து போன உடம்பில் மீண்டும் உயிர் வந்தது எப்படி?  செட் அப்பெல்லாம் இல்லை.  அவர் உடலைப் பரிசோதித்த மருத்துவர்களே நம்மோடு பேசுகிறார்கள்…

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

***