நிர்வாண சத்கமும் மோகமுள்ளும்…

2015-இல் எழுதிய பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது இப்பகுதியைக் காண நேர்ந்தது.  புத்தகம் வெளிவரும் முன் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.  நிர்வாண சத்கம் மொழிபெயர்ப்பு அடியேனுடையது.

தி. ஜானகிராமனின் உலகையும் மனோதர்மத்தையும் புரிந்துகொள்ள ஒரு திறப்பாக இருப்பது, சேதுபதி அருணாசலத்தின் கட்டுரை. இயற்கையையும் இசையையும் ஒன்றாகவே பார்த்தார் தி.ஜா. இதுதான் அந்தத் திறப்பு. இதன் வழியே தி.ஜா.வின் உலகில் நுழைந்தால், இந்திய மண்ணில் உதித்த ஞானிகள் கண்ட தரிசனத்தை நாமும் காணலாம். தி.ஜா.வைப் படித்தவுடனே நான் ஆதி சங்கரரின் கவிதைகளைப் படித்தேன். ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அதனாலேயே நாத்திகர்கள் அவரை வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால், அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். முக்கியமாக, ‘நிர்வாண சத்கம்’. (சதகம் என்பது நூறு பாடல்கள். உ-ம். பர்த்ருஹரியின் சதகங்கள்.)

நிர்வாண சத்கம், வெறும் ஆறே பாடல்கள்தான். ஆனால், அந்த ஆறு பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி.

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்,

ந-ச ஷ்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,

ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:

ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோஷ:

ந-வாக் பாணி பாதம், ந- சோபஸ்த பாயு:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹள,

மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:

ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!

ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:

அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:

பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா

ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

 

அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,

விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்

ந-ச சங்கதம் நைவ, முக்திர் ந-மேய

சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

***

நான் மனம் அல்ல புத்தியும் அல்ல சித்தமும் அல்ல

நான் செவி அல்ல நாக்கு அல்ல நாசி அல்ல கண் அல்ல

வானும் அல்ல பூமியும் அல்ல

ஒளியும் அல்ல வளியும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

நான் பிராணனும் அல்ல பஞ்ச வாயுவும் அல்ல

ஏழு தாதுக்களும் அல்ல பஞ்ச கோஷமும் அல்ல

பேச்சும் அல்ல கைகால்களும் அல்ல செயல்புலன்களும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

எனக்கு வெறுப்பு இல்லை விருப்பமும் இல்லை

பேராசையும் இல்லை மோகமும் இல்லை

கர்வமும் இல்லை பொறாமையும் இல்லை

அறம் பொருள் இன்பம் வீடு எதுவுமில்லை

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

எனக்குப் புண்யமும் இல்லை பாவமும் இல்லை

சௌக்யமும் இல்லை துக்கமும் இல்லை

(எனக்கு) மந்திரம் இல்லை தீர்த்த ஸ்தலங்கள் இல்லை வேள்விகளும் இல்லை

நான் துய்ப்பவனும் அல்ல துய்க்கப்படுபவனும் அல்ல

துய்ப்பும் அல்ல

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

எனக்கு மரணம் இல்லை மரண பயமும் இல்லை

சாதியில்லை பேதமில்லை பிதா இல்லை மாதா இல்லை ஜன்மமும் இல்லை

உற்றம் சுற்றம் குரு சிஷ்யன் யாரும் இல்லை

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

 

நான் குணபேதம் இல்லாதவன் எந்த ரூபமும் இல்லாதவன்

எங்கெங்கும் எப்போதும் எல்லா புலன்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன்

எனக்கு பந்தமும் இல்லை முக்தியும் இல்லை நான் அளக்க முடியாதவன்

சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்

***

எனக்கு சம்ஸ்கிருதம் படிக்க மட்டுமே தெரியும். அர்த்தத்துக்கு, அகராதிகளையும் பேராசிரியர்களையும் நாடுவேன். ‘நிர்வாண சத்கம்’ என்ற ஆதி சங்கரரின் இந்தப் பாடல், இணைய தளங்களில் பல பிழைகளுடன் காணக் கிடைக்கிறது. பலரும், சதகம் என்றே எழுதுகின்றனர். சதகம் என்றால் நூறு. சத்கம் – ஆறு.

நிர்வாண சத்கம் பாடலுக்கு பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக்கொண்டு போகலாம். சில வார்த்தைகளுக்கு மட்டும் சுருக்கமான விளக்கம் தருகிறேன்.

பஞ்ச வாயு: பிராண, அபான, வ்யான, உதான, சமான வாயு.

பஞ்ச கோஷம்: கோஷம் என்றால் sheath. அன்னமய கோஷம், பிராணமய கோஷம், மனோமய கோஷம், விஞ்ஞானமய கோஷம், ஆனந்தமய கோஷம். உணவு, உயிர், மனம், அறிவு, ஆனந்தம்.

சிதானந்த ரூபம் சிவோஹம் என்ற வார்த்தைகளை, இந்துக் கடவுளான சிவன் என்று புரிந்துகொள்ளக்கூடாது. மதம், சாதி, ரூபம், அரூபம், ஜனனம், மரணம் என்று எல்லா பேதங்களையும் கடந்த பரவசத்தில், கவியின் சந்நத நிலையில் நின்று பாடுகிறார் சங்கரர். சிதானந்த ரூபம் என்பதை இந்தப் பாடலின் முழுமையான பொருளில், ஏகத்துவத்தை உணர்வதன் மூலமாக நமக்குள் அனுபவமாகும் pure consciousness, bliss என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். சிவோஹம் என்பது நான் (சிவன்) அவன் என்பதாகும். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில், மன்ஸூர் அல்ஹலாஜ் என்ற ஒரு சூஃபி கவிஞர் இருந்தார். அவருடைய புகழ்பெற்ற குறுங்கவிதை ஒன்று இது:

என் இதயத்தின் கண்களால்

கடவுளைக் கண்டேன்

நீ யார் என்றேன்

நீதான் நான் என்றான்.

அவருடைய இன்னொரு புகழ்பெற்ற வாசகம், ‘அன-ல் ஹக்’. இதன் பொருள், ‘நானே உண்மை’. ஆனால், ஆனால், இறைவனின் 99 பெயர்களில் உண்மை என்பதும் ஒன்று என்பதால், அல்ஹலாஜ், “நானே இறைவன்,” என்று சொல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டு, ஆட்சியாளர்கள் அவரை 11 ஆண்டுகள் சிறையில் தள்ளினார்கள். சிறைத் தண்டனைக்குப் பிறகு, கி.பி. 922-இல் பொதுமக்கள் முன்னிலையில் அல்ஹலாஜ் கொல்லப்பட்டார். எல்லா மதங்களிலும் கவிகளின் குரல் ஒன்றேபோல் இருக்கிறது என்பதற்கு அல்ஹலாஜ் மற்றுமொரு உதாரணம்.

பிரபஞ்சத்தையே நம்முடைய பிரக்ஞையின் விரிவாகவும், பிரபஞ்ச கானத்தின் ஒரு துளியே நாம் எனவும் உணரும் ஏகத்துவ மனோலயத்தைப் பெற்றுவிட்டோம் எனில், ஆதி சங்கரரின் பரவசம் நமக்கும் சாத்தியமாகும். ‘மோகமுள்’ளைப் படிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு அந்தப் பரவசம் கிட்டும்.

***

ஆதி சங்கரரின் ‘நிர்வாண சத்கம்’ மொழிபெயர்ப்பில், சம்ஸ்கிருத பேராசிரியை டாக்டர் சுபஸ்ரீ செய்த உதவி மிகவும் பெரியது. ஒரு நாள் முழுவதும், நான் கேட்ட சந்தேகங்களையெல்லாம் பொறுமையாக விளக்கினார். மூன்றாவது பாடலில், தமிழில் சொல்வதுபோல், “எனக்கு விருப்பமும் இல்லை; வெறுப்பும் இல்லை,” என்று எழுதினேன். அதை சுபஸ்ரீ திருத்தினார். சம்ஸ்கிருதத்திலும் ‘ராகௌ த்வேஷம்’ என்றுதான் சொல்வார்கள். ஆனால், சங்கரர் அதை மாற்றி ‘ந-மே த்வேஷ ராகௌ’ என்று பாடியிருப்பதால், அதற்குக் காரணம் இருக்க வேண்டும் என்றார். பிறகே, வெறுப்பு விருப்பு என்று மாற்றினேன். இப்படிப் பல நுணுக்கங்கள். கடைசியாக ஒரு வார்த்தையை முழுசாக விட்டுவிட்டேன். ஆறாவது பாடலில் ‘ந மேய’ என்று வருகிறது அல்லவா? அதை, எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் விட்டுவிட்டார்கள்.

 

(ந மேய: அளக்க முடியாதவன்.)

 

இதுபற்றி சுபஸ்ரீ, தன் தாயார், ‘அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பால்’ என்று சொல்வார்கள் என்றார்.

 

இந்த வரி, ஔவையார் பாடிய விநாயகர் அகவலில் வருகிறது:

 

அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி