ஒரு பிரபல பத்திரிகையின் அட்டையில் ஒரு பிரபல நடிகரின் புகைப்படம் இருந்தது. அவர் அணிந்திருந்த சட்டையில் மொத்தம் ஏழு பொத்தான்கள் இருந்தன. பொதுவாக நாம் (ஆணும் பெண்ணும்) மேல் பொத்தானைப் போடுவதில்லை. டை கட்டினால் மட்டும்தான் அதைப் போடுவது. ஆகவே அதை விடுங்கள். அந்த நடிகரும் மேலே பொத்தான் போடவில்லை. மெத்த சரி. ஆனால் கீழேயிருந்து இரண்டாவது பொத்தானையும் போடவில்லை என்பதுதான் கோராமை. அது மட்டும் டொய்ங் என்று வெற்றிடமாகத் தெரிகிறது. இப்படி நாம் பல சமயங்களில் பேண்ட் ஸிப்பைக் கூட போட மறந்து விடுவோம். ஆனால் அப்படியே ஐந்து லட்சம் பேர் படிக்கும் பத்திரிகை அட்டைக்கு போஸ் கொடுப்போமா? புகைப்படக் கலைஞரும் கவனிக்கவில்லை. லே அவ்ட் ஆர்ட்டிஸ்டும் கவனிக்கவில்லை. இனிமேல் ஸிப்பைப் போடாமல் விட்டால் கூட அப்படியே புகைப்படம் வரும் போல் இருக்கிறது. சமூகம் எங்கியோ போய்க்கிட்டிருக்கு. நான் மட்டும்தான் ஓரத்தில் நின்று கத்திக் கொண்டிருக்கிறேன்.