கொஞ்ச நேரம்

எக்ஸைல் எடிட்டிங் முடியும் வரை வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று இருக்கிறேன்.  இடையில் ஒரு வனத்துக்குச் சென்றிருந்தேன்.  வனத்தில் இப்போதும் குளிர்கிறது.  ஸ்வெட்டர் போடும் அளவுக்கு.  குளிர் காலத்தில் 13 டிகிரி இருக்குமாம்.  அந்த வனம் யாருமே கற்பனை செய்ய முடியாத ஒரு இடத்தில் உள்ளது.  திருச்சிக்கும் மணப்பாறைக்கும் நடுவே.  துவரங்குறிச்சி அந்த வனத்திலிருந்து 17 கி.மீ. என்று காட்டியது வழிகாட்டி. அந்த வழிகாட்டி உள்ள ஊரின் பெயரே வழிகாட்டி தான்.  அந்த வனத்தில் தினசரிகள் இல்லை.  டிவி இல்லை.  மடிக்கணினி வேலை செய்யவில்லை.  என் மொபைலும் வேலை செய்யவில்லை.  மற்ற நண்பர்களின் போன் வேலை செய்தது.  நான்கு நாட்கள் வன வாசம்.

திரும்பி வந்து மீண்டும் எடிட்டிங் வேலை.  இடையில் கொஞ்ச நேரம் முகநூல் பக்கம் சென்றால் இப்படி ஒரு கவிதை.

நட்சத்திரத்திற்கும் நிலாவிற்கும் ஒன்பது அடி தூரம் இருக்கிறது என்றேன். நண்பண் கண்கள் சுருங்க உற்றுப் பார்த்து விட்டு ஒன்பதரை அடி என்றான்.

சரி விட்றா ,நமக்குள்ள சண்டை வேணாம்னு நிலா அரை அடி நெருங்கி வந்துடிச்சி என்றேன்.

ங்கோத்தா அப்பவும் நிலா வெலகிப் போச்சின்னு சொல்லலை பார்த்தியா என்றான்.

நிலாவும் நட்சத்திரமும் மிரண்டு போய் படு வேகமாய் குழப்பத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன.

எவ்வளவுதான் நகர்ந்தாலும் ஒன்பதடி தூரம்தான் இருந்தது.

அடுத்த ரவுண்ட் கவனம் பிசகாமல் ஊற்ற வேண்டும் என்பதால் இந்தக் கவிதை இங்கே முடிகிறது.

***

கவிதையில் ஒரே ஒரு இடத்தில்தான் ஒற்றெழுத்து வைத்தேன்.  இந்தக் கவிதை.

அராத்துவிடம் பிரமாதமான க்ரியேட்டிவிட்டி இருக்கிறது.  வாழ்த்துக்கள்…

Comments are closed.