கோவா

சென்ற ஆண்டு புருஷன் வெளியீட்டு விழாவுக்காக கோவா சென்ற போது கோவாவை என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது நான் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அது பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் பேசினேன் என்று நினைக்கிறேன். உடனடியாகத் திரும்பி விட்டேன்.

இப்போது ஜூன் இருபதாம் தேதி கோவா செல்கிறேன். எந்த வேலையும் இல்லாமல் ஓய்வெடுக்கச் செல்கிறேன். அதுவும் ஒரு வாரம். இருபத்தாறாம் தேதி மாலை கோவாவிலிருந்து பெங்களூர் செல்கிறேன். அங்கே முப்பதாம் தேதி வரை இருப்பேன். பெங்களூரில்தான் வேலை இருக்கிறது. ஐந்து தினங்கள் அங்கே தங்கியிருந்து ஸ்ரீயுடன் சேர்ந்து Anatomy of Dissonanceஐ எழுத வேண்டும். தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு நேரமிருக்குமா என்று தெரியவில்லை. நேரம் இல்லையென்றால், வழக்கம்போல் கவிதை எழுத வேண்டியதுதான்.

ஒரு நண்பர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தார். எனது இனிய நண்பர். எங்கேயும் நாங்கள் அரை மணி நேரத்துக்கு மேல் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை திட்டம் போட்டும் கடைசி நேரத்தில் என்னால் போக முடியாமல் போய் விட்டது. இப்போது ஓரிரு நாட்களாவது கோவா வருகிறீர்களா என்று நண்பருக்கு ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன். பதிலே இல்லை. ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. ஐந்து நிமிடத்தில் அவர் அழைத்தார். பொதுவாக நான் எடுக்க மாட்டேன். ஆனால் இப்போது விளையாட முடியாது என்பதால் எடுத்து விட்டேன். விஷயத்தைச் சொன்னேன். “என் மனைவியிடமும் குழந்தைகளிடமும் அனுமதி வாங்க வேண்டுமே?” என இழுத்தார். சரி, செய்யுங்கள் என்று விட்டு விட்டேன்.

நண்பரின் வயது ஐம்பது. இது போன்ற குடும்ப அடிமைகள் என்னைச் சந்திக்க கோவா வர வேண்டாம். இன்னும் இதுபோல் யாரெல்லாம் வர வேண்டாம் என்று சொல்கிறேன், கேளுங்கள்.

சில வாசகர் வட்ட நண்பர்கள். மாத ஊதியம் இரண்டு லட்சத்திலிருந்து ஐந்து வரை. எனக்கு பியர் வாங்கிக் கொடுத்து விட்டு, “நீங்கள் எனக்கு 450 ரூ கொடுக்க வேண்டும்” என்று கணக்கு காட்டுகிறார்கள். அது என்னய்யா அம்பது ரூபாய் என்று கேட்டால் ”அது வந்து, நீங்களும் அராத்துவும் நானும் ஆட்டோவில் வந்தோம் இல்லையா? 150 ரூவா ஆச்சு, ஆளுக்கு அம்பது ரூபா” என்கிறார்கள். ஏன் சீனி, இது போன்ற தறுதலைகளை நம் பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறோம்? எல்லாவற்றையும் எளிதாகக் கையாளும் நீங்கள் இம்மாதிரித் தறுதலைகளுக்கு ஒரு பாடம் புகட்டக் கூடாதா?

நான் ஒன்றும் அடுத்தவர் காசைச் சுரண்டுபவன் அல்ல. யாரேனும் வைன் வாங்கி வந்தால் அதற்குரிய பணத்தைக் கொடுத்து விடுவேன். வேண்டாம், அது கிஃப்ட் என்று சொன்னால் மட்டுமே சும்மா இருப்பேன்.

இப்படி ஆட்டோவுக்குக் கணக்குப் பார்க்கும் அன்பர்களும் கோவா வர வேண்டாம்.

இப்படி ஆட்டோவுக்குக் கணக்குப் பார்க்கும் அன்பர்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. ஒரு தெரப்பிஸ்டிடம் ஒரு மணி நேரம் ஆலோசனை செய்தால் 3000 ரூ. கட்டணம். ஆனால் நான் ஐம்பது ஆண்டுகளாகப் படித்ததை உங்களுக்குத் தருகிறேன். அதன் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் உங்களுக்குக் கற்பித்த இலக்கியத்தையும், இசையையும், தத்துவத்தையும் இந்த உலகில் வேறு எவராலும் கற்பிக்க முடியுமா? என் அளவுக்குப் படித்த ஒரு நபரை நீங்கள் சந்தித்தது உண்டா? அப்படிச் சந்தித்திருந்தால் அவர் உங்கள் தோள் மீது கைபோட்டு இப்படித்தான் கற்பிப்பாரா?

ஒரு கோடி கொட்டிக் கொடுத்தாலும் நான் உங்களுக்கு வழங்கும் ஞானத்துக்கு ஈடாகாது என்பதை முதலில் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னிடம் ஆட்டோ கட்டணத்தையெல்லாம் அடித்துப் பிடுங்குவதால்தான் நான் இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது.

புதிய நண்பர்கள் யாரும் வர வேண்டாம். பத்து ஆண்டுகள் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகியவர்களே நமக்குத் தண்ணி காட்டுகிறார்கள்.

மேலும், நீங்கள் வந்தால் உங்களோடு உங்கள் கேர்ள் ஃப்ரெண்ட், மாமன், மச்சான், தோழர்கள் என்று யாரையும் அழைத்து வராதீர்கள். சராசரிகளின் டார்ச்சரை என்னால் தாங்க முடியாது.

இப்போது நான் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் யாருக்கும் சீர் வரிசை செய்ய முடியாது. எனவே அவரவர் செலவை அவரவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நான் என் பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் வைனை எடுத்து நீங்கள் பாட்டுக்கு அடித்து நொறுக்கக் கூடாது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போதெல்லாம் நான் ரெமி மார்ட்டின் தான் குடிப்பது வழக்கம். ஒரு போத்தல் ஆறாயிரம். (இப்போது பத்தாயிரம் இருக்கும்) ஆனால் ஆறாயிரம் கொடுத்தாலும் கிடைக்காது என்பதால் என் பையில் எப்போதும் ஒரு ரெமி மார்ட்டின் போத்தல் இருக்கும். நண்பர்களுடன் குடித்துக்கொண்டிருந்தேன். பாஸ்டனிலிருந்து ஒரு நண்பர் அப்போது அங்கே நுழைந்தார். அவர் கையில் மது இல்லை. என் ரெமி மார்ட்டினைக் குடித்தார். நாளை வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நாளை இன்னும் வரவில்லை. பாஸ்டன் சென்றால் அவரிடம் வட்டியுடன் அந்தக் கடனை வசூலிக்க வேண்டும். இப்படி அமெரிக்காவிலிருந்து வந்தெல்லாம் என் சரக்கைக் காலி பண்ணிவிட்டு சாமானை ஆட்டிக்கொண்டு சென்று விடுகிறார்கள். அதனால் எக்காரணம் கொண்டும் என் வைனை யாரும் தொடக் கூடாது. இப்போது பாஸ்டன் என்று எழுதியிருக்கிறேன். இனிமேல் அப்படி யாரும் செய்தால் பெயர் புகைப்படத்தோடு எழுதுவேன். பெண்களுக்கும் இதில் விலக்கு இல்லை என்பதைத் தீர்மானத்தோடு சொல்லி வைக்கிறேன்.

இத்தனைக்கும் மேல் வர விரும்புவோர் எனக்கு வாட்ஸப் பண்ணவும். என் தொலைபேசி எண் இல்லாதவர்கள் இதைப் படித்து விட்டு அப்படியே கடந்து சென்று விடுங்கள்.

கோவா இப்போது வறட்சியாக இருக்கும். மழையும் இருக்காது. பயணிகள் வரும் பருவமும் இல்லை. நண்பர் ஒருத்தர் ஜூன் 22ஆம் தேதி பிறந்து வைத்திருக்கிறார். அவர் பிறந்த நாளைக் கொண்டாடத்தான் அத்தனை தூரம் செல்கிறேன். ஏன் எனக்கு வேண்டியவரெல்லாம் மே, ஜூனில் பிறந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னைப் போல் டிஸம்பரில் பிறந்திருக்கக் கூடாதா? எத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்கும்?